ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Thursday, May 21, 2009

இறைவன் இருக்கின்றாரா - 1



இறைவன் இருக்கின்றாரா......... (பகுதி - 1)

இது இன்று பலருடைய கேள்வி. இறைவன் இருக்கின்றாரா, இருந்தால் எனக்கு மட்டும் ஏன் துன்பம் மேல் துன்பம் வருகின்றது, இன்று நல்லோர் துன்பப்பட தீயோர் நன்றாக வாழ்கின்றனரே ஏன்? இப்படியாகக் கேள்விகள் பல. இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் பக்தி மிகுந்தவர்கள் கூட சில வேளைகளில் தடுமாறி விடுகின்றனர். ஏன் இத்தனை கேள்விகள், தடுமாற்றங்கள்?

இறைவன் இருக்கின்றாரா...

ஆம், நிச்சயமாக இருக்கின்றார். இதனை ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர் ஒரு எளிய உதாரணத்தால் விளக்குகின்றார். இரவில் வானில் நாம் பல நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம். ஆனால் பகலில் அவை சூரியனது ஒளியால் நமக்குத் தெரிவதில்லை. ஆக பகலில் நாம் நட்சத்திரங்களைப் பார்க்காததால் நட்சத்திரங்களே இல்லை எனக் கூறிவிடமுடியுமா?. பகலிலும் அவை அதே வானில்தான் இருக்கின்றன, ஆனால் நம்மால்தான் பார்க்கமுடிவதில்லை. எனவே நாம் நட்சத்திரங்களே இல்லை எனக் கூறமுடியாது. அப்படிக் கூறினால் அது நமது அறியாமையே தவிர வேறெதுவும் இல்லை.

ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற நாடறிந்த பக்திமான்கள் இறைவனைக் கண்டவர்கள். ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர் அன்னை ஜெகன்மாதாவையும், இறைதூதர் அல்லாவையும், இறைதூதர் இயேசுவையும் கண்டவர். விவேகானந்தர் கூட அன்னை ஜெகன்மாதாவைக் கண்டவர்தான். இவர்கள் கண்ட தெய்வங்கள் எல்லாம் வெறும் மாயையா?. உதாரணத்திற்காகத்தான் நாமெல்லோரும் அறிந்த இவ்விருவரையும் கூறினேன். இன்னும் எத்தனையோ சாதுக்களும், துறவிகளும் இறைவனை நேரில் கண்டுள்ளார்கள். அவர்கள் கண்டதும் வெறும் மாயையா?. இல்லை, அவர்கள் மிகுந்த சிரத்தையெடுத்து பல முயற்சிகள் செய்து இறைவனைக் கண்டார்கள்.

நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் எப்படி இறைவனைப் பார்க்க முடியும். மகான்கள் செய்த முயற்சி போல் எந்த முயற்சியும் செய்யாது இருந்து விட்டு, இறைவன் இல்லை என்று கூறுதல், நட்சத்திரம் இல்லை என்று கூறுவது போலத்தான்.

சாதுக்கள், துறவிகள் மட்டுமல்ல புகழ்பெற்ற விஞ்ஞானிகள் கூட இறைவன் இருக்கிறார் என்று கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மாபெரும் சக்தி உண்டெனக் கூறியுள்ளார்கள். அந்த மாபெரும் சக்திதான் நாம் வணங்கும் இறைவன். இறைவனால்தான் இந்தப் பிரபஞ்சமே ஒரு ஒழுங்கில் இயங்குகின்றது. இறைவனது சக்தி இல்லையேல் இந்த ஒழுங்கு இருக்குமா?.

எந்த ஒரு பொருளினதும் தொடக்கத்தினையும் ஆராய்ந்தால் அது அந்த இறைவனது சக்தியை நோக்கியே செல்லும். உதாரணமாக ஒரு மரத்தின் விதையினை எடுத்துக்கொள்வோம். ஏதாவது ஒரு தாய்மரத்தில் இருந்து அந்த விதை வந்திருக்கும். அந்த விதையினுள் ஒரு மரம் உருவாவதற்கான அனைத்து மூலக்கூறுகளுமே இருக்கும். சரியான சந்தர்ப்பம் உருவாகும்போது அந்த விதை முளை விட்டு, சிறு தாவரமாகிப் பின்னர் பெரிய மரமாக மாறுகின்றது. ஒரு விதையினுள் இத்தனை சூட்சுமங்களை வைத்தது யார்?. வைத்தவன் அந்த இறைவன். நம்மால் இப்படி ஒரு விதையினை உருவாக்கமுடியுமா?. முடியாது, ஏற்கனெவே இருக்கும் விதைகளைக் கலந்து ஒரு புது விதையினை வேண்டுமானால் உருவாக்கலாம். ஆனால் நாம் உருவாக்கும் புது விதையின் ஆதாரம், இறைவன் படைத்த அந்தப் பழைய விதைதான். இதைத்தான் நம் முன்னோர்கள் "அவனின்றி ஓர் அணுவும் அசையாது " என்றார்கள்.

இங்கு நாம் கண்டுபிடிக்கும் பொருட்கள் அத்தனையுமே ஏற்கனவே இங்கு இருப்பவைதான். ஏற்கனவே இங்கு இருக்கும் மூலக்கூறுகளை விதம் விதமாகக் கலந்து புதிய பொருட்களை உருவாக்குகிறார்கள். நாமே முற்றுமுழுதாக ஒரு பொருளை உருவாக்கிவிடுவதில்லை. நம்மால் ஒரு மூலக்கூறினைக் கூட உருவாக்க முடியாதுள்ளபோது, இத்தனை மூலக்கூறுகளையும் படைத்தது யார்?. அதுதான் இறைவன்.

முடிவாக, இறைவன் அன்றும் இன்றும் என்றும் உள்ளவர். இறைவன் மேல் முழுநம்பிக்கையோடு அவனைக் காணமுயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் அவனைக் காண்பீர்கள். இதை நான் கூறவில்லை. நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பகுதி : இறைவன் இருக்கின்றாரா...(பகுதி-2)

search tags : God, Iraivan, Article, கட்டுரைகள், இறைவன், கடவுள்


2 comments:

கோவி.கண்ணன் said...

//இங்கு நாம் கண்டுபிடிக்கும் பொருட்கள் அத்தனையுமே ஏற்கனவே இங்கு இருப்பவைதான். ஏற்கனவே இங்கு இருக்கும் மூலக்கூறுகளை விதம் விதமாகக் கலந்து புதிய பொருட்களை உருவாக்குகிறார்கள். நாமே முற்றுமுழுதாக ஒரு பொருளை உருவாக்கிவிடுவதில்லை. //

இதுவரை சரி,

//நம்மால் ஒரு மூலக்கூறினைக் கூட உருவாக்க முடியாதுள்ளபோது, இத்தனை மூலக்கூறுகளையும் படைத்தது யார்?. அதுதான் இறைவன்.//

மூலத்துக்கு மூலம் இருக்க வேண்டும் என்பதற்கு எதும் அழுத்தமான காரணம் இருக்கிறதா ? அனைத்தும் எப்போதும் இருந்திருக்கும் என்று நினைப்பதற்கு என்ன தடை ? நம் அறிவியல் / வரலாறு காலம் வெறும் 3000 ஆண்டுகள் தானே ? அதற்கும் முன்பு அல்லது எப்போதுமே உயிரனம் இருந்ததில்லை என்று எப்படி நினைக்கிறீரகள்.

இராமகிருஷ்ணர் துவைதி, விவேகந்தர் அத்வைதி அவர் ஜெகன்மாதாவைக் கண்டதாக எங்கே சொல்லி இருக்கிறார் ? அத்வைதிகள் சடப் பொருள் / உருவ வழிபாட்டின் மீது நம்பிக்கை அற்றவர்கள்.

அடியார் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன்....

//மூலத்துக்கு மூலம் இருக்க வேண்டும் என்பதற்கு எதும் அழுத்தமான காரணம் இருக்கிறதா ?//

எந்தவொரு தொடக்கத்திற்கும் ஆரம்பப்புள்ளி வேண்டுமல்லவா...., அது போல எந்த மூலத்திற்கும் ஒரு முதன்மையான மூலம் வேண்டுமல்லவா...

//அனைத்தும் எப்போதும் இருந்திருக்கும் என்று நினைப்பதற்கு என்ன தடை ? நம் அறிவியல்
வரலாறு காலம் வெறும் 3000 ஆண்டுகள் தானே ? //

அதேதான் இங்குள்ள அனைத்துமே எப்போதும் இங்கிருப்பவைதான், நாம் அவற்றை தற்போதுதான் அறிந்துகொள்கின்றோம்,- ஒரு குழந்தை வளரும்போது எப்படி தன்னைச் சூழ இருப்பவற்றை அறிந்துகொள்கின்றதோ அப்படி நாமும் வளர வளர நம்மைச் சூழ இருப்பவற்றை அறிந்து கொள்கின்றோம்....

அதற்கும் முன்பு அல்லது எப்போதுமே உயிரனம் இருந்ததில்லை என்று எப்படி நினைக்கிறீரகள்//

நான் அப்படிக் கூறவில்லையே...., எத்தனை யுகங்கள் மாறிவிட்டன, யுகங்களில் நடந்தவை என புராணங்கள் கூறுகின்றன, அப்படி இருக்கும் போது இதற்குமுன் உயிரினம் இருந்ததில்லை என எப்படிக் கூறமுடியும்....

என்னுடைய கருத்து என்னவெனில்....ஏதோ ஒரு மூலத்தில் இருந்துதான் [அது எத்தனை வருடங்களுக்கு முன்னராக இருந்தாலும்] அனைத்துமே தோன்றியிருக்கமுடியும்... அந்த ஆதிமூலமான பொருளை யார் தோற்றுவித்திருக்கமுடியும்?....

//விவேகந்தர் அத்வைதி அவர் ஜெகன்மாதாவைக் கண்டதாக எங்கே சொல்லி இருக்கிறார் ? //

இராமகிருஷ்ணபரஹம்ஸரை விவேகானந்தர் சந்தித்த ஆரம்பகாலத்தில், விவேகானந்தர் இறைவனை உங்களால் காட்டமுடியுமா என்று கேட்டார். அதற்கு இராமகிருஷ்ணர் இறைவனைக் காட்டினார் என்று கூறுவார்கள். ஒரு தடவை மட்டும் இது நிகழவில்லை. மறுமுறை தன் துன்பங்கள் விலக அன்னையைப் பிரார்த்திக்குமாறு பரமஹம்ஸரை விவேகானந்தர் கேட்டுக்கொண்டார், அதற்கு நீயே கேட்டுக்கொள் என்று பரமஹம்ஸர் பதிலளித்தார். விவேகானந்தர் அன்னையைக் கண்டதும் தான் கேட்கவந்தவற்றை மறந்து நின்றார்.
--- இவ்வாறு ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதங்களில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin