ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-
Showing posts with label விரதங்கள். Show all posts
Showing posts with label விரதங்கள். Show all posts

Wednesday, July 1, 2009

ஏகாதசி விரதம்



ஏகாதசி விரதம்


வைஷ்ணவ விரதங்களுள் மிக விசேஷமான இவ்விரதத்தை ஆறு வயது முதல் அறுபது வயது வரையிலான சகலரும் கடைப்பிடிக்க வேண்டுமென்பது பகவான் கட்டளையென்று வைஷ்ணவர்கள் கூறுவர். இதனை எட்டு வயதிலிருந்து எண்பது வயதுவரை என்ரும் சிலர் கூறுவர்.

"கங்கையைவிடச் சிறந்த தீர்த்தமுமில்லை, விஷ்ணுவைவிட உயர்ந்த தேவரில்லை, தாயிற் சிறந்த கோயிலுமில்லை, காயத்திரியைவிட உயர்ந்த மந்திரமில்லை, ஏகாதசியைவிடச் சிறந்த விரதமுமில்லை" என்று வைஷ்ணவ புராணங்கள் உரைக்கின்றன.

ஏகாதசி விரதத்தைப் பற்றி பவிஷ்யோத்தர புராணத்திலும், பத்மபுராணத்திலும் விபரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பட்சத்துக்கு ஒவ்வொரு ஏகாதசியாக, அதாவது அமாவாசைக்குப் பின்வரும் பதினோராம் நாள், பௌர்ணமிக்குப் பின்வரும் பதினோராம் நாள் என இரு ஏகாதசிகள் ஒரு மாதத்தில் வரும். இதைவிட மேலதிகமாக வருகின்ற ஒரு ஏகாதசியையும் சேர்த்து ஒரு வருடத்தில் இருபத்தைந்து ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

அவை :

1. உற்பத்தி ஏகாதசி : மார்கழித் தேய்பிறை

2. மோஷ ஏகாதசி (பெரிய, வைகுண்ட ஏகாதசி) : மார்கழி வளர்பிறை

3. ஸபலா ஏகாதசி : தை மாதத் தேய்பிறை

4. புத்ரதா ஏகாதசி : தை மாத வளர்பிறை

5. ஷட்திலா ஏகாதசி : மாசி மாதத் தேய்பிறை

6. ஜயா ஏகாதசி : மாசி மாத வளர்பிறை

7. விஜய ஏகாதசி : பங்குனி மாதத் தேய்பிறை

8. ஆமலகீ ஏகாதசி : பங்குனி மாத வளர்பிறை

9. பாப மோசனிகா ஏகாதசி : சித்திரை மாதத் தேய்பிறை

10. காமதா ஏகாதசி : சித்திரை மாத வளர்பிறை

11. வரூதினி ஏகாதசி : வைகாசி மாதத் தேய்பிறை

12. மோகினி ஏகாதசி : வைகாசி மாத வளர்பிறை

13. அபரா ஏகாதசி : ஆனி மாதத் தேய்பிறை

14. நிர்ஜலா ஏகாதசி : ஆனி மாத வளர்பிறை

15. யோகிநீ ஏகாதசி : ஆடி மாதத் தேய்பிறை

16. சயன ஏகாதசி : ஆடி மாத வளர்பிறை

17. காமிகா ஏகாதசி : ஆவணி மாதத் தேய்பிறை

18. புத்ரதா ஏகாதசி : ஆவணி மாத வளர்பிறை

19. அஜா ஏகாதசி : புரட்டாதி மாதத் தேய்பிறை

20. பத்மநாபா ஏகாதசி : புரட்டாதி மாத வளர்பிறை

21. இந்திரா ஏகாதசி : ஐப்பசி மாதத் தேய்பிறை

22. பாபாங்குசா ஏகாதசி : ஐப்பசி மாத வளர்பிறை

23. ரமா ஏகாதசி : கார்த்திகை மாதத் தேய்பிறை

24. ப்ரபோதினி ஏகாதசி ; கார்த்திகை மாத வளர்பிறை

25, கமலா ஏகாதசி : மேலதிக ஏகாதசி

மேலதிக ஏகாதசி வரும் மாதம் புருஷோத்தம மாதம் எனப்படும்.

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியே இவற்றுள் விசேஷமானது. இதனால் இது மோஷ ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, பெரிய ஏகாதசி என்ற பெயர்களால் குறிக்கப்படுகின்றது. ஏகாத்சி விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் இந்த வைகுண்ட ஏகாதசியில்தான் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையில் கூறியிருக்கின்றார். இம்மாதம் மஹா விஷ்ணுவிற்குப் பிரீதியானது. மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளும் மிக விசேஷமான தினங்களாகும். வைஷ்ணவத் தலங்களில் அடியார்கள் கூடி விசேஷ வழிபாடுகளை நிகழ்த்துவர்.

ஏகாதசி உற்பத்தியாகியது மார்கழி மாதத் தேய்பிறை ஏகாதசியில்தான். இதனால்தான் அதனை உற்பத்தி ஏகாதசி என்கிறார்கள். ஆனால், வளர்பிறை ஏகாதசியின் சிறப்பினால் அதையே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பிப்பதுடன் விரத ஆரம்பத்திற்கும் கொள்கின்றனர். இந்த விபரங்கள் பத்மபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஏகாதசி விரத நாளில் தசமி திதியின் சம்பந்தம் இருக்கக்கூடாது. காலையில் தசமியிருந்தால் மாறுநாள் துவாதசியில் விரதமிருந்து திரயோதசியில் பாரணை செய்யலாம். காலையில் ஏகாதசியும் நடுவில் துவாதசியும், இறுதியில் திரயோதசியும் இருப்பின் அது அதிவிசேஷமானது. இவ்வாறு ஏகாதசி தினத்தன்று காலையில் தசமியிருந்தால் அத்தினத்தை ஸ்மார்த்த ஏகாதசி எனவும் மறுநாளை வைஷ்ணவ ஏகாதசி எனவும் கூறுவர். ஏகாதசி விரதமனுஷ்டிப்போர் இவ்விருநாளில் வைஷ்ணவ ஏகாதசியையே கொள்ள வேண்டும். பிதிர்காரியம் முதலிய வேறு தேவைகளுக்கு ஸ்மார்த்த ஏகாதசியைக் கொள்ளலாம்.

ஏகாதசி விரதம் கிருஷ்ணபரமாத்மாவினால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையுடையது. ஆயுள் விருத்தியையும், அரோக்கியத்தையும், போக மோஷங்களையும் தருவது இவ்விரதம். இதனை அனுஷ்டிப்போர் நோய், வறுமை முதலியன நீங்கி வீரமும், கல்வியும், செல்வமும் பெற்று இகபரசுகமடைவர்.

முன்னர், முரன் என்ற அசுரன் தான் பெற்ற வரபலங்களினால் யாராலும் வெல்லப்படாமல் ஆணவத்தில் திரிந்தான். இவனால் ஏற்பட்ட துன்பங்களைத் தாங்கமுடியாமல் யாவரும் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். பாம்பணையில் அறிதுயில் கொண்டிருந்த மஹாவிஷ்ணுவின் தேகத்திலிருந்து அவரது அபூர்வ சக்தியானது பெண்ணுருவில் வெளிப்பட்டு வந்து அசுரனுடன் போரிட்டு அவனை அழித்தது. தேவர்கள் யாவரும் அந்த சக்தியை வழிபட்டு நின்றனர்.

தன்னை ஏகாதசி தேவியென்று அறிமுகம் செய்த அந்தச் சக்தி, தன்னை நினைத்து தனது திதியாகிய ஏகாதசியில் விரதமிருந்தால் எல்லா நலங்களும் கிடைக்கும் எனக் கூறி மறைந்தாள்.

கைடப தேசத்தில் கர்ணீக நகரில் முன்பொருசமயம் வறுமையால் வருந்திய ஒரு பிராமணத் தம்பதியருக்கு நாரதர் இந்த விரதத்தை உபதேசித்தார். அவர்களும் இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து சகல செல்வமும் பெற்று வாழ்ந்து முக்தியடைந்தனர். அதன்பின் இது பூமியில் நல்லோர் பலரால் அனுஷ்டித்து வரப்படுகின்றது. ருக்மாங்கதன், அம்பரீஷன் முதலியோரும் இவ்விரதம் இருந்து பலனடைந்தவர்களாவர்.

முன்னரே குறிப்பிட்டபடி மார்கழி மாதத்து வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். விரத நாளுக்கு முதல் நாளிலேயே ஒரு நேர உணவும், இந்திரிய நிக்ரகமும்(குடும்ப உறவு நீக்கம்) கடைப்பிடிக்க வேண்டும். (பொதுவாக உபவாச விரதங்கள் யாவற்றுக்கும் இவ்விதி பொருந்தும்). ஏகாதசியன்று முழுப்பட்டினியாக உபவாசமிருந்து இரவு முழுதும் நித்திரை விழிக்க வேண்டும். பாகவத புராணங்கள்ப் படித்தலும் கேட்டலும், பகவானின் நாமஜெபம், நாமபஜனை இவற்றில் ஈடுபடுவதும் இத்தினம் முழுவதும் செய்ய வேண்டிய காரியங்களாகும்.

வீட்டிலே பூஜை வழிபாடு செய்ய விரும்புவோர் முறைப்படி தானியங்களின் மேல் பத்மம் வரைந்து சந்தன பிம்பத்தில் பூமிதேவி நீளாதேவி சஹித மஹாவிஷ்ணுவை விரத சங்கல்பத்துடனும், பூர்வாங்க பூஜைகளுடனும் ஆவாகனம் செய்து பூஜை செய்யலாம். பூஜைக்கு வேண்டிய துளசியை முதல் நாளே எடுத்துவைக்க வேண்டும். ஏகாதசி நாளில் பறித்தல் ஆகாது. அவசியமேற்படின் இரண்டு இலைகளும், கதிருமாக எடுக்கலாம்.(விதிவிலக்கு)

மறுநாட்காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் முறை. பாரணையின் போது துளசியிலை, அகத்திக்கீரை, நெல்லிக்காய் முதலியவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது.

ஏகாதசியன்று தாம் உபவாசமிருத்தல் வேண்டும் என்பதோடு வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு விருந்தளித்தல் தவிர்க்கப்படுவதும் வேண்டும். பலர் ஏகாதசி நாளில் வீட்டில் சமையல் செய்வதேயில்லை.

இவ்விரதம் ஒரு வருடகாலம் கைக்கொள்ளப்பட வேண்டும். வருட முடிவில் விரதோத்யாபனம் செய்ய வேண்டும். தொடர்ந்து விரதமனுஷ்டிக்க விரும்புவோர் ஒவ்வொரு வருட முடிவிலும் விரத பூர்த்தி செய்வது நன்று. ஒருவருடத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிகளை மட்டும் அனுஷ்டிக்கும் வழக்கமும் உண்டு.


நன்றி : விரதங்கள், விழாக்கள் கைநூல்


search tags : Eakathasi Viratham, Viratham, ஏகாதசி விரதம், விரதம்

_*_*_*_

Wednesday, June 3, 2009

பிரதோஷ விரதம்




பிரதோஷ விரதம்


கந்தபுராணத்தில் சிறப்பித்துச் சொல்லப்படும் சிவ விரதங்களுள் பிரதோஷ விரதமும் ஒன்று. இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசித் திதியிலே அதாவது அமாவாசை, பௌர்ணமி இரண்டிற்கும் பிறகு வரும் பதின்மூன்றாவது நாளிலே இவ்விரதம் அநுஷ்டிக்கப்படுகிறது. சிவதருமோத்திரம், சிவரகசியம் முதலிய நூல்களிலும் இவ்விரதமகிமைக் கதைகள் காணப்படுகின்றன.

மாலைப்பொழுது என்னும் கருத்தையுடைய பிரதோஷம் என்ற சொல்லால் அழைக்கப்படும் இவ்விரத வழிபாடும் மாலை நேரத்திற்குரியதே. சூரிய அஸ்தமனத்துக்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும் அஸ்தமனத்துக்குப் பின் மூன்றேமுக்கால் நாழிகையுமாகச் சேர்ந்த ஏழரை நாழிகைப் பொழுது பிரதோஷ காலம் எனப்படும். அதாவது பிற்பகல் சுமார் நாலரை மணியிலிருந்து இரவு ஏழரை மணி வரையிலான மூன்று மணித்தியால காலமே பிரதோஷ காலமாகக் கொள்ளப்படும். இக்காலத்தில் சிவபிரானை விஷேஷமாக வழிபடுவதே இவ்விரதத்தின் முக்கியமான அம்சமாகும்.

முன்பு தேவர்கள் அசுரர்களோடு இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் அங்கிருந்து ஆலகால விஷம் தோன்றியது. தேவர்கள் யாவரும் அஞ்சியோடிய போது பரமசிவனார் அவர்கள் மீதும், சர்வலோக ஆன்மாக்கள் மீதும் கருணை கொண்டு அந்த ஆலகால விஷத்தைத் தாமே அருந்தித் தமது கண்டத்தில் நிறுத்தியருளினார். (இதனால் சிவபெருமான் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.) பின்னர் பயம் நீங்கிய தேவர்கள் இறைவனை வழிபட்டு மீண்டும் கடைந்த போது அமிர்தம் தோன்றியது.

அத்தருணம் அனைவரையும் மகிழ்விக்கும் வண்
ணம் எம் பெருமான் இடபதேவரின் கொம்புகளுக்கிடையில் நின்று திருநடனம் செய்தருளினார். வளர்பிறைத் திரயோதசியும், சனிக்கிழமையும் கூடிய ஒரு நன்னாளில்தான் இந்த வைபவம் நிகழ்ந்தது. இதனால் தான் சனிப்பிரதோஷ விரதம் மிக விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

ஆலகால விஷத்தை உட்கொண்டபின் அது ஜீவராசிகளை வருத்தாமலிருக்கும் பொருட்டு ஒரு கணநேரம் சிவபிரான் மௌனமாக இருந்தார். அப்போது தேவரும், முனிவரும் உணவருந்தாது பரமசிவனாரைப் பிரார்த்தித்து நி
ன்றனர். அந்தக் காலமே ஏகாதசியாகும்.

இதன் பின்னர் இறைவனின் அருளாணைப்படி திருப்பாற்கடலை மீண்டும் கடைந்தபோது அமிர்தம் தோன்றியது. அதனை அமரர் அருந்தினர். இக்காலமே துவாதசியாகும். இதன் பின் முன்னர் குறிப்பிட்டவாறு சிவபிரான் டமருகம் ஏந்தி நடனம் செய்யத் திருமால் குடமுழா என்ற வாத்தியத்தை முழக்கத் தேவேந்திரன் சுருதி சேர்த்து நிற்க
, தும்புருநாரதர்கள் இசைபாடக் கலைவாணி மகரவீணையை மீட்டிப் பாடத் திருமகளும் இணைந்து பாட நான்முகன் தாளம் போட, உமாதேவியாரும், தேவரும், முனிவரும் இந்தத் தாண்டவத்தை மகிழ்ச்சியுடன் தரிசித்து நின்றனர். இக் காலமே திரயோதசியாகும்.

இம் மூன்று திதிகளும் சேர்ந்த மூன்று நாட்கள் பரமசிவனாருக்கு மிகச் சிறிய அளவுள்ள பிரதோஷ காலமா
கும்.

கணவரை இழந்த பதிவிரதைப் பெண்ணொருத்தி தனது சொந்த மகனும், வளர்ப்பு மகனாகிய ஒரு அரசகுமாரனுமாகிய இரு புதல்வர்களுடன் வாழ வழி தெரியாது வருந்தி வறுமையில் உழன்றபோது சாண்டில்ய முனிவரால் உபதேசிக்கப்பட்டு மூவருமாக இப் பிரதோஷ விரதத்தைக் கைக்கொண்டனர். அதன்பிரகாரம் அந்தணகுமாரன் அறிவாற்றலும் பொருளும் பெற்றான். அரசகுமாரன் அரசாட்சியைப் பெற்றான் என்று புராணம் உ
ரைக்கும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் தரக்கூடிய இவ்விரதத்தை முனிவர்கள் பலரும் இந்திரனும் கைக்கொண்டு அரும்பேறுகள் பல பெற்றனர். கடன், வறுமை, நோய், துர்மரணம், பயம் இவற்றைப் போக்கவல்லது இது. முக்கியமாகப் புத்திர லாபம் தரவல்லது. புத்திரரை விரும்புவோர் இவ்விரதமிருப்பது வழக்கம்.

இவ்விரத நாளிலே நித்திய கர்மாநுஷ்டானங்கள் முடித்து பகல் முழுவதும் போசனம் இல்லாமல் இருந்து மாலை நாலரை மணிக்கு முன்னதாக ஸ்நானம் செய்து சாயம் சந்தியாவந்தனம், சிவபூஜை முதலியவற்றைச் செய்த பின் (மாலை நேரத்துக்குரிய நித்திய கர்மாநுஷ்டானங்கள்) வெள்ளை ஆடை தரித்துச் சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்து பிரதோஷ பூஜையைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சி
வாலயத்தில் பிரதஷிணம்(பிரதட்சணம்) செய்து வழிபடுவதற்கென்று சிறப்பான விதிமுறையொன்று ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ளது.





இடபதேவரை
முதலில் வணங்கி அங்கிருந்து இடமாகச் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்த பின் சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் இடபதேவரை வணங்கி வலமாகக் கோமுகைவரை சென்று மீண்டும் திரும்பி வந்து இடபதேவரை வணங்கித் திரும்பி வலமாகக் கோமுகைவரை சென்று (இத்தடவை இடபதேவரைத் தரிசிக்காமல் செல்ல வேண்டும்) மறுபடி அங்கிருந்து திரும்பி இடபதேவரைத் தரிசிக்காமல் இடமாகச் சென்று சண்டேஸ்வரரை வணங்கித் திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்து அவரது இரண்டு கொம்புகளின் நடுவே சிவலிங்கப்பெருமானைத் தரிசித்து பிரணவத்தோடு கூட "ஹர ஹர" என்று சொல்லி வணங்க வேண்டும். பிரதோஷ காலத்தில் கோமுகையைத் தாண்டக்கூடாது என்பதே முக்கிய விதியாகும். இந்தப் பிரதஷிண முறைக்குச் சோமசூத்திரப் பிரதஷிணம் என்று பெயர்.

இவ்வாறு ஆலய வழிபாடு செய்த பின் வீடு திரும்பிப் பிரதோஷ காலம் முடிந்த பிறகு (இரவு ஏழரை மணிக்கு மேல்) சிவனடியார்களுடன் போசனம் செய்ய வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சிவனுக்கும் நந்தியெம்பெருமானுக்கும் அன்ன நைவேத்தியத்துடன் காப்பரிசியும் நிவேதனம் செய்து அன்பர்களுக்கு வழங்க வேண்டும். காப்பரிசி என்பது பச்சரிசியையும் பயற்றம் பருப்பையும் நீரில் நன்கு நனைய வைத்து வடித்தெடுத்து அதற்குச் சர்க்கரையும் தேங்காய்ப்பூவும் சேர்த்துக் குழைத்துச் (உப்புச் சேராமல்) செய்வதாகும். இதனையே பிரதோஷ விரதத்துக்கு உணவாகக் கொள்ள வேண்டும். இது இயலாதவர்கள் சர்க்கரைச் சாதத்தை நிவேதனம் செய்து உண்ணலாம்.

பிரதோஷ காலத்தில் எவராயினும் என்ணெய் தேய்த்தல், குளித்தல், போசனம் செய்தல், தூங்குதல் முதலியன செய்தலாகாது. இவ்வேளையில் மந்திரஜபம், நூல் படித்தல் என்பனவும் செய்யாது மௌனமாக இறைவனைத் தியானிக்குமாறு புராணங்கள் கூறுகின்றன.

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை என்ற நான்கு மாதங்களுள் ஒன்றில் சனிக்கிழமையில் பிரதோஷம் வரும் நாளாகப் பார்த்து இவ்விரதம் ஆரம்பிக்கப்படவேண்டும். ஒரு வருட காலம் இந்தப் பிரதோஷ விரதத்தைக் கைக்கொண்ட பின் முறைப்படி விரதோத்யாபனம் செய்யலாம். விரும்பினால் தொடர்ந்து கைக்கொள்ளலாம். ஆனால் வருடா வருடம் விரத பூர்த்தியைச் செய்ய வேண்டும். 41, 55, 81, 97 என்ற எண்ணிக்கை வரும்வரை வளர்பிறைப் பிரதோஷம் மட்டும் அநுஷ்டிப்பார்கள் சிலர்.

இவ்விரதம் கைக்கொள்வோருக்கு கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் இவை யாவும் நீங்கி முக்தி சித்திக்கும் என்று ஆறுமுக நாவலரவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

" இரண நல்குர விரும்பவ மிரும்பசி யுரோகம்
அரணு றும்பயங் கிலேசங் கேதம்மவ மிருத்து
மரண வேதனை யிவையெலா மகற்றென வணங்கிப்
புராண நாதனைப் பிரதோடத்தில் போற்றிடத் தகுமால் " - கடம்பவன புராணம்.



search tags : Pirathosham, Pirathosam, Lord Shiva, Viratham, பிரதோஷம், பிரதோஷ விரதம், விரதம்.

-*-*-*-

Monday, May 25, 2009

விநாயகர் சதுர்த்தி விரதம்



விநாயக சதுர்த்தி


விநாயக விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம். இந்துக்கள் யாவரும் விரும்பி அநுஷ்டிக்கும் விரதம். விநாயகர் ஆலயங்களில் சிறப்பாகவும், ஏனைய ஆலயங்களில் பொதுவாகவும் இவ் விரதநாளிலே விசேஷ அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நிகழ்கின்றன. எனினும் இவ்விரதத்தினைப் பூஜை வழிபாடுகளுடன் இல்லங்களிலும் கைக்கொள்வது நன்று. விநாயகப்பெருமான் உற்பவமான தினம் இது என்பர்.

ஆவணிமாத வளர்பிறைச் சதுர்த்தித் திதியன்று இவ்விரதம் அநுஷ்டிக்கப்பட வேண்டும். மதியவேளையில் சதுர்த்தி நிற்றல் அவசியம்.

கந்தபுராணத்தில் சிறப்பித்துக் கூறப்படும் இந்த விரதமானது சூதமுனிவரால் பஞ்சபாண்டவருக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையை உடையது. துரியோதனனாதி கௌரவர்களின் கொடுமையினால் பாண்டவர்கள் வனவாசம் செய்ய நேர்கிறது. காட்டிலே மிகுந்த கஷ்டமும் மனவேதனையும் அடைந்திருக்கும் நிலையில் சூதமுனிவரை ஒருநாள் சந்திக்கின்றார்கள்.

அப்போது தருமர் தமது கஷ்டங்கள் நீங்கிச் சுகமாக வாழ வழிகேட்கிறார். அதற்கு வழியாக இந்த விநாயக சதுர்த்தி விரதத்தை உபதேசிக்கிறார் சூதமுனிவர். அது மட்டுமல்லாமல் இந்த விரதத்தை முன்பு அநுஷ்டித்துப் பயன்பெற்றவர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறார்.

தமயந்தி நளனை மீண்டும் அடைந்ததும், கிருஷ்ணர் ஜாம்பவதியையும் சியமந்தகமணியையும் பெற்றுக்கொண்டதும், இராமன் சீதையை மீட்டதும், இந்திரன் அசுரப்பகையை வென்றதும், பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததும் இந்த விரத மகிமையினால்தான் என்று விளக்கினார்.

இதனைக்கேட்ட பாண்டவரும் முறைப்படி விநாயக விரதத்தைக் காட்டிலேயே அநுஷ்டித்து உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர். இஷ்ட சித்திகளைப் பெற, நினைத்த காரியசித்தியைப் பெற விரும்புவோர் இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.

அதிகாலை துயிலெழுந்து நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடுபடவேண்டும். மத்தியானம் ஒரு பொழுது உண்ணலாம். நல்லெண்ணெய் சேர்க்கக்கூடாது என்பது விதி. இரவு பட்டினி இருக்க முடியாதவர்கள் பால்பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.

வீட்டிலே பூஜை வழிபாடுகளுடன் விரிவாக இந்த விரதமிருக்க விரும்புவோர் வீட்டிற்கு ஈசான திக்கில் பசும்சாணியால் மெழுகித் தூய்மையாக்கப்பட்டு வெள்ளைகட்டித் தயார் செய்யப்பட்ட ஓரிடத்தில் அல்லது பூஜை அறையிலே மாவிலை தோரணங்களாலும் சிறிய வாழைமரம் முதலியவற்றாலும் அலங்கரித்து அங்கு ஐந்து கும்பங்களை முறைப்படி ஸ்தாபித்து சித்த கணபதி, வித்தியா கணபதி, மோஷ கணபதி, மஹா கணபதி ஆகிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து பூஜைகளை நடத்தலாம்.

தத்தமக்குரிய புரோகிதரை அல்லது அருகிலுள்ள ஆலய அர்ச்சகரை அழைத்து இந்தப் பூஜையைச் செய்விக்கலாம். சங்கல்பத்துடன் ஆரம்பித்து பிராமண அநுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யபூஜை முதலிய பூர்வாங்கக் கிரியைகளிலிருந்து ஆவாஹனாதி சர்வோபசார பூஜைகளையும் செய்து தீபாராதனை நமஸ்காரங்களுடன் நிறைவு செய்யலாம்.

விசேஷ நிவேதனங்களாக அறுசுவை உணவும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் சொல்லப்பட்டிருக்கின்றன. நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத்துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை ஒவ்வொன்றிலும் இருபத்தொன்று என்ற எண்ணிக்கையில் படைத்து நிவேதனம் செய்ய வேண்டும். (வெள்ளரிப்பழத்தை இருபத்தொரு துண்டுகளாக நறுக்கி வைக்கலாம்)

விநாயக சதுர்த்தி பூஜையில் இன்னொரு முக்கிய அம்சம் இருபத்தொரு பத்திரம், இருபத்தொரு புஷ்பம், இருபத்தொரு அறுகம்புல் என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சித்தலாம். இறைவனை அவரது பலவித நாமங்களையும் சொல்லி ஓங்காரத்துடன் உச்சரித்து வணக்கம் செலுத்துவதே அர்ச்சனையாகும். ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் ஒவ்வொரு பத்திரம் அல்லது புஷ்பம் சமர்ப்பித்தல் மரபு.

இவ்வித விசேஷ அர்ச்சனைக்குரிய நாமங்களும் அவற்றுக்குரிய பத்திர புஷ்பங்களின் பெயர்களும், அங்கபூஜைக்குரிய நாமங்களும், அங்கங்களும்(ஒவ்வொரு நாமங்களையும் சொல்லி மூர்த்தியின் திருவுருவத்தில் அல்லது படத்தில் அந்தந்த நாமத்துக்குரிய அங்கங்களில் பூவினால் அர்ச்சித்தல் அங்கபூஜையாகும்). அவற்றைக் காண இங்கே சொடுக்குங்கள். (Click here). விநாயர் சதுர்த்திப் பூஜை மந்திரங்கள்.


மாத சதுர்த்தி விரதம் :

மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சச் சதுர்த்தி நாட்களும் விநாயகருக்குரிய விரத நாட்களே. சதுர்த்தி விரதம் எனப்படும் இந்த நாட்களிலும் விரதமிருப்பது மிக விசேஷமானதாகும். அவ்வாறு அநுஷ்டிக்க முடியாதவர்கள் விநாயக சதுர்த்தி எனப்படும் ஆவணிச் சதுர்த்தி நாளில் விரதமிருக்கலாம்.

மாதந்தோறும் விரதமிருக்க விரும்புவோர் ஆவணிச் சதுர்த்தியிலே பூஜை வழிபாடுகளுடன் சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து (இந்தக் காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள்வேன் என்று சங்கல்பம் பூண்டு) முறைப்படி தவறாமல் தொடர்ந்து கைக்கொள்ளவேண்டும். இருபத்தொரு வருடம் விரதமிருப்பது நன்று. இயலாதெனின் ஏழுவருடங்கள் அநுஷ்டிக்கலாம். அல்லது இருபத்தொன்றுக்குக் குறையாமல் மாத சதுர்த்தி விரதமிருந்து அதையடுத்துவரும் ஆவணிச் சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.


விரத உத்தியாபனம் :

குறிப்பிட்ட கால எல்லை முடிந்ததும் அதாவது தாம் கைக்கொள்வதாகக் கருதிய வருடம் நிறைவு பெற்றதும் முறைப்படி விரதத்தை முடித்து, விரதபலனைத் தருமாறு வேண்டுதல் செய்தலே விரதோத்யாபனமாகும்.

முன்பு கூறப்பட்ட விதமாக வீட்டிலே பூஜை வழிபாடுகள் செய்யும்போது தங்கம், வெள்ளி, செம்பு இவற்றில் ஏதாவதொரு உலோகத்தில் விநாயகர் திருவுருவத்தைச் செய்து வைத்து ஆவாகனம் செய்து பூஜை நடத்த வேண்டும். அன்று உபவாசமிருந்து மறுநாட்காலை புனர்பூஜையின் பின் (மீண்டும் பூஜை செய்தல்) உத்வாசனம் செய்து அர்ச்சகருக்குரிய தஷிணை தாம்பூலங்களுடன் உலோகப் பிரதிமையையும், கும்பப்பொருட்களையும், வேட்டி சால்வை முதலிய தானங்களையும் வழங்கி இதன்பின் மஹேஸ்வர பூஜை செய்து (சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல்) தாமும் காலை எட்டரை மணிக்கு முன்னதாகப் பாரணை செய்து விரத பூர்த்தி செய்யலாம்.

விரத உத்யாபன சமயத்தில் பூஜையை ஆரம்பிக்கும் போது "வ்ரதோத்யாபன காலே யதோக்தபல சித்யர்த்தம் விசேஷ பூஜாம் ஆசார்யமுகேன அஹம் அத்ய கரிஷ்யே " (விரதபூர்த்தி காலத்தில் சாஸ்திரத்தில் கூறியபடி விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சித்திக்க வேண்டுமெனக் கருதி இந்தப் பூஜையைச் செய்கிறேன்.) என்று சங்கல்பத்துடன் ஆரம்பித்து முடிவில் அர்ச்சகருக்குரிய தானம் வழங்கும் போது " ப்ரதிமாம் வஸ்த்ர சம்யுக்தாம் கும்போகரணைர்யுதாம், துப்யம் தாஸ்யாமி விப்ரேந்த்ர யதோக்த பலதோ பவ " (பிரதிமை, வஸ்திரங்கள், கும்பப்பொருட்கள் முதலிய தானங்களை மகிழ்ச்சியுடன் பிராமணோத்தமருக்கு வழங்குகிறேன், இவ்விரதத்திற்குச் சொல்லப்பட்ட பலன்கள் எனக்கு உண்டாகட்டும்.) என்று பிரார்த்திக்க வேண்டும்.

பூஜை முடிவில் கும்பத்தால் யஜமானுக்கு அபிஷேகம் செய்வித்தலும் சொல்லப்பட்டிருக்கிறது. உலோகப் பிரதிமை செய்வதற்கு வசதியில்லாதவர்கள் களிமண்ணால் செய்து வழிபட்டபின் அதனை நீர்நிலையில் விட்டு விடலாம்.

விரதோத்யாபன காலத்தில் இவ்வாறு வீட்டில் பூஜைகள் செய்ய வசதியில்லாதவர்கள் ஆலயத்துக்குச் சென்று அபிஷேகம், பூஜை, அர்ச்சனை, உற்சவம் முதலியன செய்வித்தபின் அல்லது குறைந்த பட்சம் விரதோத்யாபனத்துக்குரிய சங்கல்பத்துடன் சஹஸ்ர நாமார்ச்சனையாவது செய்து அர்ச்சகருக்குரிய தாம்பூல தஷிணைகள் தானங்கள் வழங்கி முன்கூறியவாறு விரதபலனைத் தருமாறு பிரார்த்தித்து விரத பூர்த்தி செய்யலாம்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : விநாயகர் சதுர்த்திப் பூஜை மந்திரங்கள்


நன்றி : விரதங்கள் கைநூல்

search tags : Vinayagar Sathurthi, Viratham, Vinayagar Viratham, விநாயகர் சதுர்த்தி, விநாயக விரதங்கள், விரதம், Sathurthi, சதுர்த்தி)

Thursday, February 19, 2009

மஹா சிவராத்திரி


இதோ இந்த ஆண்டிற்கான மஹாசிவராத்திரி விரதம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நல்ல நாளைப் பற்றித் தெரிந்து கொள்வோமா...

மஹாசிவராத்திரி என்றால் சிவனுக்கு மிகவும் உகந்த இராத்திரி எனப் பொருள்படும். சிவ விரதங்களிலாகட்டும் அல்லது மற்றைய விரதங்களிலாகட்டும் இச் சிவராத்திரி விரதத்திற்கு தனியிடமும் தனிச்சிறப்பும் உண்டு. சிவம் என்றால் வடமொழியில் இன்பம் எனப் பொருள் உண்டு. இராத்திரி என்றால் இரவு. ஆக சிவராத்திரிக்கு இன்பமயமான இரவு என்றும் பொருளுண்டு.

சிவராத்திரியில் சில வகைகள் உண்டு. மாத சிவராத்திரி என்ற பெயரில் மாதந்தோறும் சிவராத்திரி விரதங்கள் வருகின்றபோதும் இவற்றை அனுஷ்டிப்போர் மிகக் குறைவானவர்களே. மாதந்தோறும் தேய்பிறைச் சதுர்த்தசியிலே மாத சிவராத்திரியும், அமாவாசையும் சோமவாரமும் கூடிய தினத்தில் யோக சிவராத்திரியும் வரும். நாம் இப்போது மஹாசிவராத்திரியைப் பற்றிப் பார்க்கலாம்.

இம் மஹாசிவராத்திரி விரதமானது மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியிலே கைக்கொள்ளப்படுகின்றது. வயது வேறுபாடு இன்றி அனைவராலும் இவ்விரதத்தை அனுட்டிக்கமுடியும். இந் நன்னாளில் விரதம் இருந்து பலர் பலவகையான நற்பலன்களைப் பெற்றுள்ளனர். உதாரணத்திற்கு சூரியன், விஷ்ணு, பிரம்மா, மன்மதன், யமன், இந்திரன், சந்திரன், அக்கினி, குபேரன் ஆகியோரைக் குறிப்பிடமுடியும்.

இப்படிப்பட்ட இம் மகாவிரதம் எப்படி ஏற்பட்டது தெரியுமா. அதற்கு பல புராணகதைகளைக் கூறுவர். அதில் முக்கியமான சில கதைகளைப் பார்ப்போம்.

ஒரு சமயம் படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காத்தற் கடவுளான திருமாலுக்கும் இடையில் கடும் போட்டி ஒன்று ஏற்பட்டது. இருவரும் தம்மைத் தாமே பெரியவர் எனக் கூறிக்கொண்டனர். இவர்களின் இப்பிரச்சனை தீர்வதற்குப் பதில், நேரம் செல்ல செல்ல மிகக் கடுமையாகிக் கொண்டே சென்றது. அப்போது திடீரென்று அவ்விடத்தில் ஒரு ஒளிப்பிழம்பு தோன்றியது. அதன் அடியையும் முடியையும் காணமுடியவில்லை. அத்தனை தூரம் பெரியதாக இருந்தது. அச் சோதிப்பிழம்பில் இருந்து ஒரு அசரீரி கேட்டது. இதன் அடியையோ அல்லது முடியையோ யார் காணுகின்றார்களோ அவரே பெரியவர் என அவ்வசரீரி கூறிற்று. யார் பெரியவர் எனப் போட்டி போட்டுக்கொண்டு இருந்த திருமாலும் பிரம்மாவும் முறையே அடியையும் முடியையும் தேடிப் புறப்பட்டனர். திருமால் வராக உருக்கொண்டு பூமியைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடிச் சென்றார். பிரம்மா அன்னப்பட்சியாக உருக்கொண்டு முடியைத் தேடிச் சென்றார். இருவரும் பலகாலம் தேடியும் அடியையோ முடியையோ காணமுடியவில்லை. இறுதியில் இருவரும் தம் தோல்வியை ஒப்புக்கொண்டனர். தாம் வெறும் கருவிகள் என்பதையும் தம்மை இயக்குபவர் அப்பரம்பொருளான சிவபெருமானே என்பதையும் உணர்ந்தனர். அவர்களின் செருக்கையடக்கி அவர்களை மன்னித்த சிவபிரான் அச்சோதி வடிவம் தோன்றிய அந்நாளை மஹாசிவராத்திரியாகக் கொண்டாடும்படி கூறினார்.

இரண்டாவது கதை, ஒரு உலகமுடிவு நாளில்(அதாவது பிரளயகாலத்தில்) பிரம்மதேவன் மறைய சர்வான்மாக்களும் இறந்து போயின. அந்த இராப் பொழுதில் உமாதேவியார் சிவனைப் பூசித்து , பெருமானுடைய அருளைப் பெற்றார். அத்தோடு அந்த இராப்பொழுதில் விரதம் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் மோட்சமடைய வேண்டுமெனவும் வரம் பெற்றார். உமாதேவியார் வரம் பெற்ற அந்த இரவே மஹாசிவராத்திரி என்றும் கூறுவர்.

இவ்வாறாகத்தான் சிவராத்திரி தோற்றம் பெற்றதென்பர் பெரியோர். எப்படியாக இருந்தாலும் இந்த மஹாசிவராத்திரி விரதம் மிகவும் புண்ணியமானதொன்று. உதாரணத்திற்கு ஒரு வேடன் கதையைக் கூறுவர். ஒரு காட்டில் ஒரு வேடன் இருந்தான். மிருகங்களை வேட்டையாடுவதுதான் அவன் குலத்தொழில். ஒரு நாள் அவன் வேட்டையாடப் புறப்பட்டான். காலையில் இருந்து முயற்சி செய்தும் ஒன்றும் சிக்கவில்லை. அதனால் மிருகங்களைத் தேடிக்கொண்டே காட்டின் உட்பகுதிக்குச் சென்றுவிட்டான். சூரியன் மறையத் தொடங்கியும் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் அவன் அன்று பகல் முழுதும் பட்டினி. இனி அவனால் தன் இடத்திற்குத் திரும்பிச் செல்லமுடியாது. நாளை காலையில்தான் செல்லமுடியும். எனவே இரவுப் பொழுதை அந்நடுக்காட்டிலேயே கழிக்கத் தீர்மானித்தான். அவ்விரவில் துஷ்ட மிருகங்களிடம் இருந்து தப்புவதற்காக அங்கிருந்த மரம் ஒன்றில் ஏறிக்கொண்டான். அம்மரத்தில் ஏறினாலும் தூங்கி விழுந்து விடாமல் இருக்கவேண்டுமே, அதற்காக அம்மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாக கீழே பறித்துப் போட்டுக்கொண்டிருந்தான். அவன் ஏறிய அம்மரம் ஒரு வில்வமரம். அவன் பிடுங்கிக் கீழே போட்ட ஒவ்வொரு வில்வ இலையும் மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. ஆனால் வேடனுக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது. அவன் விடியும் வரை அவ்வாறே இலைகளைப் பறித்துப் போட்டுக்கொண்டிருந்தான். பகலிலும் பட்டினி, இரவிலும் பட்டினி. மறுநாள் காலை ஆனது. எம்பெருமான் அவன் முன் தோன்றினார். காரணம் அவன் இருந்த பட்டினியை எம்பெருமான் விரதமாகவும், அவன் தூக்கம் வராமல் இருக்க செய்த வேலையை வில்வ அர்ச்சனையாகவும் ஏற்றுக்கொண்டார். அவனுக்கு முக்தியின்பத்தை அளித்தார். அவ்வேடன் தெரியாமற் செய்த அப்புண்ணியம் எத்தனை பெரிய பலனைக் கொடுத்தது பார்த்தீர்களா. இதையே நாம் தெரிந்து செய்தால் எவ்வளவு பலன் ஏற்படும்.

இப்போது இவ்விரதத்தினை எப்படி அனுட்டிப்பது எனப் பார்ப்போம். சிவராத்திரிக்கு முதல்நாளில் ஒரு பொழுது உணவருந்தி, மஹாசிவராத்திரியன்று உபவாசம் இருந்து அதாவது உணவை முற்றிலும் தவிர்த்து, அன்று இரவு முழுவதும் துயில் கொள்ளாது, மறு நாள் அதிகாலையில் நித்தியகருமங்களை முடித்து எட்டரை மணிக்கு முன்னதாக பாரணை செய்யவேண்டும். பாரணை செய்தல் என்றால் உணவருந்துதல்.

அதாவது சிவராத்திரி தினத்தன்று காலையில் இருந்தே சிவசிந்தனையிலும், சிவபஜனைகளிலும் மனத்தை ஈடுபடுத்த வேண்டும். பின் மாலை 6 மணியளவில் அருகில் இருக்கும் சிவ ஆலயத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் நான்கு ஜாம பூஜைகளையும் கண்டுகளிக்க வேண்டும். இது நம் பாவங்களையெல்லாம் நசித்து நமக்கு பிறவாவரமளிக்கும். இவ்வாறு இரவு முழுதும் விழித்திருக்க முடியாதவர்கள், இரவு 11.30 தொடக்கம் 12.15 வரை இருக்கும் லிங்கோற்பவகாலம் வரையிலாவது விழித்திருக்கவேண்டும். அவர்களுக்கும் ஐயன் அருள்புரிவார்.

இன்றைய காலகட்டத்தில் இரவு முழுதும் விழித்திருக்கவேண்டும் என்பதை பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். இரவுமுழுதும் எப்படியாவது இருந்து விட்டால் புண்ணியம் கிடைத்துவிடும் எனக் கருதுகின்றனர். அதனால் சிலர் சீட்டாடுகின்றனர், சிலர் சினிமாப்படங்களைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் வீண் பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நோக்கம் விடியும் வரை தூங்காமல் இருந்து புண்ணியத்தினைச் சம்பாதிக்கவேண்டும் என்பதே. ஆனால் அவர்கள் இவ்வாறு இருப்பது மகா பாவமான செயலாகும். அவர்கள் புண்ணியத்திற்குப் பதில் பெரும்பாவத்தினைத்தான் சேர்க்கின்றார்கள். இவ்வாறான செயல்களில் ஈடுபடுதல் குளிக்கப் போய் சேறு பூசுவதற்குச் சமானமாகும். நம் பாவங்களைக் கழுவும் இந் நல்ல நாளில் தகாத செயல்களில் ஈடுபட்டு மேன்மேலும் ஏன் பாவத்தைச் சேர்க்கவேண்டும்?. எனவே சிவராத்திரியன்று சொன்னால் சிவநாமங்களைச் சொல்லுங்கள், செய்தால் சிவகாரியங்களைச் செய்யுங்கள். தேவையற்ற காரியங்களையும், வீண் பேச்சுக்களையும் தவிர்த்து விடுங்கள்.

இந் நல்ல நாளில் நான்கு ஜாம பூஜைகளுக்குத் தேவைப்படும் அபிஷேகத் திரவியங்களை வாங்கிக் கொடுத்தல் மிகவும் புண்ணியமான செயலாகும். எனவே முடிந்தோர் அபிஷேகத் திரவியங்களான பால், தேன், பன்னீர் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள். நான்கு ஜாமப் பூஜைகளும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் கரணங்கள் நான்கையும் சிவன் திருவடியிற் சேர்த்தலைக் குறிக்கின்றது. ஆலயம் செல்லமுடியாதோர் வீட்டில் இருந்தே வழிபடலாம். தவறில்லை. வீட்டில் இருந்து சிவபுராணங்களையும், தேவாரங்களையும், சிவகதைகளையும் படியுங்கள்.

இவ் விரதத்தினை 6 வருடங்களுக்காவது, 12 வருடங்களுக்காவது, அல்லது 24 வருடங்களுக்காவது தொடர்ந்து கைக்கொள்ளுதல் சிறப்பு. மஹாசிவராத்திரி விரதத்தைப் பற்றி பேசுவோருக்கு யமபயம் இல்லை. பல யாகங்களைச் செய்வதைக் காட்டிலும் இவ்விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் புண்ணியமாகும். சிவராத்திரி விரதத்தால் கிடைக்கும் நற்பயன் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினாற்கூட கிட்டாது.சிவராத்திரிக்கு ஒப்பான வேறு சிறந்த விரதம் இல்லை. இவ்வாறு பரமசிவனார் பார்வதிதேவிக்கு இவ்விரதம் பற்றி எடுத்துரைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சிவராத்திரியன்று சொல்லக்கூடிய சில மந்திரங்கள்:

ஸ்ரீ பவாய நம
ஸ்ரீ சர்வாய நம
ஸ்ரீ ருத்ராய நம
ஸ்ரீ பசுபதயே நம
ஸ்ரீ உக்ராய நம
ஸ்ரீ மகா தேவாயை நம
ஸ்ரீ பீமாயை நம
ஸ்ரீ ஈசாநாய நம


search tags : sivarathiri, shivarathiri, shivan, சிவராத்திரி, விரதம், நோன்பு

தொடர்புடைய பதிவு : திருவாசகம்

Related Posts Widget for Blogs by LinkWithin