உலக நியதி
பட்டினத்தாரின் கருத்து நிறைந்த ஒரு பாடல் இது. ஒவ்வொரு வரிகளும் உண்மை. பாடலைக் காண்போம் வாருங்கள்.
நீ எதை அதிகமாய் விரும்பிகிறாயோ...
அதை ஒரு நாள் வெறுக்க வைப்பதும்
எதை நீ வெறுக்கிறாயோ - அதை
ஒரு நாள் விரும்ப வைப்பதுமே
இறைவனின் லீலையாகும். அதனால்
ஒன்றை விரும்பும் போதே, அதை ஒரு நாள்
வெறுக்க வேண்டி வரும் என்பதையும்
நினைவில் வைத்துக் கொண்டால்
விருப்பும் - வெறுப்பும் சமநிலைப்பட்டு
இன்பமும் துன்பமும் இல்லாமல் போய்விடும்
இறந்து கிடக்கும் பிணத்தின் மீது
இறக்கப்போகும் பிணங்கள்
விழுந்து அழுவதில் அர்த்தமில்லை.
மிகுந்த அர்த்தம் பொதிந்த ஒரு பாடல். இந்தப் பாடலின் அர்த்தத்தினை நான் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். இருப்பினும் சில விடயங்களில் இது பொருந்தவில்லை. என் பெற்றோர், நான் வணங்கும் தெய்வங்கள், நல்லோர் இவர்கள் மேல் நான் கொண்ட நேசம் ஒருநாளும் மாறியதில்லை. ஆனால் வேறு நான் நேசித்த அநித்ய பொருட்களையும், சில பழக்கவழக்கங்களையும் வெறுத்திருக்கிறேன். அநித்ய பொருட்கள் என்றால் நிலையில்லாத பொருட்கள்.
விருப்பினையும் வெறுப்பினையும் சமநிலைக்குக் கொண்டுவருதல் சாத்தியமா. ஆம். ஞானிகள் விருப்பினையும் வெறுப்பினையும் சமமாகவே எடுத்துக் கொள்வார்கள், இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால் நம்மால் எப்படி விருப்பினையும் வெறுப்பினையும் சமநிலைக்குக் கொண்டுவர முடியும்?. தியானத்தின் மூலமும், வாழ்க்கையின் படிப்பினைகள் மூலமும்தான். இதுவரை நான் முயற்சி செய்ததில் ஒரு 10% தான் முன்னேறியுள்ளேன். ஆனால் இந்தப் 10% தால் நான் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளேன். ஆக விருப்பினையும் வெறுப்பினையும் சமமாகப் பார்க்க முயற்சி செய்யுங்கள். முயற்சியில் ஈடுபடும் போதே நிம்மதியினையும், சாந்தியினையும் அடைவீர்கள்.
இறந்தவர்களைக் கண்டு இறக்கப் போகும் நாம் அழுவது விந்தைதான். பிறப்பினையும் இறப்பினையும் முழுதுமாக உணர்ந்து கொண்டால்தான் ஒரு துக்கவீட்டில் கூட மனம் சஞ்சலமில்லாமல் இருக்கமுடியும். பூமியில் நிலையாக வாழ்ந்தவர் எவரும் இல்லை என்பதை மனதில் கொண்டால் உங்கள் மனம் அமைதியாக இருக்கும். துக்கவீட்டிற்குச் சென்றால் மனம் துக்கமடையும், அப்போதெல்லாம் இந்தப் பாட்டினை நினைவிற் கொள்வேன், மனம் அமைதியாகிவிடும். மனம் அமைதியாக இருந்தால்தான் அந்த துக்கவீட்டில் துக்கத்தில் ஆழ்ந்திருப்போரை நாம் அமைதிப்படுத்தி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யமுடியும். மாறாக நாமும் அவர்களோடு துக்கத்தில் ஆழ்ந்து விட்டால் நம்மைத் தேற்றவே ஒருவர் வரவேண்டி இருக்கும்.
search tags : katurai, artcle, கட்டுரை, பயனுள்ளவை, பட்டினத்தார், patinathar
செங்கோல்..! செங் - கோள்
10 months ago
1 comment:
Nice poem.
thank you for posting.
Deva
Post a Comment