ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Tuesday, April 21, 2009

ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தைக் கலிதோஷம் நீக்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜெயமருள் போற்றுகின்றேன்
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்தென்னை ரெஷித்திடுவீரே.

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குஹா சரணம் சரணம்
குருகுகா சரணம் குருபரா சரணம்
சரண மடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத்தா னறிந்து நான் தன் மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்
அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய்

தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா
சண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய்
தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலை தனில் சொன்னதைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை

அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெல்லாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே
ஆறுமுக ஸ்வாமியுன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல்கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே
தேவரைக் காத்த திருச்செந்தி லாண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்வியஜோதி யானகந்தா
பரஞ்ஜோதி யுங்காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய்

திருமலை முருகாநீ திடஞான மருள்புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மல மகற்றிடுவாய்
அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவா
திருப்பரங் கிரிகுஹனே தீர்த்திடுவாய் வினைமுழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை
பகைவர் சூது வாதுக்களை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா என்கண் முருகா நீ

என்னுள் ளறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா
அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமல மகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானு பூதிதாரும்
சிக்கல் சிங்கார ஜீவனைச்சிவ னாக்கிடுவாய்
குன்றக் குடிக்குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா

பவழமலை ஆண்டவனே பாபங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா
வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணெய் மலைமுருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர்
கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெல்லாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல் கொண்டு வந்திடுவீர்
வடபழனி யாண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்

ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்
ஏழ்மையகற்றிகந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
ஆறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன்
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கு முள்ளது ஒரு பொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பது மன்பென்றாய்

அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள் மந்திர மென்றாய்
அன்பை உளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியவன் நீ யாவர்க்கும் எளியன் நீ
யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் மானோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணமையா
அபாயம் தவிர்த்து தடுத்தாட் கொண்டருள்வாய்

நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும்
பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மல மாக்கிடுவாய்
யானெனெ தற்றமெய் ஞானம தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா
ஆகம மேத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்

பரம் பொருளான பாலனே ஸ்கந்தகுரோ
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய்வந் தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா
காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடரோய் மெய்கண்ட தெய்வமே
வித்தையா மிவ்வுலகை வித்தையென் றறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயமென்றலறுகின்றேன்

அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன்
உன்துணை வேண்டினேன் உமையவள் குமராகேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டிய துன்னருளே அருள்வதுன் கடனேயாம்
உன் அருளாலே உன் தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக் கருளிடப்பா
அஜபை வழியிலே அசையாம லிருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞான சித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துள்ளே காட்டிவிடு

அறிவை அறிந்துடும் அவ்வருளையும் நீ தந்துவிடு
அனுக்ரஹித் திடுவாய் ஆதிகுரு நாதாகேள்
ஸ்கந்தா குருநாதா ஸ்கந்த குருநாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லது கெட்டதும் நானென்பதும் மறந்து
பாவபுண் ணியத்தோடு பரலோகம் மறந்திடச் செய்
அருள்வெளி விட்டிவனை அகலா திருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்

சிவானந்தம் தந்தருளி சிவசித்த ராக்கிடுவாய்
சிவனைப் போலென்னைச் செய்திடுவ துன்கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்
சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும்

தென்மேற்கிலுமென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்
மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரஷிப்பாய்
வடமேற்கிலுமென்னை மயிலோனே ரஷிப்பாய்
வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துதிக்குத் தோறுமெனை பறந்து வந்து ரஷிப்பாய்
என்சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்க ளிரண்டையும் கந்தவேள் காக்கட்டும்

நாசிக ளிரண்டையும் நல்லவேல் காக்கட்டும்
செவிக ளிரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்களிரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டி னையும்தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நம்முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களைக் கந்தன் பலம் கொண்டு காக்கட்டும்
கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்க ளிரண்டையும் தூயவேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்

மனத்தை முருகன் கை மாத்தடிதான் காக்கட்டும்
ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிதுநிலைத் திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவையுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்து முகர் அனைத்தையுமே
உரோமத் வாரமெல்லாம் உமைபாலா ரஷிப்பாய்
தோல்ரத்தம் மஜ்ஜையும் மாம்ஸமென்பு மேதஸையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அஹங்காரமுமகற்றி அறிவொளியா யிருந்தும்

முருகா வெனைக்காக்க வேல் கொண்டு வந்திடுவீர்
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹவென்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி
ஒருமனத் தோடுநீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோ டேத்திட்டால்
மும்மல மகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்

முருகன் இருப்பிடமே முக்தித்தல மாகுமப்பா
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்திரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்குக் காலபய மில்லையடா
காலனை நீஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடி செய்தால் சுப்ரமண்ய குருநாதன்
தன்னொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜெகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீஜபித்தே முக்தனு மாகிடடா
அஷர லஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்

எண்ணிய தெலாம் கிட்டும் எமபய மகன்றோடும்
மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனு மாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதைநீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்துடுவாய் கோடியுமே
வேதாந்த ரகசியமும் வெளியாகு முன்னுள்ளே
வேத சூக்குமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரஹ் மண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட்பெருஞ் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே

அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்
சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே வேண்டி நான்வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறி வாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா
பகுத்தறி வானகந்தன் பரங்குன்றில் இருக்கின்றாய்
பழனியில் நீயும் பழம்ஜோதி யானாய் நீ
பிரமனுக் கருளியவா பிரணவப் பொருளோனே
பிறவா வரமருளி பிரம்மமய மாக்கிடுவாய்

திருச்செந் தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய்
பழமுதிர்ச் சோலையில் பரஞ்ஜோதி மயமானாய்
சுவாமி மலையிலே சிவசுவாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்த கிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே
பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கிற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரணமடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னரு ளாலேதான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக் குயிரானகந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னி லுன்னைக்காண எனக்கு வரமருள்வாய்
சீக்கிரம் வந்து சிவசித்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரிய மடக்கி இருந்து மறிகிலேன் நான்
மனதை அடக்க வழியொன்று மறிந்திலேன் நான்

ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே
சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பெல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா வுன்னைத் திடமுற நினைத்திடவே
திருவருள் தந்திடுவாய் திருவருள் தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யா னந்தமதில்
நித்யானந்தமே நின்னரு வாகையினால்

அத்வை யானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய்
ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருள் காட்டி மேன்மை அடைந்திடச் செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
துக்கங்க ளனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுக மானகுரோ அறிந்திட்டே னுன்மஹிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே
அரைக் கணத்தில் நீயும் ஆடிவரு வாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரஹ் மண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ

ஞான தண்டபாணியே என்னை ஞானபண்டித னாக்கிடுவாய்
அகந்தையெலா மழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ள வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய்
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங் கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும்

அன்பே ஹரியும் அன்பே பிரம்மனும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம் அன்பே மோஷம்
அன்பே பிரம்மமும் அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கும் மில்லையென்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரேதான்
ஸ்கந்தாஸ் ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்

மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ் ரமந்தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு
எல்லையில்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உனையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால்
விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே

நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
பிரம மந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகி யாகஎனைச் செய்திடும் குருநாதா
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிடுவாய்
மெய்யடியா ராக்கி மெய்வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா
கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ

மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னி மலைக்குமரா சித்தர்க் கருள்வோனே
சிவவாக்கிய சித்தனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர்வாழப் பிரதிஷ்டித்தான்
புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளையுள்ளம் அருள்வீரே
கற்றவர்க ளோடென்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ள இடம்
ஸ்கந்தகிரி என்பதை நான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழனிமலை முருகாகேள்
கொங்கு தேசத்திலே குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில்
கன்னிமார் ஓடையின் மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே
பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா

பரமா னந்தமதில் எனைமறக்கப் பாலிப்பாய்
மால் முருகா வள்ளிமணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன் கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப் பிழம்பான சுந்தரனே பழனியப்பா
சிவஞானப் பழமான ஸ்கந்தகுரு நாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவா வினன்குடியில் திருமுருகனானாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க் குத்தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை
கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்

ஔவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக் கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா
ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன் நாமம்
உன்னையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தனென்ற பேர்சொன்னால் கடிதாக நோய் தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாஷியாக
புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின் நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன்
அங்கிங் கெனாதபடி எங்குமே முருகனப்பா

முருகன் இல்லாவிட்டால் முவ்வுலக மேதப்பா
அப்பப்பா முருகனின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெலாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய்
முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ் ரமமிருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் ஸாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கிறேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ
சந்தேக மில்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்

சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுரு வேஸத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு
சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கிவிடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ
பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்

பிறவிப் பிணியகலும் பிரம்மா னந்தமுண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருன்னை
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர் போற்றிடுவர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா
சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கவசமென்று உணர்ந்திடுவாய்
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம்
கலியென்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே

சொன்னபடி செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தோன்றி ஏத்துவோர்க்கு
அஷ்டைஸ் வர்யந்தரும் அந்தமில்லா இன்பந்தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன்
வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் சௌக்யமும் ஸர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திறுத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமரோதம் கலிதோஷ மகற்று விக்கும்
முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்

அறம்பொருள் இன்பம் வீடு அதிசுலப மாய்க்கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா வுளத்தோடு கந்தகுரு கவசந்தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப்
பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
ஸ்கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலையில்லை நிச்சயமாய்
ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ

ஸ்கந்தகுரு கவசந்தன்னை ஓதுவதே தவமெனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபர சுகமுண்டாகும் என்னாளும் துன்பமில்லை
துன்பம் அகன்றுவிடும் தொந்திரைகள் நீங்கிவிடும்
இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடும்
பிறவிப் பிணியகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரஷிக்கும் ஸ்கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டு நீ ஸ்கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால்
தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்

போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அக்ஞானமு மகற்றி அருள்ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்று முன்நிற்பன்
உள்ளொளி யாயிருந்து உன்னிலவ னாகிடுவன்
தன்னில் உன்னைக் காட்டி உன்னில் தன்னைக் காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவன்
ஸ்கந்த ஜோதி யானகந்தன் கந்தகிரி யிருந்து
தண்டாயுதம் தாங்கி தருகிறான் காட்சியுமே
கந்தன் புகழ்பாட கந்தகிரி வாருமினே

கந்தகிரி வந்திநிதம் கண்டுய்மின் ஜகத்தீரே
கலிதோஷ மகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ்பெறுமின்
ஸ்கந்தகுரு கவசபலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும்
ஒருதரம் கவசமோதின் உள்ளளுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதர மோதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறையோதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாஷரம் பெற்று
ஆறுமுறையோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்

ஏழுமுறை தினமேத்தின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா ஸித்திகிட்டும்
ஒன்பது தரமோதின் மரண பயமொழியும்
பத்துதர மேத்தி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே
கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
ஸ்கந்தகுரு கவசமோதி ஸ்கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினையெல்லாம் கந்தன் அகற்றிடுவன்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளிலே நீ எடுத்து
கந்தனென்ற மந்திரத்தை கண்மூடி யுருவேத்தி

உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால்
சித்த மலமகன்று சித்தசுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி யேறிடுவீர்
கந்தகிரி யேறிஞான ஸ்கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்துலகில் பாக்யமெல்லாம் பெற்றிடுவீர்.

( ஸ்கந்தகுரு கவசம் முற்றிற்று )


இப் பதிவோடு தொடர்புடைய பதிவு : ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம் (ஒலி,ஒளி)

searcj tags : sree skandaguru kavasam, Lord Muruga, Lord Kanthan, கந்தகுரு கவசம், ஸ்கந்தகுரு கவசம், முருகன், கந்தன்

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin