ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-
Showing posts with label இராமாயணம். Show all posts
Showing posts with label இராமாயணம். Show all posts

Wednesday, July 15, 2009

இராமாயணம்-9



இராமாயணம்

பகுதி - 9

(முன்னைய பாகம் : செல்க)


சீதாதேவி இலகுவில் தூக்கிய வில்லை வளைத்தவனுக்கே பெண்ணைத் தருவதாகப் பிரகடனம் செய்தார் ஜனகர். பலர் வந்து வளைக்காமல் தோல்வி அடைந்தார்கள். அப்போது சீதைக்கு 12 வயது. சீதையின் திருமணம் பரம மங்களமாக நடைபெறும் பொருட்டு ஒரு சத்ரயாகம் தொடங்கினார். அந்த யாகத்துக்கு மன்னர்களும், மறையவர்களும் குழுமினார்கள். அந்த யாகத்துக்கான அழைப்பு சித்தாசிரமத்தில் இருந்த விசுவாமித்திரரை அடைந்தது.

விசுவாமித்திரர் இராமரை நோக்கி, இராமா! உன்னால் ஒரு பெரிய காரியம் நடக்க இருக்கிறது. அதற்கிடையில் ஜனகருடைய யாகத்துக்குப் போகவேண்டும் என்று கூறி, இராம இலட்சுமணருடன் மிதிலையை நோக்கி புறப்பட்டார். வழியில் சோனை நதியைக் கண்டார்கள். கங்கா நதியைத் தரிசித்தார்கள். பகீரதன் கங்கை கொண்டு வந்த வரலாற்றை விசுவாமித்திரர் இராமருக்குக் கூறினார். வழியில் முருகப் பெருமான் திருவவதாரம் செய்த சரவணப் பொய்கையைக் கண்டு முருகப் பெருமனை நினைத்து வணங்கி மகிழ்ந்தார்கள்.


ஓடக்காரன் சந்திப்பு:

மூவரும் தேவரும் போற்றும் மிதிலைக்கருகிலே சேர்ந்தார்கள். அங்கு ஒரு பெரிய நதி குறுக்கிட்டது. அதற்குப் பாலம் இல்லை. அந்த நதியைக் கடக்க என்ன வழி என்று சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது கரிய நிறத்துடன் ஒருவன் வந்து வணங்கி நின்றான்.

நீ யாரப்பா? உனக்கு என்ன பேரப்பா? என்று கேட்டார்கள்.

அவன் நான் வீரப்பன் என்றான்.

அக்கரைக்குப் போகவேண்டும். ஓடம் கிடைக்குமா?

நான் ஓடக்காரன். மீனவர் மரபில் வந்தவன். நான் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன்.

இப்போது ஓடம் தயாராக இருக்கின்றதா? எத்தனைப் பேர் ஏறலாம்?

அறுபது பேர் ஏறலாம். நீங்கள் மூவர்தான் வந்திருக்கின்றீர்கள்.

அப்பா! இன்னும் 57 பேர்கள் சேரும் வரையிலும் நாங்கள் காத்திருக்க வேண்டுமா?

நீங்கள் உலகத்தைக் காக்கும் தெய்வங்கள். உங்களைக் காக்க வைக்கமாட்டேன். உங்கள் மூவருக்கும் ஓடம் செலுத்துவேன்.

அப்படியானால் அறுபது பேருக்குரிய கட்டணத்தை நாங்களே தந்துவிடுவோம்.

நீங்கள் மூவரும் ஏறினால் மும்மூர்த்திகள் ஏறியது போலாகும். உங்களிடத்தில் காசு வாங்கமாட்டேன். உங்கள் ஆசி இருந்தால் போதும். ஏறுங்கள்.

விசுவாமித்திரர் ஓடத்தில் ஏறினார். இராமர் ஏறுகின்ற பொழுது அந்த மீனவன், பச்சை! பச்சை! ஓடத்தில் கால் வைக்காதே. அப்பன் ஆணை என்றான்.

இராமர் துக்கிய காலை கீழே வைத்துவிட்டார். இலட்சுமணருக்குச் சீற்றம். இவனை அறைந்துவிட்டு நாமே ஓடம் செலுத்தலாம் என்று எண்ணினார். இராமர், தம்பி! அவன் பரம்பரையாக ஓடம் செலுத்திக் கொண்டிருக்கிறான். தனியார் துறையில் அரசாங்கம் கை வைக்கக்கூடாது. அரசாங்கம் மேற்கொண்ட இலாக்கா ஒழுங்காக இருப்பதில்லை. பச்சையாக இருக்கின்ற என்னைப் பச்சை என்று அழைத்தால் என்ன? அவனுக்குச் சொந்தமான ஓடத்தில் கால் வைக்காதே என்று சொல்ல அவனுக்கு உரிமை உண்டுதானே?
அப்பா! மீனவனே! நான் ஏன் ஏறக்கூடாது?

ஐயா! தங்களை ஏற்றிக்கொள்ள மாட்டேன். சீறுகின்ற சின்ன ஐயாவை ஏற்றிக்கொள்வேன். நீங்கள் யார்?

அப்பா! அயோத்தியை ஆளுகின்ற தசரதச் சக்ரவர்த்தியின் மக்கள் நாங்கள்.
அம்மீனவன் உள்ளம் துடித்து, கண்ணீர் வடித்து வணங்கி, என்னை மன்னிக்க வேண்டும் இராமச்சந்திரமூர்த்தி! தாங்கள் பிறந்த அன்று எங்களுக்கு அன்னமும் ஆடையும் வழங்கினார்கள். அமைச்சர்கள் வந்தாலே மிகப்பெரிய வரவேற்புச் செய்கின்றார்கள். நீங்கள் சக்கரவர்த்தித் திருக்குமாரர். உங்களுக்கு ஒரு கோடி வணக்கம். தாங்கள் மட்டும் ஒடத்தில் கால் வைக்கவேண்டாம்.

ஏனப்பா? நான் ஏறக்கூடாது?

ஐயனே! சிறிது தூரத்தில் ஒரு கருங்கல் பாறை இருந்தது. நாங்கள் இளமையில் அதில் சருக்கும்பாறை ஆடுவோம். அந்தக் கல்லில் தங்கள் கால் பட்டவுடனே அது பெண்ணாக மாறிவிட்டது. இதில் கல்லும், மரமும், இரும்பும் இருக்கின்றன. தாங்கள் கால் வைத்தவுடனே ஓடம் பெண்ணாக மாறிவிடும். நான் வீட்டிலுள்ள பெண்ணைக் காப்பாற்றுவேனா? இந்தப் பெண்ணைக் காப்பாற்றுவேனா? தனவந்தர்கள் இரு தாரத்தடன் அல்லல்படுகிறார்கள். நான் ஏழை. இந்த ஓடத்தை வைத்தக்கொண்டுதான் ஜீவனம் பண்ணுகிறேன்.

அப்பா! நாங்கள் கால் வைத்தால் பெண்ணாகாது. நாங்கள் அவசியம் அக்கரைக்குப் போகவேண்டும்.

அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நதியில் இறங்கிச் சுத்தமாகக் காலைக் கழுவிவிடுங்கள். கல்லைப் பெண்ணாக்குகின்ற மருந்து தண்ணீரில் கரைந்து போகட்டும் பின்னர் ஏறிக்கொள்ளலாம்.

இராமர் நதியில் இறங்கிக் கால் கழுவச் சென்றார். மீனவன், ஐயனே! கால் வைத்துத் தேய்க்கக் கூடாது என்று வசிட்டர் உமக்குச் சொல்லவில்லையா? கால் கழுவும் பணியை எனக்கு கொடும். நான் சுத்தமாய்த் தேய்த்துவிடுவேன் என்று கூறி, இராமருடைய சரணார விந்தங்களைச் செப்புத் தாம்பாளத்தில் வைத்து, ராம ராம என்று கண்ணீரும் பன்னீரும் விட்டு அபிஷேகம் செய்தான். காட்டு மலர்களை எடுத்து அர்ச்சனை செய்தான். எம்பெருமானே உன் பாத பூசைக்குச் சரபங்கர், பாரத்துவாஜர், தண்டக வனத்த மகரிஷிகள், சபரி முதலிய மகரிஷிகள் பலகாலம் காத்திருக்க, தவம் செய்யாத தமியேனுக்கு முதல் பாதபூசை கிடைத்ததே என்று துதி செய்து வந்தனை வழிபாடு செய்தான்.

இராமர், தம்பி இலட்சுமணா! இவனை அறைந்துவிடலாமா? என்று எண்ணினாயே! நமது பாதபூசைக்காகவே இவ்வாறு செய்தான் என்றார்.

மீனவன், இராமா! கல்லைப் பெண்ணாக்கும் மருந்து தண்ணீரில் இறங்கிவிட்டது. இதைக் கீழே விட்டால் கீழேயிருக்கிற கற்களெல்லாம் பெண்களாகிவிடும். ஏன் மனமாகிய கல் பெண்ணாகட்டும் என்று கூறி ஆசுமனம் செய்து தலையில் ஊற்றிக்கொண்டான். மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். அவன் பகவானுடைய கீதத்தைச் சொல்லியே ஓடத்தைச் செலுத்தினான். ஓடத்தை விட்டு இறங்கியவுடன் இராமர் தன் கையிலிருந்த நவரத்தின மோதிரத்தை இனாமாகத் தந்தார். அவன் அதை வாங்க மறுத்தவிட்டான்.

இராமச்சந்திர மூர்த்தி! நீயும் ஓடக்காரன், நானும் ஓடக்காரன். தொழிலாளியிடம் தொழிலாளி இனாம் வாங்க கூடாது. நான் இந்த நதியைக் கடக்க ஓடம் விடுபவன். தாங்கள் பிறவிப் பெருங்கடலுக்குத் திருவடி ஆகிய ஓடத்தை விடுபவர். இப்பொழுது நான் இதற்கு இனாம் வாங்கினால் அப்பொழுது நான் பொருள் தர எங்கே போவேன்? என்று கூறி, தொழுது அழுது இராமர் மலரடிமீது வீழ்ந்து வணங்கினான். அவன் அன்பைக் கண்டு இராமர் உள்ளம் உருகினார். மூவரும் மிதிலையை நோக்கி புறப்பட்டார்கள்.


தொடரும் ...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 8


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Friday, July 3, 2009

இராமாயணம்-8



இராமாயணம்

பகுதி - 8

(முன்னைய பாகம் : செல்க)


சீதையின் பிறப்பு:-

பத்மாட்சன் என்ற பார்த்திபன் இந்தப் பரத கண்டத்தை ஆட்சி புரிந்தான். அவன் மகப்பேறு வேண்டி மாதவனை வேண்டி மாதவம் புரிந்தான். திருமால் அவன் முன் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

ஆரா அமுதம் அளித்த நாராயணா! திருமகள் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டான்.

திருமால் ஒரு மாதுளங்கனியை அவனுக்கு அளித்தார். அவன் அதைப் பிரித்தபோது ஒரு பாதி முத்துகளும், மற்ற பாதியில் இலட்சுமியும் இருக்கக் கண்டு மகிழ்ந்தான். மாதுளங்கனி போன்ற நிறமுடைய அம்மங்கைக்குப் பத்மாட்சி என்று பெயர் சூட்டினான். பத்மாட்சி திருமாலை வேண்டித் தவம் செய்தாள். பத்மாட்சன் மகளுக்குச் சுயம்வரம் வைத்தான்.

சுயம்வரம் என்றால் பெண் தானே மணமகனை வரிப்பது. 56 சிற்றரசர்களும் சுயம்வரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். பத்மாட்சி தந்தையைப் பார்த்து, அப்பா! நான் திருமாலை மணந்துகொள்ளத் தவம் செய்கிறேன். சுயம்வரம் எப்படி அமைத்தீர்கள்? என்று கேட்டாள். பத்மாட்சன் சுயம்வர மண்டபத்தில் நிறைந்திருக்கின்ற மன்னர்களைப் பார்த்து, வேந்தர்களே! விண்ணில் தெரிகின்ற நீலநிறத்தை எவன் உடம்பில் பூசிக்கொள்வானோ! அவன் என் மகளுக்கு மாலை போட வேண்டும். இது என் மகளின் விருப்பம் என்றான்.

இது ஆகாத காரியம் என்று அரசர்கள் சீறி, பத்மாட்சன் மீது போர்தொடுத்தார்கள். போரில் பத்மாட்சன் வெற்றி பெற்றான். பத்மாட்சி தவம் செய்துகொண்டிருந்தாள். வானவீதியிலே விமானத்தில் சென்று கொண்டிருந்த இராவணன் பத்மாட்சியைக் கண்டு காதல் கொண்டு பத்மாட்சியைத் தனக்குத் தருமாறு கேட்டான்.

பத்மாட்சன், பெண்ணைத் தருவதில் தடையில்லை. வானத்தில் தெரிகின்ற நீல நிறத்தை உடம்பில் பூசிக்கொண்டால் என் மகள் உனக்கு மாலை போடுவாள் என்றான்.

இராவணன் பத்மாட்சனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றுவிட்டான். இராவணன் பத்மாட்சியைப் பற்றுவதற்கு முயன்றான். அவள் மறைந்துவிட்டாள். அந்த நகரத்துக்கு இராவணன் தீ வைத்தான். அந்த செயல் இலங்கை எரிவதற்குக் காரணமாயிற்று.

மற்றொருநாள் இராவணன் வான்வழியே செல்லும் பொழுது நகரம் எரிந்து கொண்டேயிருப்பதையும், அதன் அருகில் பத்மாட்சி தவம் செய்து கொண்டிருப்பதையும் கண்டான். இராவணன் பத்மாட்சியைப் பற்ற முயன்றான். பத்மாட்சி எரிகிற தீயில் விழுந்துவிட்டாள். இராவணன் தண்ணீரை விட்டுத் தீயை அணைத்தான். அதில் ஒரு பெரிய மாணிக்கத்தைக் கண்டு எடுத்து, அதனை வண்டோதரிக்குத் தரவேண்டுமென்று பெட்டியில் வைத்துக் கொண்டான். பல அலுவல் காரணமாக அதனை மறந்து விட்டான்.

ஒருநாள், வண்டோதரி! பெண் மாணிக்கமாகிய உனக்கு ஒரு மாணிக்க மணியை கொண்டு வந்தேன் என்று கூறிப் பெட்டியைத் திறந்தான்அப்பெட்டியில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இராவணன் அதிர்ச்சி அடைந்தான். இவள் மாயக்கன்னி, மயக்கும் கள்ளி! என்ன என்ன வடிவம் எடுக்கிறாள் என்று கூறி, வாளை எடுத்து வெட்டுவதற்கு ஓங்கினான்.

வண்டோதரி கணவனார் கரத்தைப் பற்றித் தடுத்து, பெருமானே! இந்தக் குழந்தையை வெட்டாதீர்கள். மாறி மாறிப் பல வடிவங்கள் எடுத்த இவள் பத்ரகாளியாக மாறி உன்னைக் கொன்றுவிடுவாள். இந்தப் பெட்டியில் வைத்து மூடி எங்காவது புதைத்துவிடுங்கள் என்று கூறினாள். பெட்டியை மூடி அரக்கர்களின் கையிலே கொடுத்து, இமயமலைச் சாரலிலே புதைத்து விடுங்கள் என்றான். அவ்வாறே அவர்கள் புதைத்து விட்டார்கள்.

சிலர் இலங்கையிலே சீதை பிறந்தாள் என்றும், சீதை பிறக்க இலங்கை அழியும் என்றும் கூற, இராவணன் பெட்டியில் குழந்தையை வைத்துக் கடலில் விட்டுவிட, மிதிலாபுரியில் கரை தட்டியது என்று கூறுவார்கள். மிதிலாபுரிக்கும், கடலுக்கும் சம்பந்தமே இல்லை. மிதிலாபுரி இப்பொழது ஜனக்பூர் என்று வழங்குகிறது. அதற்குப் பாட்னாவிலிருந்து ஜீப்பில் போகவேண்டும் நேபாளத்தின் பார்டரில் இந்த நகரம் இருக்கின்றது.

மிதிலாபுரியை அரசு புரிகின்ற சீரத்துவஜ ஜனகர் பரமஞானி மரவுரியைத் தன்கொடியில் எழுதிக் கட்டியதினால் சீரத்துவஜ ஜனகர் என்று பெயர் பெற்றார். இவருடைய தம்பி குசத்துவஜர் என்பவர். சாங்காஸ்யம் என்ற நகரத்தை ஆட்சி புரிந்து வந்தார். ஜனகரிடம் கௌதமரின் புதல்வராகிய சதானந்தர் புரோகிதராக இருந்து வந்தார். ஜனகர் வேதாந்த வித்தகர். மகப்பேறு வேண்டிப் பொற்கொழுவால் வேதமந்திரம் சொல்லி உழுகின்றபொழுது இராவணனால் புதைக்கப்பட்ட பெட்டி கிடைத்தது. திறந்து பார்த்தார். மகாலட்சுமியே குழந்தையாக விளங்கிக் கொண்டிருந்தாள. ஜனகர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து சீதை என்று பெயர் சூட்டினார். தான தருமங்கள் செய்தார்.

பின்னர், ஆறுமாதம் கழித்து ஜனகருடைய மனைவி ஸுநயனி கருவுற்று வேறு ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அப்பெண்ணுக்கு ஊர்மிளை என்று பேர் சூட்டினார்கள். ஜனகருடைய தம்பிக்கு மாண்டவி, சுருதகீர்த்தி என்ற இரண்டு பெண்கள் பிறந்தார்கள்.

ஒருநாள் இந்த நான்கு பெண் குழந்தைகளும் அரண்மனையில் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள. சீதாதேவி வீசிய பந்து ஜனகர் பூசை செய்கின்ற சிவன் வில்லின் அடியில் சிக்கிக் கொண்டது.

சீதை, ஊர்மிளை! பந்தை எடுத்துப் போடு என்றாள்.

ஊர்மிளை, அக்கா! பந்து சிவ தனுசின் கீழே அகப்பட்டுக் கொண்டது. அது அறுபதினாயிரம் பேர் எடுக்கக் கூடியது என்றாள்.

என்னம்மா! ஒரு பந்தை எடுக்க அறுபதினாயிரம் பேரா? என்று கூறி, அன்னம்போல் நடந்து இடக்கையில் வில்லை எடுத்து மூலையில் சார்த்தி வைத்துவிட்டுப் பந்தை எடுத்துக் கொடுத்தாள். பழையபடியே வில்லை எடுத்து மேடையில் வைக்க மறந்துவிட்டாள்.

மறுநாள் காலையில் பூசை செய்யவந்த ஜனகர் வில் மேடையில் இல்லாமல் மூலையில் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். சேவகனை அழைத்து வில்லை யார் எடுத்தது? என்று கேட்டார்.

சேவகன் இங்கு ஒருவரும் வரவில்லை. சீதா தேவி தன் தங்கையுடன் பந்து விளையாடினார்கள் என்றான். ஜனகர் சீதையை அழைத்து வில்லை யார் எடுத்தது? என்ற கேட்டார்.

அப்பா நான்தான் எடுத்து வைத்தேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி, வில்லை இடக்கையால் எடுத்து மேடையில் வைத்துவிட்டாள். இந்த நிகழ்ச்சி ஜனகருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

அறுபதினாயிரம் பேர் எடுக்க வேண்டிய வில்லை, இந்த ஐந்து வயது குழந்தை அநாயாசமாக இடக்கையால் எடுத்து வைத்ததே! இந்தப் பெண்ணை யாருக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்ற சிந்தித்தார்.


தொடரும் ...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 7


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Saturday, June 27, 2009

இராமாயணம்-7


இராமாயணம்

பகுதி - 7

(முன்னைய பாகம் : செல்க)


வேள்வி காவல்:-

மூவரும் கோமதி என்ற நதி சரயு நதியில் கலக்கும் சங்கமத்தில் ஓர் இரவு தங்கினார்கள். விசுவாமித்திர முனிவருடைய தமக்கையும் ரிசீகமுனிவருடைய மனைவியுமாகிய கௌசீகை என்பவள் உலகத்துக்கு நன்மை செய்யும் பொருட்டு நதியாக ஆனாள். அந்த நதியின் அருமை பெருமைகளை முனிவர் இராமருக்குக் கூறி பின் அங்கிருந்து புறப்பட்டுச் சித்தாசிரமத்தை அடைந்தார்கள. அந்த ஆசிரமம் கற்புடைய மங்கையரின் உள்ளம்போல் தூய்மையாக இருந்தது.

திருமால் அங்குப் பலகாலம் தவம் செய்தார். அப்பொழுது மகாபலிச் சக்ரவர்த்தி மிக்க வலிமையுடன் விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் கவர்ந்துகொண்டான். திருமால் அதிதி வயிற்றில் ஆயிரம் ஆண்டுகள் கருவிருந்து வாமன மூர்த்தியக அவதரித்தார். அப்பொழுது மகாபலிச் சக்ரவர்த்தி அசுவமேதயாகம் செய்து கொண்டிருந்தான். பெருங்கொடையாளியாகிய அவனை வலிமையால் அடக்க முடியாது. அவனைத் தானத்தில் வெல்ல வேண்டும் என்று கருதி யாகசாலையை அடைந்தார். அவருடைய குறுகிய வடிவத்தைக் கண்டு எல்லாரும் எள்ளி நகையாடினார்கள்.

அசுர குரவாகிய சுக்கிராசாரியார், மகாபலி! இந்தக் குறளன் திருமால் என உணர்வாய். உன்னை மாயம் செய்து அடக்க வந்திருக்கிறான். எச்சரிக்கை! என்றார்.

மகாபலி, குருவே! மாய்ந்தவர் - மாய்ந்தவர் அல்லர். ஈந்தவர்தான் என்றும் வாழ்ந்தவர்கள். கொடுக்கும்போது தடுக்கின்றவர்களின் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் என்று கூறி வாமன மூர்த்தியை வந்தனை வழிபாடு செய்து, உமக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான். வாமன மூர்த்தி, அள்ளிக் கொடுக்கும் வள்ளலே! என் காலால் மூவடி மண்தானம் வேண்டும் என்றார்.

மகாபலி புன்முறுவல் பூத்து மூவுலகத்துக்கும் தலைவனாகிய என்னிடம் மூன்று நகரங்களைக் கேட்கலாமே? உமது காலால் மூவடி என்றால் அது சிறிய பொருள்தானே? என்றான்.

வாமனர், என் காலால் மூவடி மண் கொடுத்தால் போதும் என்றார்.

அவர் கையில் தண்ணீரைத் தாரை வார்த்து, மூவடி மண் அளந்த கொள்ளும் என்றான்.

சிறிய குறள்வடியில் இருந்த அவர் உயர்ந்தவர் உதவியொப்ப, மூதண்ட கூட முகடு முட்ட வளர்ந்தார், அவருடைய பேருருவைக் கண்டு அதியித்தவர்கள், அஞ்சினார்கள். திருமால் ஓரடியால் விண்ணுலகத்தையும் ஓரடியால் மண்ணுலகத்தையும் அளந்து. மூன்றாவது அடிக்கு இடம் எங்கே? என்றார்.

மகாபலி, தங்கள் மூன்றாவது அடிக்கு இடம் என் சென்னி என்றான்.

வாமன மூர்த்தி அவனுடைய தலையில் திருவடியை வைத்து அதல உலகத்திலேயே இருந்தினார்.

ரகுநந்தனா! இத்தகைய வித்தகரான வாமன மூர்த்தி அவதரித்த இடம் இது. மிகவும் புனிதமானது என்றார் முனிவர். அந்தச் சித்தாசிரமத்தில் பாம்பும் கீரியும், மயிலும் பாம்பும் ஒன்றுபட்டு உறவாடின. நுலிவாரும் மெலிவாரும் பகையின்றி ஒன்றுபட்டு நின்றனர்.


மாரீசன், சுபாகு வதம்:-




மாமுனிவர், இராமா! இனி நான் யாகத்தைத் தொடங்குவேன், தாடகையின் புதல்வர்களாகிய சுபாகுவும் மாரீசனும் அவர்களுடைய சேனைகளான அரக்கர்களும், உதிரத்தையும் மாமிசங்களையும் யாகத்தில் சொரிந்து அசுத்தப்படுத்தி இடர் புரிவார்கள். இனி நான் மௌன நிலையில் இருந்து யாகம் புரிவேன். அரக்கர்களை வதைத்து யாகத்தை நிறைவேற்றுவாயாக என்று கூறி யாகத்தைத் தொடங்கினார்.

முனிவர்கள் பலர் வேதமந்திரங்கள் கூறியும், யாகத்துக்கு உரிய திரவியங்களைச் சேகரித்துத் தந்தும் உதவினார்கள். வேதமந்திரங்களுடன் வேள்வி தொடங்கியது. இராமர் யாகசாலையில் தெற்கு வாசலிலும், இலட்சுமணர் வடக்கு வாசலிலும் வில்லேந்தி நின்று காவல் புரிந்தார்கள். தாடகையின் மக்களாகிய சுபாகுவும், மாரீசனும் ஆயிரம் ஆயிரம் அரக்கர்களும், உதிரத்தையும் மாமிசத்தையும் கல்லையும் மண்ணையும் சொரிந்து ஆரவாரம் செய்தார்கள். இராமர் சரக்கூடம் கட்டி யாகத்தில் தீய பொருட்கள் விழாதவண்ணம் செய்தார். ஒரு சிறந்த அம்பினால் சுபாகுவைக் கொன்றார். மாரீசன் மீது ஓர் அம்பை ஏவினார். மாரீசனை அந்த அம்பு கடலில் எறிந்தது. அவன் பாதாள உலகம் போய் இராவணனுடைய உதவி பெற்று உயிர்பெற்றான். அரக்கர்களைக் கண்டதுண்டங்களாக வதைத்து மாய்த்தார். பலர் ஓடி ஒளிந்தார்கள்.

தேவர்கள் பொருட்டு யாகம் ஐந்து நாள்கள் நடந்தது. எட்டு நுதலையுடைய பிரம தேவனாலும் செய்தற்கரிய யாகம் பரம மங்களமாக நிறைவேறியபின் முனிவர்கள் அவபிருது ஸ்நானம் செய்தார்கள்.

விசுவாமித்திரர் இராமரைக் கண்குளிரக் கண்டு, ரகுநாதா! எல்லாவுலகங்களையும் உன் உதரத்துள் வைத்துக் காத்தருளும் கடவுளாகிய நீ, இந்த வேள்வியைக் காத்தருளியதில் என்ன வியப்பு? இராகவா! உன் நாமம் வாழ்க, உன் புகழ் ஓங்குக! என்று கூறினார்.


தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 6


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Monday, June 22, 2009

இராமாயணம்-6



இராமாயணம்

பகுதி - 6

(முன்னைய பாகம் : செல்க)


கானகத்தில் தங்குதல்:-


அசோகங்கொழுந்து, மாங்கொழுந்து முதலிய கொழுந்துகளை விரித்து அரச குமாரர்களைப் படுக்க வைத்தார். கிழக்கே தலைவைத்துப் படுப்பது நல்லது. கண்கள் இடப்பக்கம் கீழே இருக்குமாறு படுத்தால் பிராண வாயு சூரிய நாடியிற் செல்லும். நாடியில் ஜெபம் செய்துகொண்டே இராமர் கண்ணுறங்கி விட்டார். இராமருடைய கால்மாட்டில் இளைய பொருமாள் படுத்துக் கண்ணுறங்கினார். உலக சொத்தாகிய அரச குமாரர்களை அரக்கர்களும், பேய்களும், விலங்குகளும் வாழ்கின்ற காட்டில் உறங்க வைத்துவிட்டு, முனிவருக்கு உறக்கம் வருமா? இராமருடைய தலைமாட்டில் அமர்ந்த இராமரையே உற்று நோக்கி கொண்டிருந்தார். இராமருடைய திருமுகத்தில் கருணை வழிந்துகொண்டிருந்தது. மற்றவர்கள் உறங்கினால் கருணையா வழியும்?

இராமா! உன் தந்தையாகிய தசரதன் நான் உரட்டிய உரட்டலுக்குப் பயந்து இந்தப் பொல்லாத கானகத்தில் உன்னை எவ்வாறுதான் அனுப்பினானோ? அவன் கல்மனம் படைத்தவன் போலும். நீ எனக்கு மகனாகப் பிறந்திருந்தால் ஆயிரம் விசுவாமித்திரன் வந்தாலும் உன்னைக் கானகத்துக்கு அனுப்பியிருக்கமாட்டேனே. நீ பாற்கடலில் பாம்பணையில் துயின்ற பரம்பொருள் அல்லவா? உலகம் உய்ய மனிதனாகப் பிறந்து ஒரு சுகமும்
இல்லாத இந்த வெய்ய கானகத்தில் பெறுந்தரையில் உறங்குகின்றாயே.. என்று மனதிற்குள் கூறிக்கொணடு கண்விழித்துக் கொண்டிருந்தார்.

விடியற்காலையில் மூவரும் எழுந்து நீராடிக் காயத்ரி மந்திர ஜெபம் செய்து புறப்பட்டார்கள். வழியில் சிறந்த ஓர் ஆசிரமத்தைக் கண்டார்கள். விசுவாமித்திரர் இராம இலட்சுமணரைப் பார்த்து, ரகு குல ரத்தினங்களே! இது மூவரும், தேவரும் யாவரும் போற்றும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் யோகம் செய்த ஆசிரமாகும். சிவமூர்த்தியே தவநிலையில் நின்ற இந்த ஆசிரமம் மிகவும் வலிமை வாய்ந்தது. அளவிடற்கரிய மகிமை உடையது. சிவமூர்த்தியின் யோகத்தைக் கலைக்க மன்மதன் முயன்ற போது சிவமூர்த்தியின் நெற்றிக் கண்ணால் அவன் அங்கம் அற்ற இருந்தபடியால் இது அங்கதேசம் என்று வழங்கப்படுகிறது என்று கூறினார்.அன்று அங்குச் சிவசிந்தையுடன் தங்கினார்கள்.


தாடகைவதம்:-

மறுநாள் மூவரும் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு புறப்பட்டார்கள். வழியில் கொடிய பாலைவனம் தென்பட்டது. தாங்கமுடியாத வெப்பமுடைய அக்கானகத்தில் பசி தாகத்தால் அரச குமாரர்கள் அல்லல் பட்டார்கள். விசுவாமித்திரர் இராம இலட்சுமணர்களுக்கு பலை, அதிபலை என்று இரண்டு விஞ்ஞைகளை உபதேசித்தார். அவர்களுக்கு அப்பொழுது பதினாயிரம் யானை பலம் உண்டாயிற்று. பசி தாகங்கள் மறைந்தன.

இராமர் முனிவரை நோக்கி, " குருநாதா! இந்தக் கானகம் புல் பூண்டு இல்லாமல் பாலைவனமாக இருப்பதற்கு என்ன காரணம்? சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணால் எரிந்ததா? என் தந்தையாருடைய ஆட்சியில் இப்படிக் அழியக் கூடாதே! " என்று வினாவினார்.

விசுவாமித்திர முனிவர் கூறுகின்றார். " இராகவா, இதுதான் தாடகை வாழ்கின்ற கானகம். உலோபகுணம் ஒன்றே ஆயிரமாயிரம் நற்குணங்களை அழிப்பதுபோல் தாடகை ஒருத்தியே இந்த வளமான கானகத்தை அழித்துப் பாலைவனமாக்கி விட்டாள். "

சகேது என்ற யட்சன் பிரமதேவரை வேண்டித் தவம் செய்து ஆயிரம் யானை பலத்துடன் ஒரு பெண் மகளைப் பெற்றான். அவளுக்குத் தாடகை என்று பெயர் சூட்டினான். அவள் சுந்தன் என்ற யட்சனைத் திருமணம் செய்த கொண்டாள். அவளுக்குச் சுபாகு, மாரிசன் என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள்.

தாடகையின் கணவனாகிய சுந்தன், அகஸ்தியரின் சிவபூசைக்குரிய பூமரங்களை ஒடித்துவிட்டான். அவர் தழல் எழ விழித்தார். அவன் சாம்பலாகினான. இதனை அறிந்த தாடகையும், அவளுடைய மக்களும் அகஸ்தியரை வணங்கிக் குற்றத்தை மன்னிக்க வேண்டும் என்று கேட்கும் பண்பை விட்டு, அசுரர்களைப்போல் கல்லும் மண்ணும் வீசி எறிந்து ஆரவாரம் செய்தார்கள். அகஸ்தியர் சினந்து, நீங்கள் அசுரர்களாகப் போகக் கடவது என்று சாபம் கொடுத்தார். யட்சர்களாகிய அவர்கள் அரக்கர்களாக மாறி முனிவர்களுக்கு எண்ணில்லாத கொடுமை புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

அவள் மலைப்பாம்புகளைக் கையில் வளையல்களாக அணிந்தகொண்டிருப்பாள் சூலத்தை ஏந்திக் கொண்டிருப்பாள்.

இராமா! தாடகையும், அவள் புதல்வர்களும் சதா முனிவர்களுக்குக் கொடுமை விளைவித்து வருகின்றார்கள். உலக நலன் கருதி நான் செய்யும் வேள்விகளைத் தடுத்துக் கெடுத்து விடுகின்றார்கள். தாடகை இராவணனிடம் உறவு கொண்டு அவன் ஏவலினால் அளவற்ற கொடுமைகளைச் செய்து வருகின்றாள் என்றார்.

தாடகை மனிதர்கள் வரும் வாசனையை மோப்பத்தால் உணர்ந்து ஆலகால விஷம் போலவும், வடமுகாக்கினி போலவும் சீறி எழுந்தாள். இராமர் அவளைப் பெண் என்று கருதிப் போர செய்யத் தயங்கி நின்றார்.

விசுவாமித்திரர் இராமனைப் பார்த்து, ரகுவீரா! இவளைப் பெண் என்று கருதாதே. எத்தனை எத்தனை கொடுமை உளவோ அத்தனையும் செய்பவள். முனிவர்களாகிய எங்களைக் கொன்று தின்னாமல் விட்டிருக்கின்றாள். அது கருணையினாலன்று. நாங்கள் தவத்தால் உடம்பை வாட்டிச் சதைப்பற்று இல்லாமல் இருப்பதனால், சாறு சீங்கிய கோது என்ற எங்களை விட்டிருக்கின்றாள். ஆதலால், இவளைக் கொல்லுவது அறம் ஆகும் என்றார்.

தாடகை, இராமன்மீது ஒரு சூலத்தை ஏவினாள். இராமர் அதனைப் பொடியாக்கினார். ஆன்றோர்கள் வாக்கே மறை மொழி என்றெண்ணி இராமர் தாடகைமீது சிறந்த அம்பினை ஏவினார். தாடகை மாண்டு விழுந்தாள். தேவர்கள் மலர் மழை பொழிந்தார்கள். இராமபிரானக்குச் சிறந்த பாணங்களைத் தருமாறு தேவர்கள் விசுவாமித்திரரிடம் வேண்டினார்கள்.

விசுவாமித்திரர் தவஞ்செய்து சிவபெருமானிடம் பெற்ற 500 வகையான அஸ்திரங்களையும், அதனைத் திருப்பியழைக்கின்ற உபசம்மாரங்களையும் இராமருக்கு முனிவர் பெருமான் உபதேசித்தருளினார்.

அந்த அஸ்திரதேவதைகள் இராமர் முன் தோன்றி, நீர் அழைக்கின்றபோது நாங்கள் வந்து உனக்கு உதவி புரிவோம் என்று கூறி மறைந்தன.

இராமரால் விசுவாமித்திரர் அடைந்த பயன் பத்துச் சதமாகம், விசுவாமித்திரரால் இராமர் அடைந்த பயன் 90 சதமாகும். ஜபம்
புரிபவனுக்கு ஜெபமாமலை வேண்டும். பூஜை புரிபவனுக்கு நல்ல நாதமுள்ள மணி வேண்டும். எழுதுகின்றவனுக்கு எழுதுகோல் வேண்டும். இந்த அஸ்திர லாபத்தை முனிவரால் இராமர் பெற்றார்.


தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 5


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Friday, June 19, 2009

இராமாயணம்-5



இராமாயணம்

பகுதி - 5

(முன்னைய பாகம் : செல்க)


விசுவாமித்திர முனிவருடன் கானகம் செல்லல்:-

விசுவாமித்திரர் கூறினார், ஆதித்தன் குலந்தழைக்க வந்த அரசரேறே! நான் சந்நியாசி. எனக்கு என்ன வேண்டும்? எனக்கு எதிலும் விருப்பு வெறுப்பு இல்லை. யாகம் மூன்று வகைப்படும்.

1. பகைவரை அழிக்கச் செய்வது. அது அபிசார ஓமம் எனப்படும்.

2. தான் உய்யப் பயன் கருதிச் செய்வது. அது புத்ர காமேஷ்டி - அசுவமேதம் முதலியன.

3. உலகம் உய்யப் பொது நலங்கருதிச் செய்வது. அது உத்தம யாகம் எனப்படும். வேந்தர் பெருமானே! உலக நலன்கருதி நான் தருக்கள் நிறைந்த குளிர்ந்த கானகத்தில் யாகம் செய்வேன். அதனை அரக்கர்கள் தடுத்து இடையூறு செய்கின்றார்கள். ஆதலால், அந்த வேள்வியைக் காவல் புரிய ஒருவனையனுப்ப வேண்டும் என்று கூறினார்.

நல்லது, சுமந்திரரே! ஒரு போர் வீரனை அனுப்பு..

மன்னவனே! சாமான்யமான போர் வீரனால் ஆகாது...

சுவாமீ! சேனைத் தலைவனை அனுப்புகின்றேன்...

அன்பனே! சேனாதிபதியால் ஆகாது...

ஐயனே! அடியேன் வருகின்றேன்...

வேந்தனே! உன்னாலும் ஆகாது, உன்னைப் பார்க்கினும் சிறந்தவன் ஒருவன் இருக்கின்றான், அவனை அனுப்புக...

குருநாதா! என்னைப் பார்க்கிலும் சிறந்தவன் அயோத்தியில் இருக்கின்றானா?, நான் பத்து ரதங்களை வென்றவன், ஓப்பாரும் மிக்காரும் இல்லாதவன், அடியேன் சம்பரனை அழித்தவன், தோள்வலியும் வாள்வலியும் மிக்கவன், சுமந்திரரே! என்னைப் பார்க்கிலும் சிறந்தவன் அயோத்தியில் இருக்கின்றானா?...

கொற்றவரே! உம்மைவிடச் சிறந்தவர் சுவர்க்க மத்திய பாதலம் ஆகிய மூவுலகங்களிலும் இல்லை...

குருநாதா! சுமந்திரர், அதிநுட்பமான மதிநுட்பம் உடையவர் அவர் கூறியதைக் கேட்டீரா? என்னைவிடச் சிறந்தவன் இல்லை, இல்லாததை இருப்பதாக எண்ணி கூறுகின்றீர், ஓருவன் ஆமை மயிர்க்கம்பளம் கேட்டானாம், இன்னொருவன் குதிரைக் கொம்பு பொடிடப்பி கேட்டானாம், அதுபோல எனக்கு நிகர் ஒருவரும் இல்லை, உண்டு என்று தாங்கள் கூறுகின்றீர்கள்...

தசரதா! உன்னைப் பார்க்கிலும் ஒரு கோடி மடங்கு உயர்ந்தவன் அயோத்தியில் இருக்கிறான், அவனை அனுப்பு, இல்லாத ஒன்றை இருப்பதாக நான் ஒருபோதும் கூறமாட்டேன். என் வாக்கு சத்தியம்...

விசுவாமித்திருடைய வசனங்களைக் கேட்டுத் தசரதர் சிறிது சிந்தித்தார்.

குருநாதா! என்னைப் பார்க்கிலும் பலமடங்கு உயர்ந்தவர் வசிட்ட முனிவர். அவரை அழைத்துப் போங்கள்...

விசுவாமித்திரர் புன்னகை பூத்தார். அவர் ஒரு தாடி நான் ஒரு தாடி. இரு தாடிகளும் சென்று தாடகையிடம் வாதாடி நிற்க வேண்டும். நான் கூறுவது வசிஷ்டரை யன்று. அவன் வேத வேத்யன். அவன்தான் இராமன், மன்னவனே, நீ பெற்ற நான்கு மைந்தர்களில் கரிய செம்மல் அரிய ஆற்றல் படைத்தவன். இராமனை அனுப்புக என்றார்...

இராமனையனுப்பு என்ற சொல் புண்ணிலே வேல் பாய்ந்தது போல் மன்னவனை வாட்டி வதைத்தது. அளவில்லாத அல்லல் அடைந்தார். விசுவாமித்திரருடைய திருவடியில் வீழ்ந்தார். கவலைக் கடலில் ஆழ்ந்தார்.

குருநாதா! இராமன் இளம் பாலகன். போர் முகம் அறியாதவன். மாயத்தில் வல்ல அரக்கர்களை வெல்லும் திறம் அறியாதவன். அடியேன் பல போர்களில் வெற்றி பெற்றவன். நான் வருகின்றேன். அரக்கர்களைக் கொன்று வேள்வியை முடித்துக் கொடுப்பேன் என்றார்...

தசரதர் இராமனைத் தன்னுடன் அனுப்ப மயங்கிய தன்மையினால் விசுவாமித்திர் முனிவர் வெகுண்டு எழுந்தார். அவருடைய கோபக்கனல் உலகங்களை வெதுப்பியது. சூரியன் மேலண்டத்துக்குப் போய் மறைந்தான். நிலம் நடுங்கியது, திசை யானைகள் அஞ்சி ஒடுங்கின, சராசரங்களெல்லாம் அசைந்தன.

வசிட்ட முனிவர் விசுவாமித்திர முனிவரின் சீற்றத்துக்கு அஞ்சித் தசரதரைப் பார்த்து மன்னவரே! இராமனை விசுவாமித்திரருடன் அனுப்பி வையுங்கள். அதனால் இராமனுக்கு ஆதித்த குலத்துக்கும் நன்மை உண்டாகும். என் வார்த்தையைத் தட்ட வேண்டாம் என்று கூறினார்...

தசரதர் சுமந்திரரைப் பார்த்து, இராமனையும், இலட்சுமணனையும் அழைத்து வருமாறு கட்டளையிட்டார். சுமந்தரர் கௌசலையின் அரண்மனைக்குச் சென்று. இந்தத் தகவல்களைக் கௌசலையிடம் கூறி இராமனை அழைத்துக்கொண்டு வந்தார்.

இராமர் வசிட்டரையும், விசுவாமித்திரரையும், தந்தையாரையும் திருவடியில் வீழந்ந்து வணங்கினார். தசரதர் இராம இலட்சமணரின் கரங்களைப் பற்றி விசுவாமித்திரருடைய கரத்தில் வைத்து, சுவாமி! இவர்களுக்குத் தாய், தந்தை, குரு எல்லாம் தேவரீர்தாம். இவர்களைப் பெறுவதற்கு நான் அறுபதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்தேன். என் உயிரைத் தங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். திரும்பவும் கொண்டு வந்து சேர்க்கவும் என்று தழுதழுத்த குரலில் சொன்னார்.

விசுவாமித்திர முனிவர் விடைபெற்றுப் புறப்பட்டார். வாகனங்களில் சென்றால் எறும்பு, புழு முதலிய சிற்றுயிர்கள் மாண்டொழியும். அதனால், முனிவர்கள் தேர் முதலிய ஊர்திகளில் செல்லாமல் நடந்தே பிரயாணம் செய்வார்கள். அதனால், விசுவாமித்திரரி நடந்த போவதனால், இராம, இலட்சுமணர் தொடர்ந்து போவதாயிற்று. வழியில் மிகப் புனிதமான சரயு நதியைக் கண்டார்கள். அதில் நீராடி மகிழ்ந்து ஒரு மலர்ச் சோலையை அடைந்தார்கள். அங்குக் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துச் சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்தார்கள்.

காணாமல் கொடு, கோணாமல் கொடு, கண்டு கொடு என்பது பழமொழி. சூரியன் உதிப்பதற்கு முன்னமேயே சூரியனுக்கு அர்க்கியம் கொடுப்பது, காணாமல் கொடுப்பதாகும். சூரிய பகவான் உச்சியிலிருக்கம் பொழுது அர்க்கியம் கொடுப்பது கோணாமல் பொடுப்பதாகும். சூரிய பகவான் மேற்கடலில் மூழ்கும்பொழுது சூரியனைப் பார்த்துக்கொண்டே அர்க்கியம் கொடுப்பது கண்டு கொடுப்பதாகும். இரவில் படுக்க வேண்டுமே, எவ்வாறு படுப்பார்கள்?


தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 4


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Wednesday, June 17, 2009

இராமாயணம்-4



இராமாயணம்

பகுதி - 4

(முன்னைய பாகம் : செல்க)


திரு அவதாரம் :-

சித்திரை மாதம் நவமி திதி புனர்வசு நட்சத்திரம் கடக லக்கினத்தில் இராமபிரான் திரு அவதாரம் செய்தார்.

ஒருபகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்(து)
அருமறைக் குணர்வரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்தெழில் காட்டும் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை.

மறுநாள் பூச நட்சத்திரத்தில் பரதரும். அதற்கு மறுநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் இலட்சுமணரும் சத்ருக்னரும் தோன்றினார்கள்.

மன்னவர்க்கு மகப்பேறு உண்டானதால் வரம்பில்லாத மகிழ்ச்சி அடைந்தார். அன்னதானமும், சொர்ண தானமும் வஸ்திர தானமும், பூதானமும், கோ தானமும் அள்ளி, அள்ளி தான தருமங்கள் செய்தார். ஏழாண்டுகள் வரியில்லை என்று பறை அறையச் செய்தார். கருவூலத்தைத் திறந்து எல்லாரும் அங்குள்ள நிதிகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். ஆலயங்களைப் புதுப்பிக்குமாறு கட்டளையிட்டார்.

எல்லாரும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார்கள். அயோத்தி மாநகரம் இன்பவெள்ளத்தில் நீந்தியது. வசிட்ட முனிவர் இராமன், பரதன், இலட்சுமணன், சத்ருக்னன் என்று பெயர் சூட்டினார். நான்கு வேதங்களைப் போல் நான்கு குமாரர்களும் இனிது வளர்ந்தார்கள். ஐந்து வயதுக்கு மேல் அவர்கள் வசிட்டருடைய ஆசிரமத்தில் வளர்ந்து கலை பயின்றார்கள்.

இராமர் வசிட்டருடைய குடிசையில் வளர்ந்தபடியினால் ஞானம் வளர்ந்தது. மாற்றாந் தாயாகிய கையேகி, கானகம் போ என்றவுடன் உடுத்த உடையுடன் காட்டுக்குப் போனார். அரண்மனையில் வளர்ந்திருந்தல் அட்வகேட் வீட்டுக்குப் போயிருப்பார். இராமர் தானே வலிந்து சென்று வறியவர்க்கு உதவி செய்வார். அவர்களுடைய குறைகளைக் கேட்டு நிறைவு செய்வார்.

விசுவாமித்திரர் வருகை :-

இராமருக்குப் பன்னிரண்டு வயது நிரம்பியது. சகல கலைகளிலும் வல்லவராக, மக்களுக்கு நல்லவராக விளங்கினார். சக்ரவர்த்தி அரசவையில் இந்திர பகவானைப் போல் சுந்தர வடிவுடன் வீற்றிருந்தார். வசிட்டர், சுமந்திரர், யாபாலி முதலிய அறிஞர்கள் அவரைச் சூழ்ந்து அமர்ந்திருந்தார்கள்.

உலகத்தை இரண்டாவதாக சிருஷ்டிக்கத் தொடங்கினவரும், காயத்ரி மந்திரத்துக்கு அதிதேவரையும், அளவற்ற தவம் செய்தவருமாகிய விசுவாமித்திர முனிவர் அங்கு எழுந்தருளினார்.

கடைக்காவலன் ஓடிவந்து மன்னர் பெருமானை வணங்கி, வேந்தர் பெருமானே விசுவாமித்திர முனிவர் வருகின்றார் என்று கூறினான். சக்ரவர்த்தி பிரமதேவரை எதிர்கொள்ளச் செல்லும் இந்திரபகவானைப்போல் பூசைக்குரிய சாதனங்களுடன் எதிர் சென்று, என் குலம் செய்த புண்ணியம் என்று வலம் செய்து வணங்கி, அவரை அழைத்துக்கொண்டு போய் மணித்தவிசில் இருத்தி, களபகஸ்தூரி சந்தனங்களாலும் மலர்களாலும் பாதபூசை செய்தார்.

நாம் ஓர் அதிகாரியைப் பார்க்கப் போவோமானால் அவரது அருகில் உள்ளவரைப் புகழுரை கூறி, அவரை நம் வசமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் அதிகாரியிடம் கூறிய கோரிக்கையை அவர் முட்டுக்கட்டை போட்டுத் தடுத்துவிடுவார். இந்த உலகியல் ஞானத்தை உடைய விசுவாமித்திரர், வசிட்டரை வணங்கித் தசரதரைப் பார்த்துக் கூறுகின்றார்.

தசரதா! வசிட்டரைக் குருநாதராகப் படைத்த உன் தவம் அளவிடற்கரியது. வசிட்ட முனிவருடைய கருணை உனக்கிருப்பதால் உனக்கு அனைத்து கருமங்களும் எளிதில் சித்தியாகும். மன்னர் மன்னரே! நேற்று நான் இந்திர உலகம் சென்று இந்திரனைச் சந்தித்தேன். இந்திரனே! சுகமா ? என்று கேட்டேன். இந்திரன் தசரதருடைய கருணையினால் சுகமாக இருக்கிறேன் என்றான். இந்திரனுடைய பொன்னுலகைச் சம்பராசுரன் கவர்ந்து கொண்டான். தசரதர், கைகேயி தேர் நடாத்தச் சென்று சம்பராசுரனைக் குலத்தோடு அழித்துப் பொன்னுலகை இந்திரனுக்கு அளித்தார். அந்த வெற்றித்திறத்தை விசுவாமித்திரர் இங்கே குறிப்பிடுகின்றார்.

தசரதா! உன்னைப் போன்ற உத்தம அரசனை எங்கும் காண இயலாது. நீ சத்திய சம்பந்தன். பரோபகாரி. நல்லற மூர்த்தி, நற்குண சீலன். உனக்கு எல்லாம் தெரியும். இல்லை என்ற கேட்பவருக்கு இல்லையென்று சொல்லத் தெரியாது. அளவற்ற பெருமையுடைய அரசர் பெருமானே! என்னைப்போன்ற முனிவர்களும், தேவர்களும் தங்களுக்கு ஓர் இடையூறு வந்தால் மலைகள் தோறும் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானிடம் சென்று முறையிடுவோம். கயிலை மலை சென்று கண்ணுதற் பெருமானிடம் முறையிடுவோம். திருப்பாற்கடலில் சென்று அரவணையில் அறிதுயில் புரிகின்ற அரிமுகுந்தனிடம் முறையிடுவோம். சத்தியலோகம் சென்று பரம தயாளமூர்த்தியாகிய பிரம தேவரிடம் முறையிடுவோம். பொன்னுலகம் சென்று அமராவதியை அரசு புரிகின்ற இந்திரனிடம் முறையிடுவோம். இங்கெல்லாம் சென்று நிறைவேறாத குறைகளை அயோத்தி மாநகரம் வந்து உன்னிடம் முறையிடுவோம். எங்களக்கு உன்னைத் தவிர புகலிடம் ஏது? என்று இனிய வசனங்களால் கனியமுதம் போல் கூறினார்.

புகழுரைக்கு மயங்காதார் யார்? கரடியைக் கண்ணாடிக் காட்டிப் பிடிக்க வேண்டும். சிங்கத்தைத் தோல்வலை போத்திப் பிடிக்க வேண்டும். யானையைக் குழி தோண்டிப் பிடிக்க வேண்டும். பெரிய மனிதர்களைப் புகழுரையால் வசம் செய்ய வேண்டும். இந்த யுக்தியைத் தெரிந்த விசுவாமித்திரர் தசரதரைத் தன்மை நவிற்சியால் புகழ்ந்து பேசினார். தசரதர் அகமும், முகமும் மலர்ந்தது. குருநாதா! என்னிடத்தில் ஏதாவது ஒரு சிறப்பு இருக்குமானால் அது தேவரீருடைய ஆசீர்வாதத்தினால்தான். நான் தங்களுடைய அடிமை. நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள். செய்கின்றேன் என்றார்.


தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 3


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Tuesday, June 9, 2009

இராமாயணம்-3



இராமயணம்

பகுதி - 3

(முன்னைய பாகம் : செல்க)


வசிட்ட முனிவர், தசரதரே! உனக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும். சிறந்த மகப்பேறு கிடைக்கும். அங்க நாட்டில் மனுகுலத்தில் உத்தானபாதனுடைய புதல்வன் ரோமபாதன் என்னும் மன்னன் அரசு புரிகிறான். அந்த நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகளாக மழையில்லாமல் பஞ்சம் நேர்ந்தது. கலைக்கோட்டு முனிவரை அங்கு அழைத்து வந்தபடியால் மழை பொழிந்து வளம் பெருகியது. உன்னுடைய புதல்வியாகிய சாந்தையை உரோமபாத மன்னனுக்கு ஸ்வீகாரமாகக் கொடுத்தனையல்லவா? அப்பொழுது அந்தச் சாந்தையைக் கலைக்கோட்டு முனிவர் திருமணம் செய்து கொண்டார். அதனால், அவர் உனக்கு மருமகராவார். அவர் அளவற்ற தவம் செய்தவர். சமானமில்லாதவர். அவரை அழைத்துக் கொண்டு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்வாயானால் உனக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்று கூறினார்.

தசரதச் சக்கரவர்த்தி பரிஜனங்கள் புடை சூழ, தேரேறி அங்க நாட்டை அடைந்தார். உரோம பாதர் அன்புடன் வரவேற்று உபசரித்தான். கலைக்கோட்டு முனிவரை அயோத்திக்கு அனுப்புமாறு வேண்டிக் கொண்டான். தசரதருடைய வேண்டு கோளுக்கிணங்கி கலைக்கோட்டு முனிவர் என்கின்ற ரிஷ்யசிருங்கர் தன் மனைவியாகிய சாந்தையுடன் அயோத்தி மாநகருக்கு எழுந்தருளினார். தசரதர் ஓராண்டு அவருக்கு வந்தனை வழிபாடு செய்தார்.

அவர் ஒருநாள் ரிஷ்யசிருங்கரை வணங்கி தவ முனிவரே! அடியேன் அறுபதினாயிரம் ஆண்டு இவ்வுலகை ஆண்டேன். பிறிதொன்றை வேண்டேன். எனக்குப் பின் நல்ல தலைவன் இல்லையே என்று மக்கள் வருந்துவார்களே என்று நான் வருந்துகின்றேன். அதலால், இந்த உலகத்தை அறநெறியில் நிறுத்தி ஆட்சி புரியும் மாட்சியுடைய ஒரு புத்திரன் உண்டாக அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

தார்காத்த நறுங்குஞ்சித் தனயர்களென் றவமின்மை
வார்காத்த வனமுலையார் மணிவயிறு வாய்த்திலரால்
நீர்காத்த கடல்காத்த நிலங்காத்தே னென்னிற்பின்
பார்காத்தற் சூரியாரைப் பணிநீயென் றடிபணிந்தான்.

கலைக்கோட்டு முனிவர், புத்திராகாமேஷ்டி யாகம் செய்தால் உனக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று கூறினார். பின்னர் கலைக்கோட்டு முனிவர், நகர்ப்புறத்தே பெரிய யாகசாலை அமைத்து யாகத்துக்குரிய திரவியங்களைக் குவித்து வசிட்ட முனிவர் முதலிய தவசீலர்கள் துணைபுரிய வேதமந்திரங்களைக் கூறி மிகச் சிறந்த வேள்வியைச் செய்தார்.

பூர்ணாகுதி கொடுத்தவுடன் ஒரு தெய்வபூதம் யாகத்தில் தோன்றி யாக பாயசத்தை வழங்கி மறைந்தது. கலைக்கோட்டு முனிவரின் கட்டளைப்படி யாகபாயசத்தை ஒரு பாதி கௌசலைக்கும், மற்றொரு பாதி கைகேயிக்கும் மன்னர் வழங்கினார். கொடுத்து பழகிய கௌசலையும் கைகேயியும் தங்களுக்கு மன்னர் வழங்கிய பாயசத்தில் பாதி, பாதி சுமித்திரைக்கு வழங்கினார்கள். மன்னவரால் கொடுபடாமல் விடுபட்ட சுமித்திரைக்கு இரண்டு பங்கு கிடைத்தது. மூன்று தாய்மார்களும் கரு உற்றார்கள். பன்னிரண்டு மாதங்கள் கரு இருந்தார்கள்.

நாம் எல்லாருமே பன்னிரண்டு மாதம் கருவில் இருக்கின்றோம். அது எவ்வாறெனில் ஆன்மாக்கள் வானத்திலிருந்து மழை வழியாக மண்ணுலகத்தை அடைகின்றன. அவ்வாறு வந்த உயிர்கள் காய், கனி, தானியங்களில் கலந்து தந்தையார் வயிற்றில் 2 மாதங்கள் கரு இருந்த பின்னர், தாய் வயிற்றில் பத்துமாதம் கரு இருந்து மகவாகப் பிறக்கின்றன. ஆகவே உயிர்கள் கருவில் பன்னிரண்டு மாதங்கள் இருக்கின்றன. முதலில் நம்மை கருச்சுமந்தவர் தந்தையார். ஆதனால்தான் நம்முடைய பெயருக்கு முன்னால் தந்தையார் எழுத்தைப் பொறிக்கின்றோம்.

இராமருடைய கரு மன்னவனிடம் இருந்தில்லாமல் பாயாச வழியாகத் தாய்வயிற்றை அடைந்ததால் இவர்கள் 12 மாதம் கருச்சுமந்தார்கள்.


தொடரும் ...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 2


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Friday, June 5, 2009

இராமாயணம்-2



இராமாயணம்

பகுதி - 2

(முன்னைய பாகம் : செல்க)


கங்கைக்கரையில் தர்மாங்கதர் என்ற ஓர் அந்தண முனிவர், "ஓம் நமோ நாராயணாய" என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார். ஓர் அக்கிரகாரத்தில் ஓர் அந்தணர் வாழ்ந்தார். அவர் மிகவும் சாந்தசீலர். சந்தனம் போல குளிச்சியாக இருப்பவர். இவருடைய மனைவி பெயர் கலகை. இவள் அக்கினித் திராவகம் போன்றவள். நெருப்பு மலை போல் கணவன் மீது சீறிச் சீறி விழுவாள். அவர் வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்வாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்யமாட்டாள். ஏட்டிக்குப் போட்டியாக எதையும் செய்வாள்.

கலகை! எனக்கு சீதளத்தால் நீர்க்கொண்டிருக்கின்றது. மிளகுக் குழம்பு வை! என்றார். அவள் நீற்றுப் பூசணிக்காய் மோர்க்குழம்பு வைத்தாள். அது சீதளத்தை அதிகரிக்கச் செய்தது.

மற்றொரு நாள், கலகை! குடு அதிகமாகிச் சீதபேதியாகின்றது. மிளகாய் இல்லாமல் மிளகு ரசம் வை! என்றார். அவள் கத்திரிக்காயும், பச்சை மிளகாயும் கடைந்து வைத்தாள். கலகை! கண் எரிகின்றது. எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்றார். அவள் குளிர்ந்த நீரைத் தலையில் விட்டுக் கொதித்து நின்றாள். கலகை! உறக்கம் வருகின்றது. நான் படுக்க வேண்டும் என்றார். படுக்கின்ற இடத்தில் தண்ணீரை வார்த்துக் குளமாக்கிப் படுக்க விடாமல் அவள் செய்து விட்டாள். இவ்வாறு எல்லவற்றுக்கும் எதிர்மறையாகச் செய்து வந்தாள். இதனால் வெறுப்படைந்து வேதியர் தலையில் துண்டு போட்டுக் கொண்டு வெளியில் கிளம்பிச் சென்றார். ஏதிரில் ஓர் ஆப்த அன்பர் வந்தார். அவர் ஐயரே! எங்கே போகிறீர்? என்று கேட்டார்.

மனைவியின் துன்பம் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவள் பேய். ஆதனால் வீட்டைவிட்டு வெளியேறிப் போகின்றேன் என்றார்.

பேய் வேப்பிலை அடித்தால் ஓடிப்போகுமே என்றார் அன்பர்.

இவள் மிருகம் என்றார்.

மிருகங்களையெல்லாம் சர்க்கஸில் அடக்கி ஆளுகின்றார்களே! ஒரு பெண்ணை உன்னால் அடக்கி ஆளமுடியவில்லையே! என்றார் அன்பர்.

இவள் பூதம் என்றார்.

பிருதிவி, வாயு, தேயு, அப்பு, ஆகாசம் என்ற பஞ்ச பூதங்களை நாம் அடக்கி ஆள்கிறோமே! இந்தப் பெண் பிள்ளையை அடக்கி ஆளமுடியவில்லையா? அவள் என்னதான் செய்கிறாள் ? விவரமாகச் சொல் என்றார்.

ஐயா! அவள் செய்யும் கொடுமை ஒன்றா, பத்தா, நூறா, ஆயிரமா? லட்சோப லட்சம் குற்றங்கள் செய்கிறாள். அவற்றை நான் எங்ஙனம் சொல்வேன்? சுருக்கமாகச் சொல்லுகிறேன். வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்கிறாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்கிறாள்.

அன்பரே! நான் சொல்வதைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வேண்டாம் என்பதை, வேண்டும் என்று சொல்லுங்கள். "முயற்சி உயர்ச்சி தரும்" என்று கூறினார்.

அந்தணர் வீட்டுக்குச் சென்றார். அவருக்கு அகோரப்பசி. கலகை! இன்று நான் சாப்பிடமாட்டேன் என்றார்.

அவள் கோபத்துடன், உனக்காகச் சமைத்து வைத்திருக்கிறேன். சாப்பிடு என்று உணவு கொடுத்தாள்.

கலகை! நான் உடுத்திய வேட்டியை நீ தொடக் கூடாது. உன் கை படக்கூடாது.

அவள், உனக்கு ஆசாரம் மிகுந்து விட்டதா? ஞானம் முதிர்ந்துவிட்டதா? நான் இன்று முதல் உன் வேட்டியைத் தோய்த்துப் போடுவேன். நீ செய்வதைச் செய் என்று கூறி அவருடைய உடைகளைத் தூய்மையாகத் தோய்த்து உயர்ந்த கொடியில் உலர்த்தி விடுவாள்.

கலகை! உன்மேல் பட்ட காற்று என்மேல் படக்கூடாது என்றார். அவள், உனக்கு இவ்வளவு உயர்வு வந்துவிட்டாதா? என்று சீறிவிழுந்து சிறிய விசிறியை எடுத்துச் சுகமாக வீசிவிட்டாள்.

கலகை! எண்ணெய் தேய்த்துக் குளிக்க மாட்டேன் என்றார். அவள் நமது நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் நல்லது. எண்ணெய் தேய்த்துக் குளித்துத்தானாக வேண்டும் என்று கூறி எண்ணெயைக் கொண்டு வந்தாள்.

சரி, நானே எண்ணை தேய்த்துக் கொள்கிறேன். நீ போ என்றார்.

அவள் ஏன்? நான் எண்ணெய் தேய்த்தால் என்ன குற்றம்! நான்தான் தேய்ப்பேன். வாயை மூடிக்கொண்டு இரு என்று கூறி, கணவனுடைய உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்தக் குளிக்க வைத்தாள்.

அந்த அந்தணர் கலகையிடம், வேண்டும் என்பதை வேண்டாம் என்று கூறியும், வேண்டாம் என்பதை வேண்டும் என்று கூறியும் காரியத்தைச் சாதித்துக் கொண்டு சுகமே வாழ்ந்தார். அந்த ஆப்த அன்பரை ஒருநாள் சந்தித்தார். ஐயரே! இப்பொழுது உன் வீட்டுக்காரி எப்படி நடந்து கொள்கிறாள்? என்று கேட்டார்.

இப்பொழுது எல்லாம் வெகு சுகமாக நடைபெறகின்றன. ஆனால், வேண்டாம் என்பதை வேண்டும் என்றும் வேண்டும் என்பதை வேண்டாம் என்று கவனமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்பொழுது அவள் துணி தோய்த்துப் போடுகின்றாள், எண்ணெய் தேய்க்கின்றாள். விசிறி விடுகின்றாள். படுக்கை விரிக்கின்றாள், எல்லாத் தொண்டும் செய்கின்றாள். ஒரு குறையும் இல்லை என்றார்.

ஒருநாள் அந்த வேதியர் மனைவியைப் பார்த்து, கலகை! நாளை என் தந்தையாருடைய சிரார்த்தம். வீடு வாசல் மெழுகாதே. நீராடாதே. சமைக்காதே என்ற கூறினார். அவள் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்து வைத்தாள். பிண்டப்பிரசாதம் போட்டு இதை ஜலதாரையில் கொட்டுமாறு சொல்லியிருக்க வேண்டும். சொல்லிருந்தால் சுத்தமான தண்ணீரில் கொட்டியிருப்பாள். அவர் சற்றுக் கவனக்குறைவாக, பிதுர் பிரசாதத்தைச் சுத்தமான நீரில் கொட்டுமாறு கூறிவிட்டார். அவள் அதைக் கொண்டு போய் அசுத்தமான தண்ணீரில் கொட்டிவிட்டாள். கோபமே வராத குணக்குன்றமாகிய அந்த அந்தணர் கோபித்து, பாவி! எனக்கு ஆயிரமாயிரம் குற்றங்கள் செய்தாய். அத்தனையும் பொறுத்துக்கொண்டேன். பிதுர்களின் தூய பிரசாதத்தை ஜலதாரை தண்ணீரில் கொட்டினாயே! இது எவ்வளவு பெரிய பாவம்? கலகை! நீ அலகையாகப் போகக் கடவது என்று சாபமிட்டார். அந்த வேத வித்தின் சாபத்தால் அவள் பெண் பேயாக மாறினாள். குடிக்க நீரும், தங்க நிழலுமின்றி அங்கும் இங்குமாக அலைந்து உலைந்து திரிந்து வேதனைப்பட்டாள்.

கங்கைக்கரையில் "ஓம் நமோ நாராயணாய" என்று மந்திர ஜபம் செய்து கொண்டிருந்த தர்மாங்கதரை இந்தப் பெண் பேய் பிடிக்கச் சென்றது. நெருப்பை விழுங்கச் சென்ற எறும்பு போல் இருந்தது. முனிவர் புன்னகை புரிந்து கமண்டலத் தண்ணீரை, "ஓம் நமோ நாராயணாய" என்று தெளித்தார். அந்த மந்திர நீரால் அவளது பாவமும் சாபமும் விலகிவிட்டன. அவள் அவருடைய அடிமலர் மீது வீழ்ந்து தொழுது, அழுது, தபோதனரே! நான் கலகை என்ற பெயருள்ள பெண். கணவன் மனம் நோகப் பலப்பல குற்றங்கள் செய்த பாவத்தால், அவருடைய சாபத்தால் பேயாகத் திரிந்து அலைந்து நொந்தேன். எனக்கு அருள் புரிவீராக என்று வேண்டி நின்றாள். தர்மாங்கத முனிவர் அவளுக்குத் தண்ணருள் புரிந்து அம்மா! அழாதே. நான் அறிவு தோன்றிய நாள் தொட்டு இன்றுவரை செய்த தவத்தில் பாதி உனக்குத் தந்தேன் என்றார். வைகுண்டத்திலிருந்து பொன்மணி விமானம் ஒன்று வந்து இருவரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றது. அவர்கள் பரவாசுதேவனைச் சேவித்தப் பேரின்பத்தை எய்தினார்கள்.

ஸ்ரீமன் நாராயணர் தர்மாங்கதரைப் பார்த்து, தர்மாங்கதரே! நீ பூவுலகில் ஆதித்தர் குலத்தில் பிறந்து தசரதன் என்ற பேர் பெற்று அறுபதினாயிரம் ஆண்டு தவம் செய்வாயாக. நான் உனக்கு மகனாகப் பிறந்து ராமன் என்ற பெயருடன் விளங்கி இராவண வதம் செய்து நாட்டுக்கு நலம் செய்வேன். அம்மா! கலகை! நீ கேகய நாட்டில் அசுவபதி என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்து கைகேயி என்ற நாமத்துடன் வளர்வாய். தர்மாங்கதருடைய தவத்தில் பாதி பெற்றதனால் கௌசலை வயிற்றில் நான் பிறந்தாலும் என்னை நீ அன்பு மகனாக வளர்ப்பாயாக. நீ பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெருமையுடன் வாழ்வாய். சமயம் வரும்பொழுது என்னைக் கானகம் போகச் சொல்லிக் கலகம் செய்வாய் என்றார்.

திருமாலுடைய சக்கரம்-பரதராகவும், சங்கு-சத்துருக்கனனாகவும், ஆதிசேஷன் - இலக்குமணனாகவும் பிறக்குமாறு திருமால் கட்டளையிட்டருளினார்.

இவற்றையெல்லாம் வசிட்டர் தன் ஞானக் கண்ணால் கண்டார்.

தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு: இராமாயணம்-1

search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்


_*_*_*_

Sunday, May 24, 2009

இராமாயணம்-1



இராமாயணம்

பகுதி - 1

இந்த இராமாயணம் தெய்வத்திரு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் எழுதப்பட்டது. இதனைத் தொகுத்தவரான Dr. J. பெருமாள் M.B.A, Ph.D அவர்களுக்கும் என் நன்றிகள்.


கங்கை நதிபாயும் நீர் வளமும் திலவளமும் குடிவளமும் பொருந்திய நாடு கோசல நாடு. வளமை மிகுந்த இந்தக் கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி என்ற திருநகராகும். இந்நகரத்தில் வாழும் மக்கள் மறந்தும் தீங்கு செய்யாதவர்கள். வறுமையால் வாடி யாசிப்பவர் இந்நகரில் இல்லாததால் தருமகுணசீலர்கள் அள்ளிக் கொடுக்கும் தன்மை இன்றி வாழ்ந்தனர். அயோத்தி என்ற சொல்லுக்கு யுத்தம் இல்லாத ஊர் என்று பொருள். இந்த நகரம் போரும் சினமும் இன்றிச் சாந்தி நிகேதனமாகத் திகழ்ந்தது. எல்லோரும் அனைத்து நலங்களும் பெற்று இன்புற்று வாழந்தார்கள்.

இந்த அயோத்திமா நகரை, ஆதித்தன் குலத்தில், அஜமகாராஜனுக்கும் இந்துமதிக்கும் மகனாகப் பிறந்த தசரதச் சக்ரவர்த்தி தாய்போல் மக்களுக்குத் தண்ணருள் புரிந்து அரசு புரிந்து வந்தார். பயிருக்குத் தண்ணீர் துணை புரிவது போலவும், உயிருக்கு உடம்பு ஆதாரமாக இருப்பது போலவும் மக்களுக்கு இம்மன்னவர் கருணை புரிந்து வந்தார். இவருடைய ஆட்சியிலே தருமம் தழைத்து ஒங்கியது. இவருடைய ஆட்சி மாட்சியுடன் விளங்கியது. பகைவர்களாலும், விலங்குகளாலும், கள்வர்களாலும் துன்பம் இன்றி மக்கள் இன்பம் பெற்று வாழந்தார்கள். தசரத மன்னருடைய கரங்கள் ஈந்து ஈந்து சிவந்தன. இவருக்குக் கௌசலை, கைகேயி, சுமித்திரை என்று மூன்று மனைவியர் இருந்தார்கள். இவருக்கு மக்கட்பேறு இல்லாமையினால் அவ்வப்போது வேறு வேறு மாதர்களைத் திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு செய்துகொண்ட பெண்கள் 360 பேராகும். இவர் அறுபதினாயிரம் ஆண்டுகள் அறநெறி வழுவாமல் நல்லற நாயகனாக நின்று அரசு புரிந்தார். மக்கள் மன்னரை நெஞ்சார நினைத்து வாயார வாழ்த்தினார்கள்.

தசரதர் தமக்குப் பின் தருமநெறி தவறhமல் தரணியை அரசு புரிய ஒரு மகன் பிறக்கவில்லையே என்று பெரிதும் வருந்தினார். தசரதர் நாட்டைக் காக்க நன்மகன் இல்லையே என்று வருந்துவது பொது நலமாகும். அரசவையில் தசரத சக்ரவர்த்தி, தமது குலகுருவாகிய வசிஷ்ட முனிவரை வணங்கி, குருநாதா! அடியேன் தங்கள் ஆசியினால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் பத்துத் திசைகளிலுமிருந்து வந்த பத்து ரதங்களை வென்று, தசரதன் என்று பேர் பெற்றேன், சம்பரனை வென்று இந்திரனுக்கு உதவி புரிந்தேன், ஆனால், அடியேனுக்கு மகப்பேறு வாய்க்கவில்லை தலைவனின்றி மக்கள் வருந்துவார்களே என்று எண்ணி அடியேன் வருந்துகின்றேன். தாங்கள் பிரம புத்திரர். தங்களை குருநாதராகக் கொண்ட எனக்கு இந்தக் குறை இருந்தால் அது தங்களுக்குத்தானே இழிவு? குழல், யாழ் என்ற இன்னிசைக் கருவிகளின் நாதங்களைக் கேட்கும் என் செவியில் அப்பா! என்று அழைக்கம் மழலைச் சொல் கேட்கும் பாக்கியம் பெற்றேனில்லை. வானளாவி வளர்ந்த மரம் பழுக்கவில்லையானால் அம்மரத்தால் யாது பயன்? என்னுடைய மனுக்குலத்தில் இதுவரை குழந்தையில்லாத மலட்டுத் தன்மை ஒருவருக்கும் இல்லை. பெரும் தவமுனிவராகிய தங்கள் சீடனாகிய எனக்கு இந்தக் குறை இருந்தால் அது தங்களுக்குத்தானே அவமானம் ? அடியேனுக்கு மகப்பேறு உண்டாகத் தேவரீர் அருள்புரிய வேண்டும் என்று கூறி முறையிட்டார்.

வசிட்ட முனிவர் ஊனக்கண்களை மூடினார். அப்பொழுது அவருக்கு ஞானக்கண் திறக்கப் பெற்றது. அதிலே கண்ட காட்சி அடியில் வருகின்றது.
திருமால் திருப்பாற்கடலில் அரவணையில் அறிதுயில் புரிகின்றார். இராவணாதி அரக்கர்களால் பலகாலமாகத் துன்பப்படுகின்ற பிரமாதி தேவர்கள் நாராயணரிடம் தஞ்சம் புகுந்து கருணைக்கடலே! கமலக்கண்ணா! நீலமேக வண்ணா! இராவணன் முதலிய அரக்கர்களால் நாங்கள் ஆலைக்கரும்புகோல் போல நொந்து வெந்து வருந்துகிறோம். நாங்கள் அரக்கர்களால் பஞ்சுபடாத பாடுபடுகின்றோம். அசுர குலத்தை அழித்து, நாங்கள் செழித்து வாழ அருள் புரியவேண்டுமென்று சரண் அடைந்தார்கள்.

திருமால் தேவர்களை நோக்கி அமரர்களே! நான் பூவுலகில் இராமனாக அவதரித்து இராவணாதி அரக்கர்களைத் தொலைத்து உங்கள் துயர் துடைத்து அருள்புரிவேன். இராவணன் பிரமதேவனிடம் வரம் பெறும் போது மனிதர்களையும், வானரங்களையும் சிறிய பிராணிகள் என்று விட்டு விட்டான். ஆகவே, நான் மனிதனாக வந்து அவதரிப்பேன். தேவர்களாகிய நீங்கள் முன்னதாகவே வானரங்களாகப் பிறந்து இருங்கள் என்று கட்டளையிட்டார்.

திருமாலின் கட்டளையின்படி வானவர்கள் வானரங்களாகப் பிறந்தார்கள். இந்திரன் வாலியாகப் பிறந்தான். சூரியன் சுக்கிரீவனாகப் பிறந்தான். அக்கினித்தேவன் நீலனாகப் பிறந்தான் ( நீலன் சேனைத் தலைவன் ). விசுவபிரம்மா நளனாகப் பிறந்தான், வாயுதேவன் அனுமனாகப் பிறந்தான். ருத்ராம்சமும் அதில் கலந்து நின்றது. உபேந்திரன் அங்கதனாகப் பிறந்தான்.
பிரமதேவர், நான் ஏற்கெனவே கரடிக் குழுத் தலைவன் ஜாம்பவந்தனாகப் பிறந்திருக்கிறேன் என்று கூறினார்.

தொடரும்...


Search tags : Ramayan, Ramayana, Ramayanam, Kirubanantha Variyaar, இராமாயணம், கிருபானந்தவாரியார்.

Related Posts Widget for Blogs by LinkWithin