ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Wednesday, July 15, 2009

இராமாயணம்-9



இராமாயணம்

பகுதி - 9

(முன்னைய பாகம் : செல்க)


சீதாதேவி இலகுவில் தூக்கிய வில்லை வளைத்தவனுக்கே பெண்ணைத் தருவதாகப் பிரகடனம் செய்தார் ஜனகர். பலர் வந்து வளைக்காமல் தோல்வி அடைந்தார்கள். அப்போது சீதைக்கு 12 வயது. சீதையின் திருமணம் பரம மங்களமாக நடைபெறும் பொருட்டு ஒரு சத்ரயாகம் தொடங்கினார். அந்த யாகத்துக்கு மன்னர்களும், மறையவர்களும் குழுமினார்கள். அந்த யாகத்துக்கான அழைப்பு சித்தாசிரமத்தில் இருந்த விசுவாமித்திரரை அடைந்தது.

விசுவாமித்திரர் இராமரை நோக்கி, இராமா! உன்னால் ஒரு பெரிய காரியம் நடக்க இருக்கிறது. அதற்கிடையில் ஜனகருடைய யாகத்துக்குப் போகவேண்டும் என்று கூறி, இராம இலட்சுமணருடன் மிதிலையை நோக்கி புறப்பட்டார். வழியில் சோனை நதியைக் கண்டார்கள். கங்கா நதியைத் தரிசித்தார்கள். பகீரதன் கங்கை கொண்டு வந்த வரலாற்றை விசுவாமித்திரர் இராமருக்குக் கூறினார். வழியில் முருகப் பெருமான் திருவவதாரம் செய்த சரவணப் பொய்கையைக் கண்டு முருகப் பெருமனை நினைத்து வணங்கி மகிழ்ந்தார்கள்.


ஓடக்காரன் சந்திப்பு:

மூவரும் தேவரும் போற்றும் மிதிலைக்கருகிலே சேர்ந்தார்கள். அங்கு ஒரு பெரிய நதி குறுக்கிட்டது. அதற்குப் பாலம் இல்லை. அந்த நதியைக் கடக்க என்ன வழி என்று சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது கரிய நிறத்துடன் ஒருவன் வந்து வணங்கி நின்றான்.

நீ யாரப்பா? உனக்கு என்ன பேரப்பா? என்று கேட்டார்கள்.

அவன் நான் வீரப்பன் என்றான்.

அக்கரைக்குப் போகவேண்டும். ஓடம் கிடைக்குமா?

நான் ஓடக்காரன். மீனவர் மரபில் வந்தவன். நான் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன்.

இப்போது ஓடம் தயாராக இருக்கின்றதா? எத்தனைப் பேர் ஏறலாம்?

அறுபது பேர் ஏறலாம். நீங்கள் மூவர்தான் வந்திருக்கின்றீர்கள்.

அப்பா! இன்னும் 57 பேர்கள் சேரும் வரையிலும் நாங்கள் காத்திருக்க வேண்டுமா?

நீங்கள் உலகத்தைக் காக்கும் தெய்வங்கள். உங்களைக் காக்க வைக்கமாட்டேன். உங்கள் மூவருக்கும் ஓடம் செலுத்துவேன்.

அப்படியானால் அறுபது பேருக்குரிய கட்டணத்தை நாங்களே தந்துவிடுவோம்.

நீங்கள் மூவரும் ஏறினால் மும்மூர்த்திகள் ஏறியது போலாகும். உங்களிடத்தில் காசு வாங்கமாட்டேன். உங்கள் ஆசி இருந்தால் போதும். ஏறுங்கள்.

விசுவாமித்திரர் ஓடத்தில் ஏறினார். இராமர் ஏறுகின்ற பொழுது அந்த மீனவன், பச்சை! பச்சை! ஓடத்தில் கால் வைக்காதே. அப்பன் ஆணை என்றான்.

இராமர் துக்கிய காலை கீழே வைத்துவிட்டார். இலட்சுமணருக்குச் சீற்றம். இவனை அறைந்துவிட்டு நாமே ஓடம் செலுத்தலாம் என்று எண்ணினார். இராமர், தம்பி! அவன் பரம்பரையாக ஓடம் செலுத்திக் கொண்டிருக்கிறான். தனியார் துறையில் அரசாங்கம் கை வைக்கக்கூடாது. அரசாங்கம் மேற்கொண்ட இலாக்கா ஒழுங்காக இருப்பதில்லை. பச்சையாக இருக்கின்ற என்னைப் பச்சை என்று அழைத்தால் என்ன? அவனுக்குச் சொந்தமான ஓடத்தில் கால் வைக்காதே என்று சொல்ல அவனுக்கு உரிமை உண்டுதானே?
அப்பா! மீனவனே! நான் ஏன் ஏறக்கூடாது?

ஐயா! தங்களை ஏற்றிக்கொள்ள மாட்டேன். சீறுகின்ற சின்ன ஐயாவை ஏற்றிக்கொள்வேன். நீங்கள் யார்?

அப்பா! அயோத்தியை ஆளுகின்ற தசரதச் சக்ரவர்த்தியின் மக்கள் நாங்கள்.
அம்மீனவன் உள்ளம் துடித்து, கண்ணீர் வடித்து வணங்கி, என்னை மன்னிக்க வேண்டும் இராமச்சந்திரமூர்த்தி! தாங்கள் பிறந்த அன்று எங்களுக்கு அன்னமும் ஆடையும் வழங்கினார்கள். அமைச்சர்கள் வந்தாலே மிகப்பெரிய வரவேற்புச் செய்கின்றார்கள். நீங்கள் சக்கரவர்த்தித் திருக்குமாரர். உங்களுக்கு ஒரு கோடி வணக்கம். தாங்கள் மட்டும் ஒடத்தில் கால் வைக்கவேண்டாம்.

ஏனப்பா? நான் ஏறக்கூடாது?

ஐயனே! சிறிது தூரத்தில் ஒரு கருங்கல் பாறை இருந்தது. நாங்கள் இளமையில் அதில் சருக்கும்பாறை ஆடுவோம். அந்தக் கல்லில் தங்கள் கால் பட்டவுடனே அது பெண்ணாக மாறிவிட்டது. இதில் கல்லும், மரமும், இரும்பும் இருக்கின்றன. தாங்கள் கால் வைத்தவுடனே ஓடம் பெண்ணாக மாறிவிடும். நான் வீட்டிலுள்ள பெண்ணைக் காப்பாற்றுவேனா? இந்தப் பெண்ணைக் காப்பாற்றுவேனா? தனவந்தர்கள் இரு தாரத்தடன் அல்லல்படுகிறார்கள். நான் ஏழை. இந்த ஓடத்தை வைத்தக்கொண்டுதான் ஜீவனம் பண்ணுகிறேன்.

அப்பா! நாங்கள் கால் வைத்தால் பெண்ணாகாது. நாங்கள் அவசியம் அக்கரைக்குப் போகவேண்டும்.

அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நதியில் இறங்கிச் சுத்தமாகக் காலைக் கழுவிவிடுங்கள். கல்லைப் பெண்ணாக்குகின்ற மருந்து தண்ணீரில் கரைந்து போகட்டும் பின்னர் ஏறிக்கொள்ளலாம்.

இராமர் நதியில் இறங்கிக் கால் கழுவச் சென்றார். மீனவன், ஐயனே! கால் வைத்துத் தேய்க்கக் கூடாது என்று வசிட்டர் உமக்குச் சொல்லவில்லையா? கால் கழுவும் பணியை எனக்கு கொடும். நான் சுத்தமாய்த் தேய்த்துவிடுவேன் என்று கூறி, இராமருடைய சரணார விந்தங்களைச் செப்புத் தாம்பாளத்தில் வைத்து, ராம ராம என்று கண்ணீரும் பன்னீரும் விட்டு அபிஷேகம் செய்தான். காட்டு மலர்களை எடுத்து அர்ச்சனை செய்தான். எம்பெருமானே உன் பாத பூசைக்குச் சரபங்கர், பாரத்துவாஜர், தண்டக வனத்த மகரிஷிகள், சபரி முதலிய மகரிஷிகள் பலகாலம் காத்திருக்க, தவம் செய்யாத தமியேனுக்கு முதல் பாதபூசை கிடைத்ததே என்று துதி செய்து வந்தனை வழிபாடு செய்தான்.

இராமர், தம்பி இலட்சுமணா! இவனை அறைந்துவிடலாமா? என்று எண்ணினாயே! நமது பாதபூசைக்காகவே இவ்வாறு செய்தான் என்றார்.

மீனவன், இராமா! கல்லைப் பெண்ணாக்கும் மருந்து தண்ணீரில் இறங்கிவிட்டது. இதைக் கீழே விட்டால் கீழேயிருக்கிற கற்களெல்லாம் பெண்களாகிவிடும். ஏன் மனமாகிய கல் பெண்ணாகட்டும் என்று கூறி ஆசுமனம் செய்து தலையில் ஊற்றிக்கொண்டான். மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். அவன் பகவானுடைய கீதத்தைச் சொல்லியே ஓடத்தைச் செலுத்தினான். ஓடத்தை விட்டு இறங்கியவுடன் இராமர் தன் கையிலிருந்த நவரத்தின மோதிரத்தை இனாமாகத் தந்தார். அவன் அதை வாங்க மறுத்தவிட்டான்.

இராமச்சந்திர மூர்த்தி! நீயும் ஓடக்காரன், நானும் ஓடக்காரன். தொழிலாளியிடம் தொழிலாளி இனாம் வாங்க கூடாது. நான் இந்த நதியைக் கடக்க ஓடம் விடுபவன். தாங்கள் பிறவிப் பெருங்கடலுக்குத் திருவடி ஆகிய ஓடத்தை விடுபவர். இப்பொழுது நான் இதற்கு இனாம் வாங்கினால் அப்பொழுது நான் பொருள் தர எங்கே போவேன்? என்று கூறி, தொழுது அழுது இராமர் மலரடிமீது வீழ்ந்து வணங்கினான். அவன் அன்பைக் கண்டு இராமர் உள்ளம் உருகினார். மூவரும் மிதிலையை நோக்கி புறப்பட்டார்கள்.


தொடரும் ...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 8


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Tuesday, July 14, 2009

நல்ல தகவல்கள்-2



நல்ல தகவல்கள் - 2

நல்ல விடயங்களில் மேலும் சிலவற்றினை அறிந்து கொள்வோம், வாருங்கள்:


நான்கு வகை உயிரினங்கள்:

1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு, பூச்சி, கொசு போன்றவை.

2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம், செடி, கொடி போன்றவை.

3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளிவருவன - பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை

4. ஜராயுதம் - கருப்பையிலிருந்து வெளிவருவன - மனிதன், சில விலங்குகள் போன்றவை.


ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:

1. கர்ணன்
2. காளந்தி
3. சுக்ரீவன்
4. தத்திய மகன்
5. சனி
6. நாதன்
7. மனு


பெண்களுக்குரிய ஏழு பருவங்கள்:

1. பேதை - 1 முதல் 8 வயது வரை
2. பெதும்பை - 9 முதல் 10 வயது வரை
3. மங்கை - 11 முதல் 14 வயது வரை
4. மடந்தை - 15 முதல் 18 வயது வரை
5. அரிவை - 19 முதல் 24 வயது வரை
6. தெரிவை - 25 முதல் 29 வயது வரை
7. பேரிளம் பெண் - 30 வயது முதல்.....


ஆண்களுக்குரிய ஏழு பருவங்கள்: [ பெண்களின் வயதெல்லையும் ஆண்களின் வயதெல்லையும் ஒன்றுதான் என்பதை கவனத்திற்கொள்க ]

1. பலன்
2. மீளி
3. மறவோன்
4. திறவோன்
5. காளை
6. விடலை
7. முதுமகன்


நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:

1. சனகர்
2. சனாதனர்
3. சனந்தகர்
4. சனத்குமாரர்
5. வியாக்கிரபாதர்
6. பதஞ்சலி
7. சிவயோக முனிவர்
8. திருமூலர்


அஷ்ட பர்வதங்கள்:

1. கயிலை
2. இமயம்
3. ஏமகூடம்
4. கந்தமாதனம்
5. நீலகிரி
6. நிமிடதம்
7. மந்தரம்
8. விந்தியமலை


ஆத்ம குணங்கள்:

1. கருணை
2. பொறுமை
3. பேராசையின்மை
4. பொறாமையின்மை
5. நல்லனவற்றில் பற்று [உறுதி]
6. உலோபத்தன்மையின்மை
7. மனமகிழ்வு
8. தூய்மை


எண்வகை மங்கலங்கள்:

1. கண்ணாடி
2. கொடி
3. சாமரம்
4. நிறைகுடம்
5. விளக்கு
6. முரசு
7. ராஜசின்னம்
8. இணைக்கயல்


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : நல்ல தகவல்கள் - 1


search tags : Nava Nithi, Envagai, Thaanagal, Naagangal

_*_*_*_

Sunday, July 12, 2009

அபிராமி அந்தாதி 91-100



அபிராமி அந்தாதி

பகுதி 91-100 [ நிறைவு பெற்றது ]


அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...



மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே. 91

அபிராமித் தேவி! நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்; விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்; பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள், பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர, வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர்.


பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்-
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே. 92

ஏ, அபிராமி! முதல் என்று கூறப்படும் மும்மூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் தொழுகின்ற புன்னகையையுடையவளே! உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாதத்திலேயே பற்றும்படி செய்து, உன் வழிப்படியே யான் நடக்கும்படி அடிமையாகக் கொண்டவளே! இனி நான் வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலேயும் செல்ல மாட்டேன்.


நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. 93

உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள். இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.


விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே. 94

அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.


நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே. 95

ஏ, அபிராமி! அழியாத குணக்குன்றே! அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமளவல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கிவிட்டேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன். இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன்.


கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே. 96

என் அபிராமி அன்னையை, இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை, அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை, குற்றமற்றவளை, எழுதுதற்கு இயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை, சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை, தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே, ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்.


ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே. 97

என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் போற்றித் துதிப்பர்.


தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?-
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே. 98

ஏ, அபிராமி! நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும் வந்து புகுந்தறியாதவள். பூங்குயில் போன்றவளே! உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக்கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும், முடிமேல் இருந்த ஆறும் (ஆகாயகங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ?


குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே 99

ஏ, அபிராமி! அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே! தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே! (மதுரையில் குயிலாகவும், இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு).


குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே! 100

ஏ, அபிராமி! குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும் மார்பகங்களையும் தோளையும் உடையவளே! மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்.


நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 81-90


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.


search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

Thursday, July 9, 2009

எந்நாளும் ஏகனோடிரு



எந்நாளும் ஏகனோடிரு (இறைவனோடிரு)

ஆன்மிகக் கதைகள் - 6


ஒருநாள் ஒரு சந்நியாசி ஒரு சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு ஒருவன் திரிகல்லில் மா திரித்துக்கொண்டிருந்தான். அரிசித் துகள்கள் எவ்வாறு திரிகல்லுக்குள் அகப்பட்டு நெரிந்து இடிந்து மாவாகின்றதோ, அதே போன்று தானும் இப்பூவுலகாகிய திரிகல்லில் அகப்பட்டுப் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றேன் எனச் சிந்திக்க ஆரம்பித்தான். இச் சிந்தனை அதிகரித்துச் செல்லவே அது காரணமாக அழ ஆரம்பித்தான். இச் சந்தர்ப்பத்தில் முன் கூறப்பட்ட அச்சந்நியாசி அவன் அழுவதைப் பார்த்தார்.

உடன் அவன் அருகிற் சென்று " சகோதரனே ஏன் அழுகின்றாய்? " என்று விசாரித்தார்.

அதற்கு அவன் " இந்தத் திரிகல்லில் அகப்பட்டு நெரியும் அரிசி போல நானும் இவ்வுலகில் அகப்பட்டுக்கொண்டேன். அதனை நினைத்து அழுகின்றேன் " என்றான்.

அதற்கு அச்சந்நியாசியார் அவனை நோக்கி " திரிகல்லின் மேலே உள்ள சுழற்றும் கல்லை எடுத்துவிட்டு நடுவில் உள்ள கட்டைக்கருகில் உள்ள அரிசிகளைக் கவனி. கட்டைக்கருகில் உள்ள அத்தனை அரிசிகளும் நெரிபடாமல், முழு அரிசிகளாகவே இருக்கின்றன. இதோ பார்! நீயும் இறைவனை-ஏகப்பொருளை-ஏகனை சதா நேரமும் மனதில் தியானித்தவண்ணம் இருந்தாயானால் உலக வலைக்குள் சிக்கித் தவிக்கமாட்டாய். இறைவனுக்கே ஆட்பட்டுவிடுவாய்! அவ்வாறு வாழ்ந்தால் திரிகல்லின் கட்டைக்கருகில் காணப்படும் அரிசி போல நீயும் காப்பாற்றப்படுவாய். உலகில் சம்பவிக்கும் துரதிஷ்டங்கள், துன்பங்கள் வந்து உன்னைப் பற்றாது " என்றார்.

இதைக் கேட்ட அவன் உள்ளம் தெளிந்தது.


நீதி : இறைவன் மேல் மனதை நிறுத்தி, செய்யும் வேலைகளை அவருக்குச் செய்வதாகவே நினைத்து செய்யும் போது, இவ்வுலக மாயைகள் ஒருவனை எந்த விதத்திலும் துன்பத்தில் ஆழ்த்தாது. மாறாக இறைவனை மறந்து நான் என்ற அகங்காரத்தில் வேலைகளில் ஈடுபடும்போது துன்பங்கள் நம்மை எளிதில் சூழ்ந்துவிடும்.

எனவே இறைவனை நம் மனதில் எப்போதும் இருந்தி, இந்த உலக மாயைகளில் இருந்து விடுபட்டு இன்புற்று வாழ்ந்திடுவோம்.


நன்றி : சுவாமி இராமதாஸ் அருளுரைகள்


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : ஆன்மிகக் கதைகள்-5


search tags : Aanmika Kathaigal, Relegious Story, ஆன்மிகக் கதைகள்

_*_*_*_

Wednesday, July 8, 2009

அபிராமி அந்தாதி 81-90



அபிராமி அந்தாதி

பகுதி 81-90


அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...


அணங்கே-அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே. 81

ஏ, அபிராமி! என்னிடத்தில் நீ வைத்த பெருங்கருணையினால் நான் கள்ள நெஞ்சம் உடையவரிடம் நெருங்க மாட்டேன். உலகத்தில் மற்ற சக்திகள் எல்லாம் உன்னுடைய பரிவாரத் தேவதைகளேயாகும். ஆதலினால் நான் அவர்களை வணங்க மாட்டேன்; ஒருவரையும் போற்றவும் மாட்டேன்; நான் அறிவில்லாதவனாயினும், என்னுடையதெல்லாம் உன்னுடையது என்று உன்னை வணங்கும் சில ஞானிகளோடு மட்டுமே பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்!


அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே? 82

ஏ, அபிராமி! வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே! உலகமெல்லாம் ஒளியாக நின்ற, ஒளிவீசும் உன்னுடைய திருமேனியை நான் நினைக்கும்தோறும் களிப்படைகின்றேன். அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன்? (மறவேன் ஒருபோதும்).


விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிகமும், கற்பகக் காவும் உடையவரே. 83

அன்னையே, அபிராமி! உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களை வைத்து இரவு, பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள், தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவி, ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வˆƒஜ்ர ஆயுதம், கற்பகச் சோலை முதலியவைகளை முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். (எனக்கும் அருள்வாயாக!)


உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. 84

ஏ, அடியார்களே! என் அபிராமி, இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள். ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள். வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள். சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள். என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள். அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள். நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள்.


பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே. 85

ஏ, அபிராமி! நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும், வண்டுகள் மறைந்திருக்கும் மலர் அம்பு ஐந்தும், கரும்பு வில்லும், என்னுடைய துன்பங்களெல்லாம் தீர்க்கக் கூடிய திரிபுரையாகிய நின் திருமேனி அழகும், சிற்றிடையும், கச்சையணிந்த குங்குமம் தோய்ந்த மார்பகங்களும், அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும் என் கண் முன் காட்சியாய் நிற்கின்றன. (எங்கும் பரந்தவள்).


மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. 86

ஏ, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.


மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே. 87

ஏ, அபிராமி! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே! (ஈதென்ன வியப்போ!)


பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே. 88

ஏ, அபிராமி! பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே! யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில் உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி விடுதல் தகாது. அது உன் அருளுக்கும் அறமன்று.


சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே. 89


அபிராமித் தாயே! சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே! என்னுடைய உயிருக்கும், உடலுக்கும் தொடர்பற்று, அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில் உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில் படர வேண்டும். மேலும், பற்றின்மையை அனுக்கிரகிக்கும் உன்னுடைய துணைவரும் வந்து மோன நிலையில் நான் அறிதுயிலில் அமரும் பேற்றை அருள வேண்டும்.


வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. 90

ஏ, அபிராமி! உலகில் எனக்கு இனிக் கிடைக்காத பொருளென்று ஏதுமில்லை. என்னுடைய உள்ளத் தாமரையை உன்னுடைய பழைய உறைவிடமாகக் கருதி வந்தமர்ந்தாய். மேலும் நான் பிறந்தும், இறந்து ம் வருந்தாமல் இருக்க அருள் புரிந்தாய். பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை திருமால் தேவர்களுக்குக் கொடுக்க முதலாக இருந்த அபிராமியே, எனக்கு இனியேது குறை?


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 71-80


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.


search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

Tuesday, July 7, 2009

நல்ல தகவல்கள்-1




நல்ல தகவல்கள் - 1


சில நல்ல விடயங்களைப் பற்றிப் பார்க்கலாம். உதாரணமாக ஏழுவகைப் பிறப்பு, ஈரேழுலோகங்கள் இப்படி பல உண்டு. அவற்றினைப் பார்க்கலாம்...


எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்:

1.சந்தனம்
2. கோட்டம்
3. கஸ்தூரி
4. கற்பூரம்
5. குங்குமம்
6. பச்சிலை
7. அகில்
8. விளாமிச்சை வேர்


ஏழுவகைப் பிறப்புக்கள்:

1.தேவர்
2. மனிதர்
3. விலங்குகள்
4. பறப்பவை
5. ஊர்பவை
6. நீர்வாழ்பவை
7. தாவரம்


ஈரேழு உலகங்கள்:

முதலில் மேல் உலகங்கள்:

பூமி
புவர்லோகம்
தபோலோகம்
சத்யலோகம்
ஜனோலோகம்
மஹர்லோகம்
சுவர்க்கலோகம்

அடுத்து கீழ் உலகங்கள்:

அதலம்
கிதலம்
சுதலம்
இரசாதலம்
தவாதலம்
மகாதலம்
பாதாலம்


குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்:

1.சங்கநிதி
2.பதுமநிதி
3.கற்பநிதி
4.கச்சபநிதி
5. நந்தநிதி
6. நீலநிதி
7. மஹாநிதி
8. மஹாபதுமநிதி
9. முகுந்த நிதி


அஷ்ட ஐஸ்வர்யங்கள்:

1. தனம்
2. தான்யம்
3. பசு
4. அரசு
5. புத்திரர்
6. தைரியம்
7. வாகனம்
8. சுற்றம்


எண்வகை போகங்கள்:

1. அணிகலன்
2. தாம்பூலம்
3. ஆடை
4. பெண்
5. பரிமளம்
6. சங்கீதம்
7. பூப்படுக்கை
8. போஜனம் (உணவு)


நவ நாகங்கள்:

1. ஆதிசேஷன்
2. கார்க்கோடகன்
3. அனந்தன்
4. குளிகன்
5. தஷன்
6. சங்கபாலன்
7. பதுமன்
8. மகாபதுமன்
9. வாசுகி


நன்மை தரக்கூடிய தச தானங்கள்:

1. நெல்
2. எள்
3. உப்பு
4. தீபம்
5. மணி
6. வெள்ளி
7. வஸ்திரம்
8. சந்தனக்கட்டை
9. தங்கம்
10. நீர்ப்பாத்திரம்



search tags : Nava Nithi, Envagai, Thaanagal, Naagangal

_*_*_*_

Monday, July 6, 2009

அபிராமி அந்தாதி 71-80



அபிராமி அந்தாதி

பகுதி 71-80


அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...


அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க-
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே? 71

அபிராமித் தேவி எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, நெஞ்சே! ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?


எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்-
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே. 72

ஏ, அபிராமி! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக்குறையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால் என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும். அகன்ற வானத்தில் தோன்றும் அம்மின்னலையும் பழிக்குமாறுள்ள நுண்ணிய இடையை உடையவளே! எம்முடைய தந்தை சிவபெருமான், தன் குறை தீர, தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே!


தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே. 73

ஏ, அபிராமி! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.


நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 74

முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும். அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்.


தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே. 75

பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த ஏ அபிராமி! மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும் மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே).


குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே. 76

ஏ, அபிராமி! பஞ்ச பாணங்களையுடையவளே! உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் கொண்டு, மருட்டுகின்ற யமன்வரும் வழியைக் கண்டு கொண்டேன். கண்டதும் அல்லாமல், அவன் வருவதற்கு முன், அவன் வழியை அடைத்தும் விட்டேன் (எல்லாம் நின் திருவருளே). வண்டு மொய்க்கும் தேனொடு கூடிய கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு, தானொரு பாதியாக அமர்ந்தவளே!


பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி-என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே. 77

ஏ, அபிராமி! உன்னை, பைரவர் வணங்கக்கூடிய பைரவி; பஞ்சமி; பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை; ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி; வஞ்சகரின் உயிரை மாய்த்து, அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி; மகா காளி; ஒளிவீசும் கலை பொருந்திய வயிரவி, சூரிய, சந்திர மண்டலத்திலுள்ளோர்க்கு மண்டலி; சூலத்தையுடைய சூலி; உலகளந்த வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர். குற்றமற்ற வேதங்களிலும், நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன. அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி
வணங்கி வழிபடுகின்றனர்.


செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே. 78

என் தாயே! அபிராமி! உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன். அந்த உருவம் எப்படிப்பட்டதெனின், மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலை; அம்முலைமேல் பூசிய மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவை; அங்கே புரளும் அணிகலன்கள்; சிறந்த முத்துக் கொப்பு; வைரத்தோடு; செழுமையான கருணைமிகும் கடைக்கண்கள்; குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகம் இவைகளெல்லாம் கொண்ட வடிவையே என் மனத்தில் இருத்தினேன்.


விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே? 79

அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).


கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்-ஆடகத் தாமரை ஆரணங்கே. 80

ஏ, அபிராமித்தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே! என்னை உன் அடியார்கள் கூட்டத்தில் சேர்த்தவளே! நான் செய்த கொடிய வினைகளை எல்லாம் ஒழித்தவளே! ஒன்றையும் அறியாத எனக்கு, உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே! உன்னைக் கண்ட என் கண்ணும், மனமும் களிநடம் புரிகின்றது. இவ்வாறெல்லாம் என்னை நாடகமாடச் செய்தவளே! உன்னுடைய கருணையத்தான் என்னவென்பேன்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 61-70


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.


search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

Friday, July 3, 2009

இராமாயணம்-8



இராமாயணம்

பகுதி - 8

(முன்னைய பாகம் : செல்க)


சீதையின் பிறப்பு:-

பத்மாட்சன் என்ற பார்த்திபன் இந்தப் பரத கண்டத்தை ஆட்சி புரிந்தான். அவன் மகப்பேறு வேண்டி மாதவனை வேண்டி மாதவம் புரிந்தான். திருமால் அவன் முன் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

ஆரா அமுதம் அளித்த நாராயணா! திருமகள் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டான்.

திருமால் ஒரு மாதுளங்கனியை அவனுக்கு அளித்தார். அவன் அதைப் பிரித்தபோது ஒரு பாதி முத்துகளும், மற்ற பாதியில் இலட்சுமியும் இருக்கக் கண்டு மகிழ்ந்தான். மாதுளங்கனி போன்ற நிறமுடைய அம்மங்கைக்குப் பத்மாட்சி என்று பெயர் சூட்டினான். பத்மாட்சி திருமாலை வேண்டித் தவம் செய்தாள். பத்மாட்சன் மகளுக்குச் சுயம்வரம் வைத்தான்.

சுயம்வரம் என்றால் பெண் தானே மணமகனை வரிப்பது. 56 சிற்றரசர்களும் சுயம்வரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். பத்மாட்சி தந்தையைப் பார்த்து, அப்பா! நான் திருமாலை மணந்துகொள்ளத் தவம் செய்கிறேன். சுயம்வரம் எப்படி அமைத்தீர்கள்? என்று கேட்டாள். பத்மாட்சன் சுயம்வர மண்டபத்தில் நிறைந்திருக்கின்ற மன்னர்களைப் பார்த்து, வேந்தர்களே! விண்ணில் தெரிகின்ற நீலநிறத்தை எவன் உடம்பில் பூசிக்கொள்வானோ! அவன் என் மகளுக்கு மாலை போட வேண்டும். இது என் மகளின் விருப்பம் என்றான்.

இது ஆகாத காரியம் என்று அரசர்கள் சீறி, பத்மாட்சன் மீது போர்தொடுத்தார்கள். போரில் பத்மாட்சன் வெற்றி பெற்றான். பத்மாட்சி தவம் செய்துகொண்டிருந்தாள். வானவீதியிலே விமானத்தில் சென்று கொண்டிருந்த இராவணன் பத்மாட்சியைக் கண்டு காதல் கொண்டு பத்மாட்சியைத் தனக்குத் தருமாறு கேட்டான்.

பத்மாட்சன், பெண்ணைத் தருவதில் தடையில்லை. வானத்தில் தெரிகின்ற நீல நிறத்தை உடம்பில் பூசிக்கொண்டால் என் மகள் உனக்கு மாலை போடுவாள் என்றான்.

இராவணன் பத்மாட்சனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றுவிட்டான். இராவணன் பத்மாட்சியைப் பற்றுவதற்கு முயன்றான். அவள் மறைந்துவிட்டாள். அந்த நகரத்துக்கு இராவணன் தீ வைத்தான். அந்த செயல் இலங்கை எரிவதற்குக் காரணமாயிற்று.

மற்றொருநாள் இராவணன் வான்வழியே செல்லும் பொழுது நகரம் எரிந்து கொண்டேயிருப்பதையும், அதன் அருகில் பத்மாட்சி தவம் செய்து கொண்டிருப்பதையும் கண்டான். இராவணன் பத்மாட்சியைப் பற்ற முயன்றான். பத்மாட்சி எரிகிற தீயில் விழுந்துவிட்டாள். இராவணன் தண்ணீரை விட்டுத் தீயை அணைத்தான். அதில் ஒரு பெரிய மாணிக்கத்தைக் கண்டு எடுத்து, அதனை வண்டோதரிக்குத் தரவேண்டுமென்று பெட்டியில் வைத்துக் கொண்டான். பல அலுவல் காரணமாக அதனை மறந்து விட்டான்.

ஒருநாள், வண்டோதரி! பெண் மாணிக்கமாகிய உனக்கு ஒரு மாணிக்க மணியை கொண்டு வந்தேன் என்று கூறிப் பெட்டியைத் திறந்தான்அப்பெட்டியில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இராவணன் அதிர்ச்சி அடைந்தான். இவள் மாயக்கன்னி, மயக்கும் கள்ளி! என்ன என்ன வடிவம் எடுக்கிறாள் என்று கூறி, வாளை எடுத்து வெட்டுவதற்கு ஓங்கினான்.

வண்டோதரி கணவனார் கரத்தைப் பற்றித் தடுத்து, பெருமானே! இந்தக் குழந்தையை வெட்டாதீர்கள். மாறி மாறிப் பல வடிவங்கள் எடுத்த இவள் பத்ரகாளியாக மாறி உன்னைக் கொன்றுவிடுவாள். இந்தப் பெட்டியில் வைத்து மூடி எங்காவது புதைத்துவிடுங்கள் என்று கூறினாள். பெட்டியை மூடி அரக்கர்களின் கையிலே கொடுத்து, இமயமலைச் சாரலிலே புதைத்து விடுங்கள் என்றான். அவ்வாறே அவர்கள் புதைத்து விட்டார்கள்.

சிலர் இலங்கையிலே சீதை பிறந்தாள் என்றும், சீதை பிறக்க இலங்கை அழியும் என்றும் கூற, இராவணன் பெட்டியில் குழந்தையை வைத்துக் கடலில் விட்டுவிட, மிதிலாபுரியில் கரை தட்டியது என்று கூறுவார்கள். மிதிலாபுரிக்கும், கடலுக்கும் சம்பந்தமே இல்லை. மிதிலாபுரி இப்பொழது ஜனக்பூர் என்று வழங்குகிறது. அதற்குப் பாட்னாவிலிருந்து ஜீப்பில் போகவேண்டும் நேபாளத்தின் பார்டரில் இந்த நகரம் இருக்கின்றது.

மிதிலாபுரியை அரசு புரிகின்ற சீரத்துவஜ ஜனகர் பரமஞானி மரவுரியைத் தன்கொடியில் எழுதிக் கட்டியதினால் சீரத்துவஜ ஜனகர் என்று பெயர் பெற்றார். இவருடைய தம்பி குசத்துவஜர் என்பவர். சாங்காஸ்யம் என்ற நகரத்தை ஆட்சி புரிந்து வந்தார். ஜனகரிடம் கௌதமரின் புதல்வராகிய சதானந்தர் புரோகிதராக இருந்து வந்தார். ஜனகர் வேதாந்த வித்தகர். மகப்பேறு வேண்டிப் பொற்கொழுவால் வேதமந்திரம் சொல்லி உழுகின்றபொழுது இராவணனால் புதைக்கப்பட்ட பெட்டி கிடைத்தது. திறந்து பார்த்தார். மகாலட்சுமியே குழந்தையாக விளங்கிக் கொண்டிருந்தாள. ஜனகர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து சீதை என்று பெயர் சூட்டினார். தான தருமங்கள் செய்தார்.

பின்னர், ஆறுமாதம் கழித்து ஜனகருடைய மனைவி ஸுநயனி கருவுற்று வேறு ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அப்பெண்ணுக்கு ஊர்மிளை என்று பேர் சூட்டினார்கள். ஜனகருடைய தம்பிக்கு மாண்டவி, சுருதகீர்த்தி என்ற இரண்டு பெண்கள் பிறந்தார்கள்.

ஒருநாள் இந்த நான்கு பெண் குழந்தைகளும் அரண்மனையில் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள. சீதாதேவி வீசிய பந்து ஜனகர் பூசை செய்கின்ற சிவன் வில்லின் அடியில் சிக்கிக் கொண்டது.

சீதை, ஊர்மிளை! பந்தை எடுத்துப் போடு என்றாள்.

ஊர்மிளை, அக்கா! பந்து சிவ தனுசின் கீழே அகப்பட்டுக் கொண்டது. அது அறுபதினாயிரம் பேர் எடுக்கக் கூடியது என்றாள்.

என்னம்மா! ஒரு பந்தை எடுக்க அறுபதினாயிரம் பேரா? என்று கூறி, அன்னம்போல் நடந்து இடக்கையில் வில்லை எடுத்து மூலையில் சார்த்தி வைத்துவிட்டுப் பந்தை எடுத்துக் கொடுத்தாள். பழையபடியே வில்லை எடுத்து மேடையில் வைக்க மறந்துவிட்டாள்.

மறுநாள் காலையில் பூசை செய்யவந்த ஜனகர் வில் மேடையில் இல்லாமல் மூலையில் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். சேவகனை அழைத்து வில்லை யார் எடுத்தது? என்று கேட்டார்.

சேவகன் இங்கு ஒருவரும் வரவில்லை. சீதா தேவி தன் தங்கையுடன் பந்து விளையாடினார்கள் என்றான். ஜனகர் சீதையை அழைத்து வில்லை யார் எடுத்தது? என்ற கேட்டார்.

அப்பா நான்தான் எடுத்து வைத்தேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி, வில்லை இடக்கையால் எடுத்து மேடையில் வைத்துவிட்டாள். இந்த நிகழ்ச்சி ஜனகருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

அறுபதினாயிரம் பேர் எடுக்க வேண்டிய வில்லை, இந்த ஐந்து வயது குழந்தை அநாயாசமாக இடக்கையால் எடுத்து வைத்ததே! இந்தப் பெண்ணை யாருக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்ற சிந்தித்தார்.


தொடரும் ...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 7


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Thursday, July 2, 2009

நாளைய விரதம் -04/07/2009




நாளைய விரதம்


நாளை [ 04/07/2009] சனிக்கிழமை, சிவ விரதங்களில் விசேஷ இடம்பெற்ற சனிப் பிரதோஷ விரத தினமாகும். சென்ற முறை சனிப் பிரதோஷ விரதம் அனுட்டிக்க முடியாமற் சென்றோர் இம்முறை அனுட்டித்து இறைவனின் அருளைப் பெற்றிடுங்கள்.

பிரதோஷ விரதத்தினைப் பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள சுட்டியை அழுத்துங்கள்.(Click செய்யுங்கள்)

Wednesday, July 1, 2009

ஏகாதசி விரதம்



ஏகாதசி விரதம்


வைஷ்ணவ விரதங்களுள் மிக விசேஷமான இவ்விரதத்தை ஆறு வயது முதல் அறுபது வயது வரையிலான சகலரும் கடைப்பிடிக்க வேண்டுமென்பது பகவான் கட்டளையென்று வைஷ்ணவர்கள் கூறுவர். இதனை எட்டு வயதிலிருந்து எண்பது வயதுவரை என்ரும் சிலர் கூறுவர்.

"கங்கையைவிடச் சிறந்த தீர்த்தமுமில்லை, விஷ்ணுவைவிட உயர்ந்த தேவரில்லை, தாயிற் சிறந்த கோயிலுமில்லை, காயத்திரியைவிட உயர்ந்த மந்திரமில்லை, ஏகாதசியைவிடச் சிறந்த விரதமுமில்லை" என்று வைஷ்ணவ புராணங்கள் உரைக்கின்றன.

ஏகாதசி விரதத்தைப் பற்றி பவிஷ்யோத்தர புராணத்திலும், பத்மபுராணத்திலும் விபரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பட்சத்துக்கு ஒவ்வொரு ஏகாதசியாக, அதாவது அமாவாசைக்குப் பின்வரும் பதினோராம் நாள், பௌர்ணமிக்குப் பின்வரும் பதினோராம் நாள் என இரு ஏகாதசிகள் ஒரு மாதத்தில் வரும். இதைவிட மேலதிகமாக வருகின்ற ஒரு ஏகாதசியையும் சேர்த்து ஒரு வருடத்தில் இருபத்தைந்து ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

அவை :

1. உற்பத்தி ஏகாதசி : மார்கழித் தேய்பிறை

2. மோஷ ஏகாதசி (பெரிய, வைகுண்ட ஏகாதசி) : மார்கழி வளர்பிறை

3. ஸபலா ஏகாதசி : தை மாதத் தேய்பிறை

4. புத்ரதா ஏகாதசி : தை மாத வளர்பிறை

5. ஷட்திலா ஏகாதசி : மாசி மாதத் தேய்பிறை

6. ஜயா ஏகாதசி : மாசி மாத வளர்பிறை

7. விஜய ஏகாதசி : பங்குனி மாதத் தேய்பிறை

8. ஆமலகீ ஏகாதசி : பங்குனி மாத வளர்பிறை

9. பாப மோசனிகா ஏகாதசி : சித்திரை மாதத் தேய்பிறை

10. காமதா ஏகாதசி : சித்திரை மாத வளர்பிறை

11. வரூதினி ஏகாதசி : வைகாசி மாதத் தேய்பிறை

12. மோகினி ஏகாதசி : வைகாசி மாத வளர்பிறை

13. அபரா ஏகாதசி : ஆனி மாதத் தேய்பிறை

14. நிர்ஜலா ஏகாதசி : ஆனி மாத வளர்பிறை

15. யோகிநீ ஏகாதசி : ஆடி மாதத் தேய்பிறை

16. சயன ஏகாதசி : ஆடி மாத வளர்பிறை

17. காமிகா ஏகாதசி : ஆவணி மாதத் தேய்பிறை

18. புத்ரதா ஏகாதசி : ஆவணி மாத வளர்பிறை

19. அஜா ஏகாதசி : புரட்டாதி மாதத் தேய்பிறை

20. பத்மநாபா ஏகாதசி : புரட்டாதி மாத வளர்பிறை

21. இந்திரா ஏகாதசி : ஐப்பசி மாதத் தேய்பிறை

22. பாபாங்குசா ஏகாதசி : ஐப்பசி மாத வளர்பிறை

23. ரமா ஏகாதசி : கார்த்திகை மாதத் தேய்பிறை

24. ப்ரபோதினி ஏகாதசி ; கார்த்திகை மாத வளர்பிறை

25, கமலா ஏகாதசி : மேலதிக ஏகாதசி

மேலதிக ஏகாதசி வரும் மாதம் புருஷோத்தம மாதம் எனப்படும்.

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியே இவற்றுள் விசேஷமானது. இதனால் இது மோஷ ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, பெரிய ஏகாதசி என்ற பெயர்களால் குறிக்கப்படுகின்றது. ஏகாத்சி விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் இந்த வைகுண்ட ஏகாதசியில்தான் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையில் கூறியிருக்கின்றார். இம்மாதம் மஹா விஷ்ணுவிற்குப் பிரீதியானது. மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளும் மிக விசேஷமான தினங்களாகும். வைஷ்ணவத் தலங்களில் அடியார்கள் கூடி விசேஷ வழிபாடுகளை நிகழ்த்துவர்.

ஏகாதசி உற்பத்தியாகியது மார்கழி மாதத் தேய்பிறை ஏகாதசியில்தான். இதனால்தான் அதனை உற்பத்தி ஏகாதசி என்கிறார்கள். ஆனால், வளர்பிறை ஏகாதசியின் சிறப்பினால் அதையே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பிப்பதுடன் விரத ஆரம்பத்திற்கும் கொள்கின்றனர். இந்த விபரங்கள் பத்மபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஏகாதசி விரத நாளில் தசமி திதியின் சம்பந்தம் இருக்கக்கூடாது. காலையில் தசமியிருந்தால் மாறுநாள் துவாதசியில் விரதமிருந்து திரயோதசியில் பாரணை செய்யலாம். காலையில் ஏகாதசியும் நடுவில் துவாதசியும், இறுதியில் திரயோதசியும் இருப்பின் அது அதிவிசேஷமானது. இவ்வாறு ஏகாதசி தினத்தன்று காலையில் தசமியிருந்தால் அத்தினத்தை ஸ்மார்த்த ஏகாதசி எனவும் மறுநாளை வைஷ்ணவ ஏகாதசி எனவும் கூறுவர். ஏகாதசி விரதமனுஷ்டிப்போர் இவ்விருநாளில் வைஷ்ணவ ஏகாதசியையே கொள்ள வேண்டும். பிதிர்காரியம் முதலிய வேறு தேவைகளுக்கு ஸ்மார்த்த ஏகாதசியைக் கொள்ளலாம்.

ஏகாதசி விரதம் கிருஷ்ணபரமாத்மாவினால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையுடையது. ஆயுள் விருத்தியையும், அரோக்கியத்தையும், போக மோஷங்களையும் தருவது இவ்விரதம். இதனை அனுஷ்டிப்போர் நோய், வறுமை முதலியன நீங்கி வீரமும், கல்வியும், செல்வமும் பெற்று இகபரசுகமடைவர்.

முன்னர், முரன் என்ற அசுரன் தான் பெற்ற வரபலங்களினால் யாராலும் வெல்லப்படாமல் ஆணவத்தில் திரிந்தான். இவனால் ஏற்பட்ட துன்பங்களைத் தாங்கமுடியாமல் யாவரும் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். பாம்பணையில் அறிதுயில் கொண்டிருந்த மஹாவிஷ்ணுவின் தேகத்திலிருந்து அவரது அபூர்வ சக்தியானது பெண்ணுருவில் வெளிப்பட்டு வந்து அசுரனுடன் போரிட்டு அவனை அழித்தது. தேவர்கள் யாவரும் அந்த சக்தியை வழிபட்டு நின்றனர்.

தன்னை ஏகாதசி தேவியென்று அறிமுகம் செய்த அந்தச் சக்தி, தன்னை நினைத்து தனது திதியாகிய ஏகாதசியில் விரதமிருந்தால் எல்லா நலங்களும் கிடைக்கும் எனக் கூறி மறைந்தாள்.

கைடப தேசத்தில் கர்ணீக நகரில் முன்பொருசமயம் வறுமையால் வருந்திய ஒரு பிராமணத் தம்பதியருக்கு நாரதர் இந்த விரதத்தை உபதேசித்தார். அவர்களும் இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து சகல செல்வமும் பெற்று வாழ்ந்து முக்தியடைந்தனர். அதன்பின் இது பூமியில் நல்லோர் பலரால் அனுஷ்டித்து வரப்படுகின்றது. ருக்மாங்கதன், அம்பரீஷன் முதலியோரும் இவ்விரதம் இருந்து பலனடைந்தவர்களாவர்.

முன்னரே குறிப்பிட்டபடி மார்கழி மாதத்து வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். விரத நாளுக்கு முதல் நாளிலேயே ஒரு நேர உணவும், இந்திரிய நிக்ரகமும்(குடும்ப உறவு நீக்கம்) கடைப்பிடிக்க வேண்டும். (பொதுவாக உபவாச விரதங்கள் யாவற்றுக்கும் இவ்விதி பொருந்தும்). ஏகாதசியன்று முழுப்பட்டினியாக உபவாசமிருந்து இரவு முழுதும் நித்திரை விழிக்க வேண்டும். பாகவத புராணங்கள்ப் படித்தலும் கேட்டலும், பகவானின் நாமஜெபம், நாமபஜனை இவற்றில் ஈடுபடுவதும் இத்தினம் முழுவதும் செய்ய வேண்டிய காரியங்களாகும்.

வீட்டிலே பூஜை வழிபாடு செய்ய விரும்புவோர் முறைப்படி தானியங்களின் மேல் பத்மம் வரைந்து சந்தன பிம்பத்தில் பூமிதேவி நீளாதேவி சஹித மஹாவிஷ்ணுவை விரத சங்கல்பத்துடனும், பூர்வாங்க பூஜைகளுடனும் ஆவாகனம் செய்து பூஜை செய்யலாம். பூஜைக்கு வேண்டிய துளசியை முதல் நாளே எடுத்துவைக்க வேண்டும். ஏகாதசி நாளில் பறித்தல் ஆகாது. அவசியமேற்படின் இரண்டு இலைகளும், கதிருமாக எடுக்கலாம்.(விதிவிலக்கு)

மறுநாட்காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் முறை. பாரணையின் போது துளசியிலை, அகத்திக்கீரை, நெல்லிக்காய் முதலியவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது.

ஏகாதசியன்று தாம் உபவாசமிருத்தல் வேண்டும் என்பதோடு வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு விருந்தளித்தல் தவிர்க்கப்படுவதும் வேண்டும். பலர் ஏகாதசி நாளில் வீட்டில் சமையல் செய்வதேயில்லை.

இவ்விரதம் ஒரு வருடகாலம் கைக்கொள்ளப்பட வேண்டும். வருட முடிவில் விரதோத்யாபனம் செய்ய வேண்டும். தொடர்ந்து விரதமனுஷ்டிக்க விரும்புவோர் ஒவ்வொரு வருட முடிவிலும் விரத பூர்த்தி செய்வது நன்று. ஒருவருடத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிகளை மட்டும் அனுஷ்டிக்கும் வழக்கமும் உண்டு.


நன்றி : விரதங்கள், விழாக்கள் கைநூல்


search tags : Eakathasi Viratham, Viratham, ஏகாதசி விரதம், விரதம்

_*_*_*_

Related Posts Widget for Blogs by LinkWithin