சகல ஜீவன்களிலும் உன்னைக் காண்
ஆன்மிகக் கதைகள் - 5
வேடிக்கையில் விருப்பமுள்ள ஒருவன் இருந்தான். அவன் பல கண்ணாடிகளைத் தனது அறையின் நாலாபக்கச் சுவர்களிலும், அறையின் மேற்பலகைகளிலும் பதித்து வைத்திருந்தான். ஒரு அங்குல இடைவெளி கூட இல்லாமல் கண்ணாடிகளைப் பதிந்திருந்தான். அப்படிப்பட்ட அந்த அறையில் சென்று கதவினை மூடிக் கொண்டு, மின் விளக்கின் விசையினைத் தட்டி ஒளிரவிட்டான். அறை மத்தியில் நின்று தனது விம்பங்கள் பலநூறு வடிவத்தில் தெரிவதைக் கண்டு மகிழ்ந்தான். இக் காட்சியை மிகவும் இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பல கோணங்களில் நின்று வெகுவாக இரசித்தான். இவ்வாறு சில நிமிடங்கள் பார்த்த பின்னர் கதவினை மூடுவதற்கு மறந்து வெளியே சென்றான்.
சில நிமிடங்களில் இவன் வளர்த்து வந்த நாய், பூட்டப்படாதிருந்த அந்தக் கண்ணாடி அறைக்குள் சென்றது. தனது விம்பத்தைக் கண்ணாடியிற் கண்டது. அதன் விம்பங்களை வேறு நாய்கள் என நினைத்து அவற்றோடு பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டது. அகோரமாகச் சண்டை போட்டது. இதனால் களைப்படைந்து, இளைத்து ஈற்றில் இறந்து விட்டது.
இவ்வாறுதான் மனிதனும் பிற மனிதர்களைத் தன்னிலும் வேறுபட்டவனாக நினைக்கின்றான். வீணே சண்டைகள் போடுகின்றான். இன்னும் எத்தனையோ தீமைகளைப் புரிகின்றான். இதனால் தானும் அழிந்து மற்றவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துகின்றான். அறிவீனத்தால் அழிந்த நாயிற்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடுகின்றது.
எப்போது மற்றைய மனிதர்களையும் தன்னைப்போலவே நேசிக்கின்றானோ, அப்போது பல பிரச்சனைகள் அடியோடு ஒழிந்துவிடும். மனிதர்கள் மட்டுமல்ல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுமே தனது பிரதிபிம்பம் என நினைக்க வேண்டும். அதாவது மன்னுயிரயும் தன்னுயிர் போலவே நேசிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் இவ்வுலகமே சொர்க்கபுரியாக மாறிவிடும்.
இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : ஆன்மிகக் கதைகள்-4
search tags : Aanmika Kathaigal, Relegious Story, ஆன்மிகக் கதைகள்
_*_*_*_
No comments:
Post a Comment