ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Tuesday, June 30, 2009

தேவ தேவியர்கள்



தேவ தேவியர்

தெய்வங்களையும், தெய்வங்களின் தேவியர்களையும் தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்.


முதலில் கடவுளரின் சக்தியரைப் பார்ப்போம்:

சிவன் : உமை

மகாவிஷ்ணு : இலட்சுமி

பிரமன் - சரஸ்வதி

பிள்ளையார் : சித்தி, புத்தி, வல்லபை

முருகன் : வள்ளி, தெய்வயானை

வீரபத்திரர் : காளி

வெங்கடாசலபதி : அலமேலு அம்பாள்

ஐயப்பன் : பூரணை, புட்கலை

பைரவர் : இரத்தசாமுண்டி

கிருஷ்ணன் : ருக்குமணி, சாம்பவதி, காளிந்தி, மித்ரவித்தை, சத்யவதி, பத்திரை, நப்பின்னை, சத்தியபாமா


அட்டதிக்கு பாலகரின் சக்தியர்:

இந்திரன் : இந்திராணி

அக்னி : சுவாஹாதேவி

யமன் : சாமளை

நிருதி : தீர்க்காதேவி

வருணன் : சேஷ்டை

வாயு : அஞ்சனை

குபேரன் : சித்ரரேகை

ஈசானன் : காளி


அட்டமாத்ருகைகள்:

அந்தகாசுர வதத்தின் பொருட்டு சிவபிரான் முகத்திலுண்டான அஷ்ட மூர்த்திகளிடமிருந்து உண்டானவர்கள்.

காமம் : யோகீஸ்வரி

குரோதம் : மாகேஸ்வரி

மதம் : பிரம்மாணி

லோபம் : வைஷ்ணவி

மோகம் : கௌமார்

மாச்சர்யம் : இந்திராணி

பிசுநம் : யமதண்டி

அசூயை : வராகி


நவக்கிரக சக்தியர்:

சூரியன் : உஷா, ப்ரத்யுஷா

சந்திரன் : ரோஹினி

செவ்வாய் : சக்தி தேவி

புதன் : ஞான சக்தி தேவி

வியாழன் : தாரா தேவி

வெள்ளி : சுகீர்த்தி

சனி : நீலா

ராகு : ஸிம்ஹி

கேது : சித்ரலேகா


நன்றி : மயூரமங்கலம்


search tags : Article, theva theviyar, கட்டுரைகள், தேவ தேவியர்

_*_*_*_


Monday, June 29, 2009

குண்டலினி சக்தி



குண்டலினி சக்தி


உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருட்டரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே - சிவ வாக்கியர்.


" குண்டலினி அம்மா! மனிதனுள் ஜீவசக்தியாக இருப்பவளே! நீயே ஆதிசக்தி, ராஜராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி.
நீயே பிராணனாகவும், வித்யுத்(மின்) சக்தியாகவும், இன்னும் பலவித சக்திகளாகவும் இருந்து இந்த உடலுள் உறைகின்றாய்.
ஸுஷும்னா நாடியைத் திறக்க வைத்து ஆறு ஆதாரங்களையும் தாண்டி சகஸ்ராரம் சென்று உன் பதியுடன் இணையும்போது என்னையும் உன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடு. - குண்டலினி தியானம் -


எப்படி ஜீவாத்மா பரமாத்மா அம்சமோ, அப்படியே பராசக்தியின் அம்சமாக நம் சரீரத்தில் குண்டலினி சக்தி இருக்கிறாள். பிரும்மாண்டத்தில் நடக்கும் சகல காரியங்களுக்கும் சக்திகளின் சமஷ்டி ரூபிணியான திரிபுரசுந்தரி எப்படிக் காரணமாக இருக்கிறாளோ, அப்படியே குண்டலினி சக்தி நம்முடைய சரீர சம்பந்தமான சகல காரியங்களுக்கும் காரணமாக இருக்கிறாள். இதனாலேயே அம்பிகைக்கு மஹா குண்டலினி என்று ஒரு பெயர் உண்டு.

எப்படிச் சக்தியில்லாவிட்டால் சிவனே எதுவும் செய்ய முடியாதோ அதுபோலக் குண்டலினி இல்லாவிட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது.

பராசக்தியின் அம்சமான குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு சக்ர பேதனம் செய்து சகஸ்ரதள பத்மத்திற்கு அழைத்து வந்து, அங்குள்ள பரமசிவனிடம் சேர்த்து ஸாமரஸ்யம் உண்டு பண்ணுவதுதான் சமயமத சித்தாந்தமாகும். இதனால் அம்பிகைக்குச் "சமயாசாரதத்பரா" என்ற நாமம் ஏற்பட்டிருக்கிறது.

அப்படி சமாரஸ்யம் ஏற்படுத்திய போதிலும் குண்டலினி சக்தி மறுபடியும் மூலாதாரத்தை வந்தடையும் சுபாவமுள்ளவளாகையால் நம் அப்யாஸாதி பலத்தால் அச்சக்தியைச் சகஸ்ராரத்திலேயே நீடித்து நிலைக்கச் செய்ய வேண்டும். இது பாவனா அப்யாசத்தினால் ஸித்திப்பதாகும். இதுவே ஜீவன் முக்த நிலை.

குண்டலினியை வாழும் பாம்பு என்று சொல்வார்கள். அந்தப் பாம்பு சில வீடுகளில் குடியிருப்பதாகவும், அது மனிதர் கண்களுக்குப் படாது என்றும் உபாசகர்களின் கண்களுக்கு மட்டும் புலப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த மனித உடலில் ஒரு வாழும் பாம்பு இருக்கிறது. இதுவே குண்டலினி.

இது அக்னி ஸ்வரூபமான சக்தி. மாயா சக்திக்கு இருப்பிடமானது. இச்சக்தி ஏகாக்ரகப்பட்டு மேலே எழும்போது அது படம் எடுத்தாடும் பாம்பை ஒத்ததாக இருக்கும். விரிந்த தலையே வியாபக சக்தி. அதன் வாய் ஏகாக்ரக முகம்.

இந்தக் குண்டலினி சக்தியினால்தான் இந்த உடல் செயற்படுகின்றது. இந்த உடலை இயங்க வைப்பது மூலாதாரத்திலுள்ள பிராணன். ஆகவே உடம்பின் நாதன். குண்டலினி சக்தியே உயிருக்கு நாயகி. ஆகவே குண்டலினி சக்தியைப் பிராணனுக்கு நாயகி எனலாம்.

இக்குண்டலினி மூலாதாரத்தில் சர்ப்பம் போன்ற மூன்றரை வளைய ரூபத்தில் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், யோகாப்யாசத்தால் எழுப்பப்பட்டு ஸுஷும்னா மார்க்கமாகக் கிளம்பி, ஆறு சக்கரங்களையும் மூன்று கிரந்திகளையும் கடந்து மேலே சகஸ்ராரம் என்ற இடத்திற்குப் போய் அந்த பத்மத்தின் மத்ய பாகமாகிய சந்திரமண்டலத்திலுள்ள அமிருதத்தைப் பெருகச் செய்து, திரும்பவும் அதே வழியாக வந்து முன்பு போல, மூலாதாரத்தில் அடங்கும் என்று யோக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

மனிதன் இன்று பல விதங்களில் முன்னேற்றமடைந்திருக்கிறான் என்கிறார்கள். ஆதியில் அவனிடமிருந்த காட்டுமிராண்டித்தனம் மாறியிருக்கிறது என்பது உண்மையே. என்னதான் மாபெரும் சாதனைகளை மனிதன் செய்து வந்த போதிலும் அவன் அறிவு ஒரு வரம்புக்குட்பட்டது. படைப்பின் குறிக்கோளை அந்த அறிவால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அக்குறிக்கோள் என்ன என்பதை அவன் தன் அக நோக்கால் ஊகிக்க முடியும்.

படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் பிறப்பு, வாழ்வு, முடிவு என்ற மூன்று நிலைகள் இருக்கின்றன. படைக்கப்பட்ட எல்லாமே இந்த சுழியிலிருந்து தப்பிக்கமுடியாது. எவ்வளவோ முன்னேறியுள்ள மனிதனுக்கு ஒரு சுபாவம் இருக்கிறது. அந்தச் சுபாவம் அவனை அமைதியான வாழ்வு வாழ விடுவதில்லை.

அனாதி காலம் முதற்கொண்டே மனிதன் காமக்குரோதம் முதலியவைகளுக்கு ஆட்பட்டு வந்திருக்கிறான். அப்படியிருந்தும் தான் எப்போதும் சுகமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறான். மனிதன் இன்று நாகரிக வாழ்க்கை வாழ விரும்புகிறானேயொழிய மற்றவர்களை அடக்கி குறுக்கு வழியில் எப்படியாவது பணக்காரனாக ஆவது, என்ன செய்தாலும் மந்திரி பதவியைப் பிடிப்பது போன்ற செயலில் ஈடுபடும் பழைய காட்டுமிராண்டிச் சுபாவத்தைத்தான் கொண்டிருக்கிறான்.

மனிதன் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை விடமுடியாதா? இதைப்பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும். புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தினால் மனிதன் மனிதனாக மட்டுமன்றித் தேவனாகவும் ஆக முடியும் என்று நம்மகான்கள் அனுபவித்து அறிந்து அறிவித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்? எண்ணற்ற ஜீவாத்மாக்களும் ஒரு பரமாத்மாவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஜீவாத்மாக்கள் எல்லாம் பரமாத்மாவின் அங்கங்களே. பரமாத்மாவை விட்டு விலகும் ஜீவாத்மா அமைதியற்றுப் போகின்றது. தன் உறைவிடமான பரமாத்மாவை மீண்டும் அடையும்போதுதான் ஜீவாத்மா தன் இயல்பான சாந்தியை அடையும்.


நன்றி : மயூரமங்கலம்


search tags : Article, Kundalini, Yogam, குண்டலினி, யோகம், கட்டுரைகள்

_*_*_*_

Saturday, June 27, 2009

இராமாயணம்-7


இராமாயணம்

பகுதி - 7

(முன்னைய பாகம் : செல்க)


வேள்வி காவல்:-

மூவரும் கோமதி என்ற நதி சரயு நதியில் கலக்கும் சங்கமத்தில் ஓர் இரவு தங்கினார்கள். விசுவாமித்திர முனிவருடைய தமக்கையும் ரிசீகமுனிவருடைய மனைவியுமாகிய கௌசீகை என்பவள் உலகத்துக்கு நன்மை செய்யும் பொருட்டு நதியாக ஆனாள். அந்த நதியின் அருமை பெருமைகளை முனிவர் இராமருக்குக் கூறி பின் அங்கிருந்து புறப்பட்டுச் சித்தாசிரமத்தை அடைந்தார்கள. அந்த ஆசிரமம் கற்புடைய மங்கையரின் உள்ளம்போல் தூய்மையாக இருந்தது.

திருமால் அங்குப் பலகாலம் தவம் செய்தார். அப்பொழுது மகாபலிச் சக்ரவர்த்தி மிக்க வலிமையுடன் விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் கவர்ந்துகொண்டான். திருமால் அதிதி வயிற்றில் ஆயிரம் ஆண்டுகள் கருவிருந்து வாமன மூர்த்தியக அவதரித்தார். அப்பொழுது மகாபலிச் சக்ரவர்த்தி அசுவமேதயாகம் செய்து கொண்டிருந்தான். பெருங்கொடையாளியாகிய அவனை வலிமையால் அடக்க முடியாது. அவனைத் தானத்தில் வெல்ல வேண்டும் என்று கருதி யாகசாலையை அடைந்தார். அவருடைய குறுகிய வடிவத்தைக் கண்டு எல்லாரும் எள்ளி நகையாடினார்கள்.

அசுர குரவாகிய சுக்கிராசாரியார், மகாபலி! இந்தக் குறளன் திருமால் என உணர்வாய். உன்னை மாயம் செய்து அடக்க வந்திருக்கிறான். எச்சரிக்கை! என்றார்.

மகாபலி, குருவே! மாய்ந்தவர் - மாய்ந்தவர் அல்லர். ஈந்தவர்தான் என்றும் வாழ்ந்தவர்கள். கொடுக்கும்போது தடுக்கின்றவர்களின் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் என்று கூறி வாமன மூர்த்தியை வந்தனை வழிபாடு செய்து, உமக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான். வாமன மூர்த்தி, அள்ளிக் கொடுக்கும் வள்ளலே! என் காலால் மூவடி மண்தானம் வேண்டும் என்றார்.

மகாபலி புன்முறுவல் பூத்து மூவுலகத்துக்கும் தலைவனாகிய என்னிடம் மூன்று நகரங்களைக் கேட்கலாமே? உமது காலால் மூவடி என்றால் அது சிறிய பொருள்தானே? என்றான்.

வாமனர், என் காலால் மூவடி மண் கொடுத்தால் போதும் என்றார்.

அவர் கையில் தண்ணீரைத் தாரை வார்த்து, மூவடி மண் அளந்த கொள்ளும் என்றான்.

சிறிய குறள்வடியில் இருந்த அவர் உயர்ந்தவர் உதவியொப்ப, மூதண்ட கூட முகடு முட்ட வளர்ந்தார், அவருடைய பேருருவைக் கண்டு அதியித்தவர்கள், அஞ்சினார்கள். திருமால் ஓரடியால் விண்ணுலகத்தையும் ஓரடியால் மண்ணுலகத்தையும் அளந்து. மூன்றாவது அடிக்கு இடம் எங்கே? என்றார்.

மகாபலி, தங்கள் மூன்றாவது அடிக்கு இடம் என் சென்னி என்றான்.

வாமன மூர்த்தி அவனுடைய தலையில் திருவடியை வைத்து அதல உலகத்திலேயே இருந்தினார்.

ரகுநந்தனா! இத்தகைய வித்தகரான வாமன மூர்த்தி அவதரித்த இடம் இது. மிகவும் புனிதமானது என்றார் முனிவர். அந்தச் சித்தாசிரமத்தில் பாம்பும் கீரியும், மயிலும் பாம்பும் ஒன்றுபட்டு உறவாடின. நுலிவாரும் மெலிவாரும் பகையின்றி ஒன்றுபட்டு நின்றனர்.


மாரீசன், சுபாகு வதம்:-




மாமுனிவர், இராமா! இனி நான் யாகத்தைத் தொடங்குவேன், தாடகையின் புதல்வர்களாகிய சுபாகுவும் மாரீசனும் அவர்களுடைய சேனைகளான அரக்கர்களும், உதிரத்தையும் மாமிசங்களையும் யாகத்தில் சொரிந்து அசுத்தப்படுத்தி இடர் புரிவார்கள். இனி நான் மௌன நிலையில் இருந்து யாகம் புரிவேன். அரக்கர்களை வதைத்து யாகத்தை நிறைவேற்றுவாயாக என்று கூறி யாகத்தைத் தொடங்கினார்.

முனிவர்கள் பலர் வேதமந்திரங்கள் கூறியும், யாகத்துக்கு உரிய திரவியங்களைச் சேகரித்துத் தந்தும் உதவினார்கள். வேதமந்திரங்களுடன் வேள்வி தொடங்கியது. இராமர் யாகசாலையில் தெற்கு வாசலிலும், இலட்சுமணர் வடக்கு வாசலிலும் வில்லேந்தி நின்று காவல் புரிந்தார்கள். தாடகையின் மக்களாகிய சுபாகுவும், மாரீசனும் ஆயிரம் ஆயிரம் அரக்கர்களும், உதிரத்தையும் மாமிசத்தையும் கல்லையும் மண்ணையும் சொரிந்து ஆரவாரம் செய்தார்கள். இராமர் சரக்கூடம் கட்டி யாகத்தில் தீய பொருட்கள் விழாதவண்ணம் செய்தார். ஒரு சிறந்த அம்பினால் சுபாகுவைக் கொன்றார். மாரீசன் மீது ஓர் அம்பை ஏவினார். மாரீசனை அந்த அம்பு கடலில் எறிந்தது. அவன் பாதாள உலகம் போய் இராவணனுடைய உதவி பெற்று உயிர்பெற்றான். அரக்கர்களைக் கண்டதுண்டங்களாக வதைத்து மாய்த்தார். பலர் ஓடி ஒளிந்தார்கள்.

தேவர்கள் பொருட்டு யாகம் ஐந்து நாள்கள் நடந்தது. எட்டு நுதலையுடைய பிரம தேவனாலும் செய்தற்கரிய யாகம் பரம மங்களமாக நிறைவேறியபின் முனிவர்கள் அவபிருது ஸ்நானம் செய்தார்கள்.

விசுவாமித்திரர் இராமரைக் கண்குளிரக் கண்டு, ரகுநாதா! எல்லாவுலகங்களையும் உன் உதரத்துள் வைத்துக் காத்தருளும் கடவுளாகிய நீ, இந்த வேள்வியைக் காத்தருளியதில் என்ன வியப்பு? இராகவா! உன் நாமம் வாழ்க, உன் புகழ் ஓங்குக! என்று கூறினார்.


தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 6


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Friday, June 26, 2009

அபிராமி அந்தாதி 61-70



அபிராமி அந்தாதி

பகுதி 61-70

அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...


நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.-
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே. 61

தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!


தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே. 62

ஏ, அபிராமி! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே! பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.


தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும்-சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே. 63

ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும். அவளே பேதையர்களுக்கு நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள். அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள். இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.


வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே. 64

ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்.


ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே. 65

ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!


வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு-
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே. 66

ஏ, அபிராமியே! பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! நான் அறிவே இன்னதென்று அறியாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன். ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.


தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே. 67

அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? அவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.


பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே. 68

ஏ, அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).


தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே-
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே, 69

ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.


கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே. 70

ஏ, அபிராமி! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம், இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 51-60


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.


search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

Thursday, June 25, 2009

np9kfuwqe3

சகல ஜீவன்களிலும் உன்னைக் காண்



சகல ஜீவன்களிலும் உன்னைக் காண்

ஆன்மிகக் கதைகள் - 5


வேடிக்கையில் விருப்பமுள்ள ஒருவன் இருந்தான். அவன் பல கண்ணாடிகளைத் தனது அறையின் நாலாபக்கச் சுவர்களிலும், அறையின் மேற்பலகைகளிலும் பதித்து வைத்திருந்தான். ஒரு அங்குல இடைவெளி கூட இல்லாமல் கண்ணாடிகளைப் பதிந்திருந்தான். அப்படிப்பட்ட அந்த அறையில் சென்று கதவினை மூடிக் கொண்டு, மின் விளக்கின் விசையினைத் தட்டி ஒளிரவிட்டான். அறை மத்தியில் நின்று தனது விம்பங்கள் பலநூறு வடிவத்தில் தெரிவதைக் கண்டு மகிழ்ந்தான். இக் காட்சியை மிகவும் இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பல கோணங்களில் நின்று வெகுவாக இரசித்தான். இவ்வாறு சில நிமிடங்கள் பார்த்த பின்னர் கதவினை மூடுவதற்கு மறந்து வெளியே சென்றான்.

சில நிமிடங்களில் இவன் வளர்த்து வந்த நாய், பூட்டப்படாதிருந்த அந்தக் கண்ணாடி அறைக்குள் சென்றது. தனது விம்பத்தைக் கண்ணாடியிற் கண்டது. அதன் விம்பங்களை வேறு நாய்கள் என நினைத்து அவற்றோடு பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டது. அகோரமாகச் சண்டை போட்டது. இதனால் களைப்படைந்து, இளைத்து ஈற்றில் இறந்து விட்டது.

இவ்வாறுதான் மனிதனும் பிற மனிதர்களைத் தன்னிலும் வேறுபட்டவனாக நினைக்கின்றான். வீணே சண்டைகள் போடுகின்றான். இன்னும் எத்தனையோ தீமைகளைப் புரிகின்றான். இதனால் தானும் அழிந்து மற்றவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துகின்றான். அறிவீனத்தால் அழிந்த நாயிற்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடுகின்றது.

எப்போது மற்றைய மனிதர்களையும் தன்னைப்போலவே நேசிக்கின்றானோ, அப்போது பல பிரச்சனைகள் அடியோடு ஒழிந்துவிடும். மனிதர்கள் மட்டுமல்ல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுமே தனது பிரதிபிம்பம் என நினைக்க வேண்டும். அதாவது மன்னுயிரயும் தன்னுயிர் போலவே நேசிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் இவ்வுலகமே சொர்க்கபுரியாக மாறிவிடும்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : ஆன்மிகக் கதைகள்-4

search tags : Aanmika Kathaigal, Relegious Story, ஆன்மிகக் கதைகள்

_*_*_*_

Tuesday, June 23, 2009

சப்த மாதர்



சப்த மாதர்

சப்த மாதர்களைப் பற்றி அறிவீர்களா?. வாருங்கள் அறிந்து கொள்வோம்.



1. பிராமி

பிரம்மனின் சக்தி. இவர் மஞ்சள் நிறமானவர். நான்கு முகங்களையும், ஆறு கரங்களையும் கொண்டு காணப்படுவார். வலது பக்க மூன்று கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய இருகரங்களிலும் அட்சமாலை, சிகுவா என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க மற்றையன புத்தகம், கமண்டலம் என்பனவற்றை ஏந்தியவாறு காணப்படும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம் என்னும் நூல்கள் பிராமியை நான்கு கரங்களுடன் விபரிக்கின்றன. இவர் செந்தாமரை மீது உட்கார்ந்திருப்பார். வாகனமாகவும் கொடியாகவும் அன்னம் காணப்படும். மஞ்சள் ஆடை உடுத்தி, ஆபரணங்களை அணிந்திருப்பார். தலையில் கரண்ட மகுடம் காணப்படும்.


2. மகேசுவரி

சிவனின் சக்தி. வெள்ளை நிறமானவர். இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. விஷ்ணுதர்மோத்திர புராணத்தில் இவருக்கு ஆறு கரங்களும், ரூபமண்டனம், மச்சபுராணம், அம்சுமத்பேதாகமம், பூர்வ காரணாகமம் என்பனவற்றில் நான்கு கரங்களும் கூறப்பட்டுள்ளது. இவரது தலையில் ஜடா மகுடம் காணப்படும். அதில் பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.


3. கௌமாரி

முருகனின் சக்தி. இவர் ஆறு முகங்களையும், பன்னிரு கரங்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது. பன்னிரு கரங்களில் இரு கரங்கள் வரத, அபய முத்திரைகளில் இருக்க மற்றைய கரங்கள் வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி, தாமரை, சேவல், பரசு என்பனவற்றினை ஏந்தியிருக்கும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம், காரணாகமம் என்பனவற்றில் இவருக்கு நான்கு கரங்கள் கூறப்பட்டுள்ளது. அம்சுமத்பேகாமத்தின்படி இவரது நான்கு கரங்களுள் இரு கரங்கள் அபய வரத முத்திரையிலிருக்கும். மற்றையன வேல், சேவல் என்பனவற்றினை ஏந்தியிருக்கும். இவர் பதின்மூன்று கண்களைக் கொண்டிருப்பார் எனவும் இவ்வாகமம் கூறுகின்றது. கௌமாரி மயிலினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டவள்.


4, வைஷ்ணவி

விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம் என்னும் நூல்கள் வைஷ்ணவியை நான்கு கரங்களுடன் விபரிக்கின்றன. வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.


5. வராகி

வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் என வராகியினைப்பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது. தண்டநாத வராகி, சுவப்ன வராகி, சுத்த வராகி என்னும் மேலும் மூன்று வகையான வராகியின் உருவ அமைப்பு பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றது.

தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.


6. இந்திராணி

இந்திரனின் சக்தி. இவர் பொன்னிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது. வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும், மற்றையனவற்றில் அட்ச மாலை, வஜ்ரம் என்பன காணப்படும். இடது பக்க கரங்களிலொன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன தாமரை, பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறும் காணப்படும். அம்சுமத்பேதாகமம், பூர்ணாகாரணாகமம் என்னும் நூல்களில் இவருக்கு நான்கு கரங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்க மற்றைய இரு கரங்கள் வேல், வஜ்ரம் என்பனவர்றினை ஏந்தியிருக்கும். தேவி புராணத்தில் அங்குசம், வஜ்ரம், என்பனவற்றினை ஏந்திய இரு கரங்களுடன் கூறப்பட்டுள்ளது. இந்திராணிக்கு ஸ்ரீ தத்துவநிதியில் ஆயிரம் கண்களும், அம்சுமத்பேதாகமத்தில் மூன்று கண்களும், பூர்வகாரணாகமத்தில் இரு கண்களும் கூறப்படுகின்றது. ரூபமண்டனம் என்னும் நூல் இவரை பல கண்களுடன் காட்டவேண்டும் எனக் கூறுகின்றது. இவரது தலையில் கிரீடம் காணப்படும். பல ஆபரணங்களை அணிந்திருப்பவர். இந்திராணி சௌமிய இயல்பினைக் கொண்டவர். இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.


7. சாமுண்டி

கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார். இவருக்குப் பத்துக்கரங்கள் காணப்படும். வலது கரங்களில் உலக்கை, சக்கரம், சாமரை, அங்குசம், வாள் என்பனவும், இடது கரங்களில் கேடயம், பாசம், வில், தண்டம், கோடரி என்பன காணப்படும் என சாமுண்டியின் உருவ அமைப்பினைப் பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது. விஷ்ணு தர்மோத்திர புராணத்தில் சாமுண்டி செந்நிறத்தினைக் கொண்டிருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. தேவி மகாத்மியம் இவர் இரு கரங்களைக் கொண்டிருப்பார் எனவும் அவை வாள், பாசம் என்பன ஏந்தியிருக்கும் எனவும் விபரிக்கின்றது. இவர் நான்கு கரங்களையும், மூன்று கண்களையும் கொண்டவர் எனவும் தடித்த மேல் நோக்கிய கேசம் காணப்படுமெனவும் செந்நிறத்தினைக் கொண்டிருப்பார் எனவும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.


நன்றி : மயூரமங்கலம்


search tags : Saptha Matha, Saptha Mathar, சப்த மாதா, சப்த மாதர்

_*_*_*_

Monday, June 22, 2009

இராமாயணம்-6



இராமாயணம்

பகுதி - 6

(முன்னைய பாகம் : செல்க)


கானகத்தில் தங்குதல்:-


அசோகங்கொழுந்து, மாங்கொழுந்து முதலிய கொழுந்துகளை விரித்து அரச குமாரர்களைப் படுக்க வைத்தார். கிழக்கே தலைவைத்துப் படுப்பது நல்லது. கண்கள் இடப்பக்கம் கீழே இருக்குமாறு படுத்தால் பிராண வாயு சூரிய நாடியிற் செல்லும். நாடியில் ஜெபம் செய்துகொண்டே இராமர் கண்ணுறங்கி விட்டார். இராமருடைய கால்மாட்டில் இளைய பொருமாள் படுத்துக் கண்ணுறங்கினார். உலக சொத்தாகிய அரச குமாரர்களை அரக்கர்களும், பேய்களும், விலங்குகளும் வாழ்கின்ற காட்டில் உறங்க வைத்துவிட்டு, முனிவருக்கு உறக்கம் வருமா? இராமருடைய தலைமாட்டில் அமர்ந்த இராமரையே உற்று நோக்கி கொண்டிருந்தார். இராமருடைய திருமுகத்தில் கருணை வழிந்துகொண்டிருந்தது. மற்றவர்கள் உறங்கினால் கருணையா வழியும்?

இராமா! உன் தந்தையாகிய தசரதன் நான் உரட்டிய உரட்டலுக்குப் பயந்து இந்தப் பொல்லாத கானகத்தில் உன்னை எவ்வாறுதான் அனுப்பினானோ? அவன் கல்மனம் படைத்தவன் போலும். நீ எனக்கு மகனாகப் பிறந்திருந்தால் ஆயிரம் விசுவாமித்திரன் வந்தாலும் உன்னைக் கானகத்துக்கு அனுப்பியிருக்கமாட்டேனே. நீ பாற்கடலில் பாம்பணையில் துயின்ற பரம்பொருள் அல்லவா? உலகம் உய்ய மனிதனாகப் பிறந்து ஒரு சுகமும்
இல்லாத இந்த வெய்ய கானகத்தில் பெறுந்தரையில் உறங்குகின்றாயே.. என்று மனதிற்குள் கூறிக்கொணடு கண்விழித்துக் கொண்டிருந்தார்.

விடியற்காலையில் மூவரும் எழுந்து நீராடிக் காயத்ரி மந்திர ஜெபம் செய்து புறப்பட்டார்கள். வழியில் சிறந்த ஓர் ஆசிரமத்தைக் கண்டார்கள். விசுவாமித்திரர் இராம இலட்சுமணரைப் பார்த்து, ரகு குல ரத்தினங்களே! இது மூவரும், தேவரும் யாவரும் போற்றும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் யோகம் செய்த ஆசிரமாகும். சிவமூர்த்தியே தவநிலையில் நின்ற இந்த ஆசிரமம் மிகவும் வலிமை வாய்ந்தது. அளவிடற்கரிய மகிமை உடையது. சிவமூர்த்தியின் யோகத்தைக் கலைக்க மன்மதன் முயன்ற போது சிவமூர்த்தியின் நெற்றிக் கண்ணால் அவன் அங்கம் அற்ற இருந்தபடியால் இது அங்கதேசம் என்று வழங்கப்படுகிறது என்று கூறினார்.அன்று அங்குச் சிவசிந்தையுடன் தங்கினார்கள்.


தாடகைவதம்:-

மறுநாள் மூவரும் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு புறப்பட்டார்கள். வழியில் கொடிய பாலைவனம் தென்பட்டது. தாங்கமுடியாத வெப்பமுடைய அக்கானகத்தில் பசி தாகத்தால் அரச குமாரர்கள் அல்லல் பட்டார்கள். விசுவாமித்திரர் இராம இலட்சுமணர்களுக்கு பலை, அதிபலை என்று இரண்டு விஞ்ஞைகளை உபதேசித்தார். அவர்களுக்கு அப்பொழுது பதினாயிரம் யானை பலம் உண்டாயிற்று. பசி தாகங்கள் மறைந்தன.

இராமர் முனிவரை நோக்கி, " குருநாதா! இந்தக் கானகம் புல் பூண்டு இல்லாமல் பாலைவனமாக இருப்பதற்கு என்ன காரணம்? சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணால் எரிந்ததா? என் தந்தையாருடைய ஆட்சியில் இப்படிக் அழியக் கூடாதே! " என்று வினாவினார்.

விசுவாமித்திர முனிவர் கூறுகின்றார். " இராகவா, இதுதான் தாடகை வாழ்கின்ற கானகம். உலோபகுணம் ஒன்றே ஆயிரமாயிரம் நற்குணங்களை அழிப்பதுபோல் தாடகை ஒருத்தியே இந்த வளமான கானகத்தை அழித்துப் பாலைவனமாக்கி விட்டாள். "

சகேது என்ற யட்சன் பிரமதேவரை வேண்டித் தவம் செய்து ஆயிரம் யானை பலத்துடன் ஒரு பெண் மகளைப் பெற்றான். அவளுக்குத் தாடகை என்று பெயர் சூட்டினான். அவள் சுந்தன் என்ற யட்சனைத் திருமணம் செய்த கொண்டாள். அவளுக்குச் சுபாகு, மாரிசன் என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள்.

தாடகையின் கணவனாகிய சுந்தன், அகஸ்தியரின் சிவபூசைக்குரிய பூமரங்களை ஒடித்துவிட்டான். அவர் தழல் எழ விழித்தார். அவன் சாம்பலாகினான. இதனை அறிந்த தாடகையும், அவளுடைய மக்களும் அகஸ்தியரை வணங்கிக் குற்றத்தை மன்னிக்க வேண்டும் என்று கேட்கும் பண்பை விட்டு, அசுரர்களைப்போல் கல்லும் மண்ணும் வீசி எறிந்து ஆரவாரம் செய்தார்கள். அகஸ்தியர் சினந்து, நீங்கள் அசுரர்களாகப் போகக் கடவது என்று சாபம் கொடுத்தார். யட்சர்களாகிய அவர்கள் அரக்கர்களாக மாறி முனிவர்களுக்கு எண்ணில்லாத கொடுமை புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

அவள் மலைப்பாம்புகளைக் கையில் வளையல்களாக அணிந்தகொண்டிருப்பாள் சூலத்தை ஏந்திக் கொண்டிருப்பாள்.

இராமா! தாடகையும், அவள் புதல்வர்களும் சதா முனிவர்களுக்குக் கொடுமை விளைவித்து வருகின்றார்கள். உலக நலன் கருதி நான் செய்யும் வேள்விகளைத் தடுத்துக் கெடுத்து விடுகின்றார்கள். தாடகை இராவணனிடம் உறவு கொண்டு அவன் ஏவலினால் அளவற்ற கொடுமைகளைச் செய்து வருகின்றாள் என்றார்.

தாடகை மனிதர்கள் வரும் வாசனையை மோப்பத்தால் உணர்ந்து ஆலகால விஷம் போலவும், வடமுகாக்கினி போலவும் சீறி எழுந்தாள். இராமர் அவளைப் பெண் என்று கருதிப் போர செய்யத் தயங்கி நின்றார்.

விசுவாமித்திரர் இராமனைப் பார்த்து, ரகுவீரா! இவளைப் பெண் என்று கருதாதே. எத்தனை எத்தனை கொடுமை உளவோ அத்தனையும் செய்பவள். முனிவர்களாகிய எங்களைக் கொன்று தின்னாமல் விட்டிருக்கின்றாள். அது கருணையினாலன்று. நாங்கள் தவத்தால் உடம்பை வாட்டிச் சதைப்பற்று இல்லாமல் இருப்பதனால், சாறு சீங்கிய கோது என்ற எங்களை விட்டிருக்கின்றாள். ஆதலால், இவளைக் கொல்லுவது அறம் ஆகும் என்றார்.

தாடகை, இராமன்மீது ஒரு சூலத்தை ஏவினாள். இராமர் அதனைப் பொடியாக்கினார். ஆன்றோர்கள் வாக்கே மறை மொழி என்றெண்ணி இராமர் தாடகைமீது சிறந்த அம்பினை ஏவினார். தாடகை மாண்டு விழுந்தாள். தேவர்கள் மலர் மழை பொழிந்தார்கள். இராமபிரானக்குச் சிறந்த பாணங்களைத் தருமாறு தேவர்கள் விசுவாமித்திரரிடம் வேண்டினார்கள்.

விசுவாமித்திரர் தவஞ்செய்து சிவபெருமானிடம் பெற்ற 500 வகையான அஸ்திரங்களையும், அதனைத் திருப்பியழைக்கின்ற உபசம்மாரங்களையும் இராமருக்கு முனிவர் பெருமான் உபதேசித்தருளினார்.

அந்த அஸ்திரதேவதைகள் இராமர் முன் தோன்றி, நீர் அழைக்கின்றபோது நாங்கள் வந்து உனக்கு உதவி புரிவோம் என்று கூறி மறைந்தன.

இராமரால் விசுவாமித்திரர் அடைந்த பயன் பத்துச் சதமாகம், விசுவாமித்திரரால் இராமர் அடைந்த பயன் 90 சதமாகும். ஜபம்
புரிபவனுக்கு ஜெபமாமலை வேண்டும். பூஜை புரிபவனுக்கு நல்ல நாதமுள்ள மணி வேண்டும். எழுதுகின்றவனுக்கு எழுதுகோல் வேண்டும். இந்த அஸ்திர லாபத்தை முனிவரால் இராமர் பெற்றார்.


தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 5


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Sunday, June 21, 2009

விவேகானந்தரின் பொன்மொழிகள்-1



சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்


பகுதி - 1


சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறியாமல் யாரும் இருக்கமுடியாது. அவர் ஒரு வீரத்துறவியாவார். அவரது பொன்மொழிகள் அர்த்தம் மிகுந்தவை. அவற்றில் பொதுவாக அவர் கூறிய சில பொன்மொழிகளைப் பார்க்கலாம்.


பொதுவான பொன்மொழிகள்:-


* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.

* அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.

* கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.

* காமம், பொன்னாசை இவைகளால் ஆளப்படும் அற்பர்கள் பொருட்படுத்தப்படக்கூடியவர்கள் அல்லர்.

* எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.

* அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.

* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.

* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.

* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.

* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.

* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.

* அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.

* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.

* எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.

* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.

* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

* உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.


தொடரும்...


search tags : Swami Vivekanandar, Vivekanandar, Ponmoligal, சுவாமி விவேகானந்தர், விவேகானந்தர், பொன்மொழிகள்

_*_*_*_

Saturday, June 20, 2009

அபிராமி அந்தாதி 51-60



அபிராமி அந்தாதி

பகுதி 51-60


அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...


அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே. 51

திரிபுரத்தை நிலையென்று நினைத்த, தன்மையற்ற அசுரர்களை அழித்த சிவபெருமானும், திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியே! அன்னையே! உன்னையே சரணம் சரணம் என்று அண்டிய அடியார்களின் மரண பயத்தை ஒழிப்பாய்! அது மட்டுமல்ல; அவர்களைப் பொய்மையான இந்த உலக வாழ்வினின்றும் விடுவிப்பாய் (பிறப்பறுப்பாய்), பெருநிலை தருவாய்!


வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,-பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 52

ஏ, அபிராமி! உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே! கேள்: வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் - இவையே நின் திருவடிச் சின்னம்!


சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே. 53

ஏ, அபிராமி! மென்மையான இடையில், செம்மையான பட்டணிந்தவளே! அழகிய பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே! வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில் சூடியவளே! மூன்று திருக்கண்களை உடையவளே! உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.


இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54

ஏ, வறிஞர்களே! நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள். தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே!


மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே. 55

அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும் இல்லையே!


ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்--
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே. 56

அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய் (பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ! ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும், என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.


ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே? 57

ஏ, அபிராமி! என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே! நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய்! அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்! இதுவோ உனது மெய்யருள்? (விரைந்து அருள் புரிவாயாக!).
[ 'ஐயன் அளந்த படியிருநாழி’ என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப் புரந்தனள் என்பது வழக்கு. ]

அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. 58

அபிராமி! வைகறையில் மலர்ந்த தாமரையினிடத்தும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருப்பவளே! குவிந்த தாமரை மொக்குப் போன்ற திருமுலையுடைய தையலே! நல்லவளே! தகுதி வாய்ந்த கருணை சேர்ந்த நின் கண் தாமரையும், முகத்தாமரையும், பாதத் தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை நான் தஞ்சமாக அடைய மாட்டேன்.


தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே. 59

அபிராமித் தாயே! நீண்ட கரும்பு வில்லையும், ஐவகை மலர் அம்புகளையும் கொண்டவளே! உன்னைத் தவிர வேறொரு புகலிடம் இல்லையென்று தெரிந்தும், உன்னுடைய தவநெறிகளைப் பயிலாமலும், நெஞ்சத்தில் நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக நீ என்னைத் தண்டிக்கக் கூடாது. புறக்கணிக்காமல் எனக்கு அருள் பாலிக்க வேண்டும். உலகத்திலுள்ள பேதைகளாகிய பஞ்சும் நாணக்கூடிய மெல்லிய அடிகளை உடைய பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்கமாட்டார்கள் அல்லவா? அதே போன்றே நீயும் எனக்கு அருள வேண்டும்.


பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க-
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும், சால நன்றோ-அடியேன் முடை நாய்த் தலையே? 60

ஏ, அபிராமி! பாலைவிட இனிமையான சொல்லை உடையவளே! நீ உன்னுடைய திருவடித் தாமரையை, திருமாலைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் வணங்கும் சிவபிரானின் கொன்றையணிந்த நீண்ட சடைமுடியில் பதித்தாய். அடுத்துன் அருட்கண்கள் பட்டு உயர்ந்து நிற்கும் நால்வகை வேதத்திலே உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பதித்தாய். ஆனால் இன்று நாற்றமுடைய நாயாகிய என்னுடைய தலையையும், உன்னுடைய திருவடிகளில் சேர்த்துக் கொண்டாய். (மேற்கூறிய சிவபெருமான், நான்கு வேதங்களோடு என்னையும் ஒப்பிட, நான் அவ்வளவு சிறந்தவனா?)


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 41-50


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.


search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

Friday, June 19, 2009

இராமாயணம்-5



இராமாயணம்

பகுதி - 5

(முன்னைய பாகம் : செல்க)


விசுவாமித்திர முனிவருடன் கானகம் செல்லல்:-

விசுவாமித்திரர் கூறினார், ஆதித்தன் குலந்தழைக்க வந்த அரசரேறே! நான் சந்நியாசி. எனக்கு என்ன வேண்டும்? எனக்கு எதிலும் விருப்பு வெறுப்பு இல்லை. யாகம் மூன்று வகைப்படும்.

1. பகைவரை அழிக்கச் செய்வது. அது அபிசார ஓமம் எனப்படும்.

2. தான் உய்யப் பயன் கருதிச் செய்வது. அது புத்ர காமேஷ்டி - அசுவமேதம் முதலியன.

3. உலகம் உய்யப் பொது நலங்கருதிச் செய்வது. அது உத்தம யாகம் எனப்படும். வேந்தர் பெருமானே! உலக நலன்கருதி நான் தருக்கள் நிறைந்த குளிர்ந்த கானகத்தில் யாகம் செய்வேன். அதனை அரக்கர்கள் தடுத்து இடையூறு செய்கின்றார்கள். ஆதலால், அந்த வேள்வியைக் காவல் புரிய ஒருவனையனுப்ப வேண்டும் என்று கூறினார்.

நல்லது, சுமந்திரரே! ஒரு போர் வீரனை அனுப்பு..

மன்னவனே! சாமான்யமான போர் வீரனால் ஆகாது...

சுவாமீ! சேனைத் தலைவனை அனுப்புகின்றேன்...

அன்பனே! சேனாதிபதியால் ஆகாது...

ஐயனே! அடியேன் வருகின்றேன்...

வேந்தனே! உன்னாலும் ஆகாது, உன்னைப் பார்க்கினும் சிறந்தவன் ஒருவன் இருக்கின்றான், அவனை அனுப்புக...

குருநாதா! என்னைப் பார்க்கிலும் சிறந்தவன் அயோத்தியில் இருக்கின்றானா?, நான் பத்து ரதங்களை வென்றவன், ஓப்பாரும் மிக்காரும் இல்லாதவன், அடியேன் சம்பரனை அழித்தவன், தோள்வலியும் வாள்வலியும் மிக்கவன், சுமந்திரரே! என்னைப் பார்க்கிலும் சிறந்தவன் அயோத்தியில் இருக்கின்றானா?...

கொற்றவரே! உம்மைவிடச் சிறந்தவர் சுவர்க்க மத்திய பாதலம் ஆகிய மூவுலகங்களிலும் இல்லை...

குருநாதா! சுமந்திரர், அதிநுட்பமான மதிநுட்பம் உடையவர் அவர் கூறியதைக் கேட்டீரா? என்னைவிடச் சிறந்தவன் இல்லை, இல்லாததை இருப்பதாக எண்ணி கூறுகின்றீர், ஓருவன் ஆமை மயிர்க்கம்பளம் கேட்டானாம், இன்னொருவன் குதிரைக் கொம்பு பொடிடப்பி கேட்டானாம், அதுபோல எனக்கு நிகர் ஒருவரும் இல்லை, உண்டு என்று தாங்கள் கூறுகின்றீர்கள்...

தசரதா! உன்னைப் பார்க்கிலும் ஒரு கோடி மடங்கு உயர்ந்தவன் அயோத்தியில் இருக்கிறான், அவனை அனுப்பு, இல்லாத ஒன்றை இருப்பதாக நான் ஒருபோதும் கூறமாட்டேன். என் வாக்கு சத்தியம்...

விசுவாமித்திருடைய வசனங்களைக் கேட்டுத் தசரதர் சிறிது சிந்தித்தார்.

குருநாதா! என்னைப் பார்க்கிலும் பலமடங்கு உயர்ந்தவர் வசிட்ட முனிவர். அவரை அழைத்துப் போங்கள்...

விசுவாமித்திரர் புன்னகை பூத்தார். அவர் ஒரு தாடி நான் ஒரு தாடி. இரு தாடிகளும் சென்று தாடகையிடம் வாதாடி நிற்க வேண்டும். நான் கூறுவது வசிஷ்டரை யன்று. அவன் வேத வேத்யன். அவன்தான் இராமன், மன்னவனே, நீ பெற்ற நான்கு மைந்தர்களில் கரிய செம்மல் அரிய ஆற்றல் படைத்தவன். இராமனை அனுப்புக என்றார்...

இராமனையனுப்பு என்ற சொல் புண்ணிலே வேல் பாய்ந்தது போல் மன்னவனை வாட்டி வதைத்தது. அளவில்லாத அல்லல் அடைந்தார். விசுவாமித்திரருடைய திருவடியில் வீழ்ந்தார். கவலைக் கடலில் ஆழ்ந்தார்.

குருநாதா! இராமன் இளம் பாலகன். போர் முகம் அறியாதவன். மாயத்தில் வல்ல அரக்கர்களை வெல்லும் திறம் அறியாதவன். அடியேன் பல போர்களில் வெற்றி பெற்றவன். நான் வருகின்றேன். அரக்கர்களைக் கொன்று வேள்வியை முடித்துக் கொடுப்பேன் என்றார்...

தசரதர் இராமனைத் தன்னுடன் அனுப்ப மயங்கிய தன்மையினால் விசுவாமித்திர் முனிவர் வெகுண்டு எழுந்தார். அவருடைய கோபக்கனல் உலகங்களை வெதுப்பியது. சூரியன் மேலண்டத்துக்குப் போய் மறைந்தான். நிலம் நடுங்கியது, திசை யானைகள் அஞ்சி ஒடுங்கின, சராசரங்களெல்லாம் அசைந்தன.

வசிட்ட முனிவர் விசுவாமித்திர முனிவரின் சீற்றத்துக்கு அஞ்சித் தசரதரைப் பார்த்து மன்னவரே! இராமனை விசுவாமித்திரருடன் அனுப்பி வையுங்கள். அதனால் இராமனுக்கு ஆதித்த குலத்துக்கும் நன்மை உண்டாகும். என் வார்த்தையைத் தட்ட வேண்டாம் என்று கூறினார்...

தசரதர் சுமந்திரரைப் பார்த்து, இராமனையும், இலட்சுமணனையும் அழைத்து வருமாறு கட்டளையிட்டார். சுமந்தரர் கௌசலையின் அரண்மனைக்குச் சென்று. இந்தத் தகவல்களைக் கௌசலையிடம் கூறி இராமனை அழைத்துக்கொண்டு வந்தார்.

இராமர் வசிட்டரையும், விசுவாமித்திரரையும், தந்தையாரையும் திருவடியில் வீழந்ந்து வணங்கினார். தசரதர் இராம இலட்சமணரின் கரங்களைப் பற்றி விசுவாமித்திரருடைய கரத்தில் வைத்து, சுவாமி! இவர்களுக்குத் தாய், தந்தை, குரு எல்லாம் தேவரீர்தாம். இவர்களைப் பெறுவதற்கு நான் அறுபதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்தேன். என் உயிரைத் தங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். திரும்பவும் கொண்டு வந்து சேர்க்கவும் என்று தழுதழுத்த குரலில் சொன்னார்.

விசுவாமித்திர முனிவர் விடைபெற்றுப் புறப்பட்டார். வாகனங்களில் சென்றால் எறும்பு, புழு முதலிய சிற்றுயிர்கள் மாண்டொழியும். அதனால், முனிவர்கள் தேர் முதலிய ஊர்திகளில் செல்லாமல் நடந்தே பிரயாணம் செய்வார்கள். அதனால், விசுவாமித்திரரி நடந்த போவதனால், இராம, இலட்சுமணர் தொடர்ந்து போவதாயிற்று. வழியில் மிகப் புனிதமான சரயு நதியைக் கண்டார்கள். அதில் நீராடி மகிழ்ந்து ஒரு மலர்ச் சோலையை அடைந்தார்கள். அங்குக் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துச் சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்தார்கள்.

காணாமல் கொடு, கோணாமல் கொடு, கண்டு கொடு என்பது பழமொழி. சூரியன் உதிப்பதற்கு முன்னமேயே சூரியனுக்கு அர்க்கியம் கொடுப்பது, காணாமல் கொடுப்பதாகும். சூரிய பகவான் உச்சியிலிருக்கம் பொழுது அர்க்கியம் கொடுப்பது கோணாமல் பொடுப்பதாகும். சூரிய பகவான் மேற்கடலில் மூழ்கும்பொழுது சூரியனைப் பார்த்துக்கொண்டே அர்க்கியம் கொடுப்பது கண்டு கொடுப்பதாகும். இரவில் படுக்க வேண்டுமே, எவ்வாறு படுப்பார்கள்?


தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 4


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

நாளைய விரதம் 20/06/2009



நாளைய விரதம்

நாளை [ 20/06/2009, சனிக்கிழமை] சனிப்பிரதோஷ விரததினமாகும். சிவனுக்குரிய விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்றாகும். அதிலும் சனிக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ விரதமானது மகத்தான சக்தி படைத்தது. அன்பர்கள் இவ்விரதத்தினைக் கைக்கொண்டு சிவபெருமானின் அருளுக்குப் பாத்திரமாகிடுங்கள்.

இவ் விரதத்தைப் பற்றி அறிய கீழே உள்ள பிரதோஷ விரதம் எனும் சுட்டியை அழுத்துங்கள். (Click செய்யவும்)

Thursday, June 18, 2009

அபிராமி அந்தாதி 41-50



அபிராமி அந்தாதி

பகுதி - 41-50

அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...


புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே. 41

அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.


இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே. 42

அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!


பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே. 43

சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! சிவந்த சிந்தூர மேனி உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!


தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே. 44

எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன்.


தாயே! தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே. 45

அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.


வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே. 46

ஏ அபிராமியே! விஷ„த்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.


வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. 47

அன்னையே!அபிராமித் தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்!


சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. 48

ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளும், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளும் மீண்டும் பிறப்பார்களோ? மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!


குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்-
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே. 49

நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!


நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே. 50

ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், வி‰ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 31-40


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.


search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

Wednesday, June 17, 2009

இராமாயணம்-4



இராமாயணம்

பகுதி - 4

(முன்னைய பாகம் : செல்க)


திரு அவதாரம் :-

சித்திரை மாதம் நவமி திதி புனர்வசு நட்சத்திரம் கடக லக்கினத்தில் இராமபிரான் திரு அவதாரம் செய்தார்.

ஒருபகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்(து)
அருமறைக் குணர்வரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்தெழில் காட்டும் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை.

மறுநாள் பூச நட்சத்திரத்தில் பரதரும். அதற்கு மறுநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் இலட்சுமணரும் சத்ருக்னரும் தோன்றினார்கள்.

மன்னவர்க்கு மகப்பேறு உண்டானதால் வரம்பில்லாத மகிழ்ச்சி அடைந்தார். அன்னதானமும், சொர்ண தானமும் வஸ்திர தானமும், பூதானமும், கோ தானமும் அள்ளி, அள்ளி தான தருமங்கள் செய்தார். ஏழாண்டுகள் வரியில்லை என்று பறை அறையச் செய்தார். கருவூலத்தைத் திறந்து எல்லாரும் அங்குள்ள நிதிகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். ஆலயங்களைப் புதுப்பிக்குமாறு கட்டளையிட்டார்.

எல்லாரும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார்கள். அயோத்தி மாநகரம் இன்பவெள்ளத்தில் நீந்தியது. வசிட்ட முனிவர் இராமன், பரதன், இலட்சுமணன், சத்ருக்னன் என்று பெயர் சூட்டினார். நான்கு வேதங்களைப் போல் நான்கு குமாரர்களும் இனிது வளர்ந்தார்கள். ஐந்து வயதுக்கு மேல் அவர்கள் வசிட்டருடைய ஆசிரமத்தில் வளர்ந்து கலை பயின்றார்கள்.

இராமர் வசிட்டருடைய குடிசையில் வளர்ந்தபடியினால் ஞானம் வளர்ந்தது. மாற்றாந் தாயாகிய கையேகி, கானகம் போ என்றவுடன் உடுத்த உடையுடன் காட்டுக்குப் போனார். அரண்மனையில் வளர்ந்திருந்தல் அட்வகேட் வீட்டுக்குப் போயிருப்பார். இராமர் தானே வலிந்து சென்று வறியவர்க்கு உதவி செய்வார். அவர்களுடைய குறைகளைக் கேட்டு நிறைவு செய்வார்.

விசுவாமித்திரர் வருகை :-

இராமருக்குப் பன்னிரண்டு வயது நிரம்பியது. சகல கலைகளிலும் வல்லவராக, மக்களுக்கு நல்லவராக விளங்கினார். சக்ரவர்த்தி அரசவையில் இந்திர பகவானைப் போல் சுந்தர வடிவுடன் வீற்றிருந்தார். வசிட்டர், சுமந்திரர், யாபாலி முதலிய அறிஞர்கள் அவரைச் சூழ்ந்து அமர்ந்திருந்தார்கள்.

உலகத்தை இரண்டாவதாக சிருஷ்டிக்கத் தொடங்கினவரும், காயத்ரி மந்திரத்துக்கு அதிதேவரையும், அளவற்ற தவம் செய்தவருமாகிய விசுவாமித்திர முனிவர் அங்கு எழுந்தருளினார்.

கடைக்காவலன் ஓடிவந்து மன்னர் பெருமானை வணங்கி, வேந்தர் பெருமானே விசுவாமித்திர முனிவர் வருகின்றார் என்று கூறினான். சக்ரவர்த்தி பிரமதேவரை எதிர்கொள்ளச் செல்லும் இந்திரபகவானைப்போல் பூசைக்குரிய சாதனங்களுடன் எதிர் சென்று, என் குலம் செய்த புண்ணியம் என்று வலம் செய்து வணங்கி, அவரை அழைத்துக்கொண்டு போய் மணித்தவிசில் இருத்தி, களபகஸ்தூரி சந்தனங்களாலும் மலர்களாலும் பாதபூசை செய்தார்.

நாம் ஓர் அதிகாரியைப் பார்க்கப் போவோமானால் அவரது அருகில் உள்ளவரைப் புகழுரை கூறி, அவரை நம் வசமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் அதிகாரியிடம் கூறிய கோரிக்கையை அவர் முட்டுக்கட்டை போட்டுத் தடுத்துவிடுவார். இந்த உலகியல் ஞானத்தை உடைய விசுவாமித்திரர், வசிட்டரை வணங்கித் தசரதரைப் பார்த்துக் கூறுகின்றார்.

தசரதா! வசிட்டரைக் குருநாதராகப் படைத்த உன் தவம் அளவிடற்கரியது. வசிட்ட முனிவருடைய கருணை உனக்கிருப்பதால் உனக்கு அனைத்து கருமங்களும் எளிதில் சித்தியாகும். மன்னர் மன்னரே! நேற்று நான் இந்திர உலகம் சென்று இந்திரனைச் சந்தித்தேன். இந்திரனே! சுகமா ? என்று கேட்டேன். இந்திரன் தசரதருடைய கருணையினால் சுகமாக இருக்கிறேன் என்றான். இந்திரனுடைய பொன்னுலகைச் சம்பராசுரன் கவர்ந்து கொண்டான். தசரதர், கைகேயி தேர் நடாத்தச் சென்று சம்பராசுரனைக் குலத்தோடு அழித்துப் பொன்னுலகை இந்திரனுக்கு அளித்தார். அந்த வெற்றித்திறத்தை விசுவாமித்திரர் இங்கே குறிப்பிடுகின்றார்.

தசரதா! உன்னைப் போன்ற உத்தம அரசனை எங்கும் காண இயலாது. நீ சத்திய சம்பந்தன். பரோபகாரி. நல்லற மூர்த்தி, நற்குண சீலன். உனக்கு எல்லாம் தெரியும். இல்லை என்ற கேட்பவருக்கு இல்லையென்று சொல்லத் தெரியாது. அளவற்ற பெருமையுடைய அரசர் பெருமானே! என்னைப்போன்ற முனிவர்களும், தேவர்களும் தங்களுக்கு ஓர் இடையூறு வந்தால் மலைகள் தோறும் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானிடம் சென்று முறையிடுவோம். கயிலை மலை சென்று கண்ணுதற் பெருமானிடம் முறையிடுவோம். திருப்பாற்கடலில் சென்று அரவணையில் அறிதுயில் புரிகின்ற அரிமுகுந்தனிடம் முறையிடுவோம். சத்தியலோகம் சென்று பரம தயாளமூர்த்தியாகிய பிரம தேவரிடம் முறையிடுவோம். பொன்னுலகம் சென்று அமராவதியை அரசு புரிகின்ற இந்திரனிடம் முறையிடுவோம். இங்கெல்லாம் சென்று நிறைவேறாத குறைகளை அயோத்தி மாநகரம் வந்து உன்னிடம் முறையிடுவோம். எங்களக்கு உன்னைத் தவிர புகலிடம் ஏது? என்று இனிய வசனங்களால் கனியமுதம் போல் கூறினார்.

புகழுரைக்கு மயங்காதார் யார்? கரடியைக் கண்ணாடிக் காட்டிப் பிடிக்க வேண்டும். சிங்கத்தைத் தோல்வலை போத்திப் பிடிக்க வேண்டும். யானையைக் குழி தோண்டிப் பிடிக்க வேண்டும். பெரிய மனிதர்களைப் புகழுரையால் வசம் செய்ய வேண்டும். இந்த யுக்தியைத் தெரிந்த விசுவாமித்திரர் தசரதரைத் தன்மை நவிற்சியால் புகழ்ந்து பேசினார். தசரதர் அகமும், முகமும் மலர்ந்தது. குருநாதா! என்னிடத்தில் ஏதாவது ஒரு சிறப்பு இருக்குமானால் அது தேவரீருடைய ஆசீர்வாதத்தினால்தான். நான் தங்களுடைய அடிமை. நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள். செய்கின்றேன் என்றார்.


தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 3


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Tuesday, June 16, 2009

பஜனையும் பக்தியும்



பஜனையும் பக்தியும்

ராமகிருஷ்ணரின் பொன்மொழிகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை. படிப்போருக்கு எளிதில் புரியும்வண்ணம் கூறினார். அவர் கூறியவற்றில், பஜனையும் பக்தியும் பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்...


* வாய்விட்டு உரக்கத்தான் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுமா?. உனக்கு எப்படி இஷ்டமோ அப்படிப் பிரார்த்தனை செய்யலாம். அவன் எப்போதும் உன் பிரார்த்தனையை நிச்சயமாகக் கேட்பான். எறும்பின் காலடி சப்தம் கூட அவனுடைய காதுகளில் கேட்கும்.

* பிரார்த்தனையால் வாஸ்தவமான பலன் உண்டா? உண்டு. மனமும் வாக்கும் ஒன்று சேர்ந்து ஊக்கத்தோடு ஏதேனும் ஒரு பொருளைப் பிரார்த்தித்துக் கேட்குமானால் அந்தப் பிரார்த்தனைகுப் பலன் கிடைக்கும். " ஈசுவரா! இவையெல்லாம் உன்னுடையவை " என்று வாயால் மட்டும் சொல்லி, அவையெல்லாம் தன்னுடையவை என்று மனதில் நினைக்கிறவனுடைய பிரார்த்தனைக்குப் பலன் உண்டாகாது.

* உனது நெஞ்சுக்குத் துரோகம் செய்யாதே, மனச்சாட்சியின்படி நட. நிச்சயமாக உனக்கு ஜயம் உண்டாகும். கள்ளம் கபடம் அற்ற உள்ளத்தோடு பிரார்த்தனை செய். ஈசுவரன் கேட்பான்.

* நெஞ்சில் உள்ளதையே வாயால் சொல்லு. உனது சொல்லுக்கும் நினைவுக்கும் அத்தியந்த ஒற்றுமை இருக்கட்டும். உன் மனம் உல்கத்திலேயே உழன்று கொண்டிருக்கும்போது, எல்லாம் ஈசுவரனே என்று வாயால் மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு யாதொரு நன்மையும் உண்டாகாது.

* ஒரு பெரிய சக்ரவர்த்தியிடம் போகவேண்டுமானால் வாசல் காப்போனையும், ஏஎனைய அதிகாரிகளையும் நயந்து கொள்ள வேண்டும். சர்வேசுவரனுடைய சந்நிதானத்தை அடைய வேண்டுமானால் வெகுவாகப் பக்தி செய்து, அநேக பக்தர்களுக்குத் தொண்டு செய்து, நெடுநாள் ஸாது ஸ்ஹவாஸம் செய்யவேண்டும்.

* உலகத்தைப் பற்றிய எண்ணங்களும் கவலைகளும் உன் மனதைச் சஞ்சலப்படுத்தும்படி செய்து கொள்ளாதே. செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செய். ஆயினும் உன் மனம் எப்போதும் இறைவனிடம் நிலைத்திருக்கட்டும்.

* திசையறி கருவியின் நுனி எப்போதும் வட திசையையே காட்டும் வரையில் கப்பலானது தனது மார்க்கத்தைவிட்டு விலகிப்போய் ஆபத்துக்குள்ளாவதில்லை. வாழ்க்கையாகிய கப்பலின் திசையறி கருவியாகிய மனிதனுடைய மனமானது பரப்பிரம்மத்தையே எப்போதும் நோக்கி அசைவற்றிருக்குமாகில் அது ஒவ்வோர் ஆபத்தையும் தாண்டிப் போகும்.

* எவ்விதம் பகவத் பிரார்த்தனை செய்ய வேண்டும்?. நாரத மகரிஷியைப் போல் பிரார்த்திக்க வேண்டும். உலகப் பொருள்களை நாம் பகவானிடம் யாசிக்கலாகாது. " ஓ ராமா, எனக்கு பக்தியும் உன் பாதக்கமலங்களில் சரணடையும் மனப்பான்மையும் தந்தருள்வாய் " என்று வேண்டிக் கொண்டார் அம்முனிவர், " நாரத ரிஷி, அவ்விதமே அளித்தேன். நாரதரே வேறு ஒன்றும் உமக்கு வேண்டாமோ ?" என்றார் ஸ்ரீராமச்சந்திர பிரபு.

" ஜகத்தையெல்லாம் மயக்கிவரும் மாயையின் வலையில் நான் சிக்குண்டு உழலாது காப்பாற்றப்பட வேண்டும் " என்று மறுவரம் வேண்டினார் நாரதர். " அங்கனமே ஆகுக; வேறு ஏதேனும் கேட்க மாட்டீரா? " என்றார் ஸ்ரீராமபிரான். அதற்கு நாரத மகரிஷி : அதுவே போதும், வேறொன்றும் நான் வேண்டேன் " என்று கூறிவிட்டார்.

* " ஏ பகவான்! நீ ரூபத்தோடு இருக்கிறாயா, அல்லது நீ ரூபமற்றவனா என்பது எனக்குத் தெரியாது. நீ எப்படி இருந்தபோதிலும் என்மீதுள்ள உன் கருணையால் என்னைக் கடாட்சித்து அருள்வாய். எனக்கு உன் தரிசனம் கிடைக்கும்படி அனுக்ரகம் செய்வாய் " என்று பிரார்த்திப்பாயாக.

* பகவானைப்பற்றி மனதில் சிந்தனை செய்வதற்கு ஏதுவாகயிருக்கும்படி பல ரூபங்களும் குணங்களும் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவைகள் ஒவ்வொன்றின் மீதும் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்பது அவசியம் இல்லாமல் போனாலும், உலகத்தைப்படைத்து நடத்துகிற ஒரு தெய்விக சக்தியிருப்பதாக நம்பி, கசிந்துருகிய மனதுடன் ஒருவன், "பகவானே, நான் உமது உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்தவனல்லேன். உமது உண்மை ஸ்வரூபத்தை நீரே எனக்குக் காட்டியருள வேண்டும் " என்று அவரைப் பிரார்த்தித்தால் பகவான் தம் கருணைப் பிரவாகத்தை அவன் மீது செலுத்துவார்.

* கடவுள் எல்லாவற்றையும் அறியவல்லவர். சிறு துரும்பு விழும் சத்தத்தையும் அவர் அறிவார். ஆகையால் என் குழந்தைகளே, உங்கள் பிரார்த்தனை ஒவ்வொன்றும் அவர் செவியிற்படும். என்றைக்காவது ஒரு நாள், சாகுந்தருவாயிலேனும் உங்களுக்குத் தம் வடிவைக் காட்டியருளுவார்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : உண்மை


search tags : sree ramakirishna paramahamsar, pon moligal, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பொன்மொழிகள்.

_*_*_*_

Monday, June 15, 2009

அபிராமி அந்தாதி 31-40



அபிராமி அந்தாதி

பகுதி - 31-40

அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...


உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே. 31

அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும், ஆண்பாதி, பெண்பாதி என்ற நிலையில் காட்சியளித்ததோடு அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும் அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை. வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த ஆசையும் இல்லாமல் ஒழிந்தது.


ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே. 32

அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!


இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே 33

தாயே! அபிராமியே! நான் செய்த தீய வழிகளுக்காக என்னை நெருங்குகின்ற எமன் என்னைத் துன்புறுத்தி, வதைக்கும் பொழுது, தாயே உன்னை அழைக்க, அஞ்சேல் என ஓடிவந்து காப்பவளே! சிவபெருமானின் சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்ற சந்தனம் பூசிய குவிந்த முலைகளையுடைய இளமையான கோமளவல்லித் தாயே! மரண வேதனையில் நான் துன்புறும் போது உன்னை, ’அன்னையே’ என்பேன். ஓடிவந்து என்னைக் காத்தருள்வாய்!


வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே. 34

தாயே! அபிராமி, நீ நான்முகங்களையுடைய பிரம்மனின் படைப்புத் தொழிலில் இருக்கின்றாய்! பசுமையான தேன் கலந்த துபள மாலையையும், நவமணி மாலைகளையும் அணிந்த மார்பினனாகிய திருமாலின் மார்பில் இருக்கின்றாய்! சிவபெருமானின் இடப்பாகத்திலும், பொன் தாமரை மலரிலும், விரிந்த கதிர்களுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்தும் தங்கியிருக்கின்றாய். உன்னைச் சரணமென்று வந்தடையும் பக்தர்களைத் துயரங்களிலிருந்து நீக்கி, வானுலக வாழ்வைக் கொடுப்பவள் நீயே.


திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே. 35

அன்னையே! அபிராமியே! திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடைய பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே! பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ! விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ!


பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே. 36

குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.


கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே. 37

என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!


பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்-
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே. 38

என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.


ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள்.
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே. 39

அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணையுண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே; உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!


வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே. 40

ஒளி பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி! தேவர்களும் வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள்! அறியாமை நிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள். என்றும் கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு வணங்க எண்ணினேன். இதுவே நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமாகும்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : அபிராமி அந்தாதி 21-30


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.

search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்

_*_*_*_

Sunday, June 14, 2009

இறைநாமத்தின் சக்தி



இறைநாமத்தின் சக்தி

ஆன்மிகக் கதைகள் - 4


ஒரு பெண் அடியாள் தனது குருவுக்குத் தொண்டு செய்து வந்தாள். குரு எவ்வாறு சிரத்தையுடன் இறை நாமத்தை உச்சரிப்பாரோ அவ்வளவு பக்தியுடன் இப் பெண் அடியாளும் ஜெபித்துவந்தாள். பசுவின் சாணியைப் பிடித்து காயவைத்து விறகாகப் பாவிப்பதற்குத் தினமும் வேலை செய்வாள். இவ்வாறு செய்து வெயிலில் காய்வதற்காக ஒரு நாள் வைத்தாள்.

அயலில் உள்ள வேறு ஒரு பெண் இதே வண்ணம் சாணி தட்டி, அடியவளின் சாணி உருண்டைகளுக்கு அருகில் காய வைத்தாள். ஏதோ ஒருவிதமாக இருவரினதும் சாணி உருண்டைகளும் கலந்து விட்டன. அயலவள் தனக்குரிய சாணி உருண்டைகளோடு அடியவளின் சாணி உருண்டைகளிற் சிலவற்றை எடுக்க எத்தனித்தாள்.

இதனைக் கேள்வியுற்ற குருவானவர், " எனது அடியாள் உருட்டிய சாணி உருண்டைகளை மிக இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும் " என்று கூறிவிட்டு ஒவ்வொரு சாணி உருண்டைகளையும் எடுத்துத் தனது காதருகே வைத்தார். சிலவற்றில் இறைவனது நாமம் ஒலிப்பது கேட்டது. எதனிடம் இறை நாமம் ஒலிப்பது கேட்க முடியுமோ அவைகளை வேறாக்கினார். இவ்விதம் இரு பெண்களுக்குமிடையில் வந்த பிணக்கை நீக்கிவிட்டார்.

என்ன விந்தை; பெண் அடியாள் நின்றும், இருந்தும், கிடந்தும் எத்தொழிலைச் செய்தாலும் இறை நாமத்தை இடைவிடாது உச்சரித்த வண்ணமாகவே இருப்பதனால் அச்சொற்களைச் சாணியின் ஈரலிப்புத்தன்மை ஈர்த்தது. அது காரணமாக அச்சொற்கள் எதிரொலித்த வண்ணமிருந்தன.

இது போலத்தான் நாம் எத்தனை தடவை இறைவனது நாமத்தை உச்சரிக்கின்றோமோ அத்தனையும் நமக்கு நன்மையே. பின்னர் நீங்கள் உச்சரிக்காது இருக்கும் நேரத்தில் கூட மனதில் அதன் எதிரொலியை உங்களால் உணரமுடியும்.

ஆலயங்களில் அர்ச்சகர் மந்திரங்களை உச்சரித்து விக்கிரகத்திற்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்வார். அவ் விக்கிரகம் அம் மந்திரத்தினை ஈர்த்து, அதற்கான சக்தியையும் வெளிவிடும். இன்றும் சிறப்பாக, நியமத்தோடு பூஜை செய்யப்படும் விக்கிரகங்கள் மிகுந்த சக்தியோடு விளங்குவதைக் காணலாம்.


நன்றி : சுவாமி ராமதாஸ் அருளுரைகள்


search tags : aanmikam, aanmigam, religious story, ஆன்மிகக் கதைகள், பயனுள்ளவை

_*_*_*_

Wednesday, June 10, 2009

விஷ்ணு தொகுப்பு




இந்து முரசில் பதியப்பட்ட, அனைத்து விஷ்ணு பகவான் சம்பந்தபட்ட ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் ஆகியவற்றின் இலகுவாக்கப்பட்ட தொகுப்பினை இங்கே நீங்கள் காணலாம்:-
( 'செல்க' என்பதன் மீது சொடுக்கவும்.[Click செய்யவும்] )



* ஸ்தோத்திரம் *

விரைவில்


* mp3 பாடல்கள் *

கண்ணன் mp3 பாடல்கள்-1 : செல்க


* காணொளி *

விரைவில்


search tags : Lord Kanna, Lord vishnu, Narayana, mp3, விஷ்ணு, கண்ணன், நாராயணன்

Tuesday, June 9, 2009

கண்ணன் mp3 பாடல்கள்-1



கண்ணன் mp3 பாடல்கள்

பகுதி - 1


இனிமையான கண்ணன் பாடல்களை இப்பதிவில் காணலாம். தரவிறக்கிக் கேட்டு மகிழுங்கள்...


* கோகுலத்து பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலை : தரவிறக்க (Download)

* ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் : தரவிறக்க

* கோபியரே கோபியரே கொஞ்சும் இளம் வஞ்சியரே : தரவிறக்க

* கோகுலத்தில் ஒருநாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள் : தரவிறக்க

* கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை : தரவிறக்க

* குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை : தரவிறக்க

* அமரஜீவிதம் சுவாமி அமர வாசகம் பதித : தரவிறக்க

* புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் : தரவிறக்க


search tags : Kannan songs, Kannan mp3 songs, Devotional Songs, கண்ணன் பாடல்கள், தெய்வீக கானங்கள்

_*_*_*_

இராமாயணம்-3



இராமயணம்

பகுதி - 3

(முன்னைய பாகம் : செல்க)


வசிட்ட முனிவர், தசரதரே! உனக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும். சிறந்த மகப்பேறு கிடைக்கும். அங்க நாட்டில் மனுகுலத்தில் உத்தானபாதனுடைய புதல்வன் ரோமபாதன் என்னும் மன்னன் அரசு புரிகிறான். அந்த நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகளாக மழையில்லாமல் பஞ்சம் நேர்ந்தது. கலைக்கோட்டு முனிவரை அங்கு அழைத்து வந்தபடியால் மழை பொழிந்து வளம் பெருகியது. உன்னுடைய புதல்வியாகிய சாந்தையை உரோமபாத மன்னனுக்கு ஸ்வீகாரமாகக் கொடுத்தனையல்லவா? அப்பொழுது அந்தச் சாந்தையைக் கலைக்கோட்டு முனிவர் திருமணம் செய்து கொண்டார். அதனால், அவர் உனக்கு மருமகராவார். அவர் அளவற்ற தவம் செய்தவர். சமானமில்லாதவர். அவரை அழைத்துக் கொண்டு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்வாயானால் உனக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்று கூறினார்.

தசரதச் சக்கரவர்த்தி பரிஜனங்கள் புடை சூழ, தேரேறி அங்க நாட்டை அடைந்தார். உரோம பாதர் அன்புடன் வரவேற்று உபசரித்தான். கலைக்கோட்டு முனிவரை அயோத்திக்கு அனுப்புமாறு வேண்டிக் கொண்டான். தசரதருடைய வேண்டு கோளுக்கிணங்கி கலைக்கோட்டு முனிவர் என்கின்ற ரிஷ்யசிருங்கர் தன் மனைவியாகிய சாந்தையுடன் அயோத்தி மாநகருக்கு எழுந்தருளினார். தசரதர் ஓராண்டு அவருக்கு வந்தனை வழிபாடு செய்தார்.

அவர் ஒருநாள் ரிஷ்யசிருங்கரை வணங்கி தவ முனிவரே! அடியேன் அறுபதினாயிரம் ஆண்டு இவ்வுலகை ஆண்டேன். பிறிதொன்றை வேண்டேன். எனக்குப் பின் நல்ல தலைவன் இல்லையே என்று மக்கள் வருந்துவார்களே என்று நான் வருந்துகின்றேன். அதலால், இந்த உலகத்தை அறநெறியில் நிறுத்தி ஆட்சி புரியும் மாட்சியுடைய ஒரு புத்திரன் உண்டாக அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

தார்காத்த நறுங்குஞ்சித் தனயர்களென் றவமின்மை
வார்காத்த வனமுலையார் மணிவயிறு வாய்த்திலரால்
நீர்காத்த கடல்காத்த நிலங்காத்தே னென்னிற்பின்
பார்காத்தற் சூரியாரைப் பணிநீயென் றடிபணிந்தான்.

கலைக்கோட்டு முனிவர், புத்திராகாமேஷ்டி யாகம் செய்தால் உனக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று கூறினார். பின்னர் கலைக்கோட்டு முனிவர், நகர்ப்புறத்தே பெரிய யாகசாலை அமைத்து யாகத்துக்குரிய திரவியங்களைக் குவித்து வசிட்ட முனிவர் முதலிய தவசீலர்கள் துணைபுரிய வேதமந்திரங்களைக் கூறி மிகச் சிறந்த வேள்வியைச் செய்தார்.

பூர்ணாகுதி கொடுத்தவுடன் ஒரு தெய்வபூதம் யாகத்தில் தோன்றி யாக பாயசத்தை வழங்கி மறைந்தது. கலைக்கோட்டு முனிவரின் கட்டளைப்படி யாகபாயசத்தை ஒரு பாதி கௌசலைக்கும், மற்றொரு பாதி கைகேயிக்கும் மன்னர் வழங்கினார். கொடுத்து பழகிய கௌசலையும் கைகேயியும் தங்களுக்கு மன்னர் வழங்கிய பாயசத்தில் பாதி, பாதி சுமித்திரைக்கு வழங்கினார்கள். மன்னவரால் கொடுபடாமல் விடுபட்ட சுமித்திரைக்கு இரண்டு பங்கு கிடைத்தது. மூன்று தாய்மார்களும் கரு உற்றார்கள். பன்னிரண்டு மாதங்கள் கரு இருந்தார்கள்.

நாம் எல்லாருமே பன்னிரண்டு மாதம் கருவில் இருக்கின்றோம். அது எவ்வாறெனில் ஆன்மாக்கள் வானத்திலிருந்து மழை வழியாக மண்ணுலகத்தை அடைகின்றன. அவ்வாறு வந்த உயிர்கள் காய், கனி, தானியங்களில் கலந்து தந்தையார் வயிற்றில் 2 மாதங்கள் கரு இருந்த பின்னர், தாய் வயிற்றில் பத்துமாதம் கரு இருந்து மகவாகப் பிறக்கின்றன. ஆகவே உயிர்கள் கருவில் பன்னிரண்டு மாதங்கள் இருக்கின்றன. முதலில் நம்மை கருச்சுமந்தவர் தந்தையார். ஆதனால்தான் நம்முடைய பெயருக்கு முன்னால் தந்தையார் எழுத்தைப் பொறிக்கின்றோம்.

இராமருடைய கரு மன்னவனிடம் இருந்தில்லாமல் பாயாச வழியாகத் தாய்வயிற்றை அடைந்ததால் இவர்கள் 12 மாதம் கருச்சுமந்தார்கள்.


தொடரும் ...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 2


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

Related Posts Widget for Blogs by LinkWithin